தமிழ்நாட்டில் இலவச ஆட்சியா….?

அஇஅதிமுக தேர்தல் அறிக்கை இலவசங்களை அள்ளித் தெளித்துள்ளது. இதை விமர்சிக்கும் திமுகவினர் தமிழக அரசின் 2 லட்சம் கோடி கடனை அடைக்க என்ன வழி என்கின்றனர்.

திமுக மதுவிலக்கை அமல்படுத்தி, விவசாய கடனை தள்ளுபடி செய்து, மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்து, பால் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் குறைத்து, இந்த 2 லட்சம் கோடி கடனை எப்படி குறைப்போம் என்று சற்று விளக்கினால் நன்று.

தேர்தல் அறிக்கை என்பதை இலவச மயமாக அறிவித்து ஆட்சியைப் பிடிப்பது மட்டுமே இங்கு நடைமுறையாக உள்ளது.

நிதி நிலை, வருமானம், செலவினம், மக்களின் வரிச்சுமை, கடன் சுமை, விலைவாசி ஏற்றம் இவற்றை விளக்கி ஒரு மாறுபட்ட சீரான நிர்வாகம் தருவோம் என்று சொல்ல இந்த ஆண்டைகளால் இயலவில்லை .

அதை கேட்கும் அறிவும் திறனும் நல்ல எண்ணமும் பத்திரிகை மட்டும் ஊடகங்களுக்கும் இல்லை.

தான் செய்ய வேண்டிய கடமையை விடுத்து மக்கள் யாருக்கு ஓட்டு போடுவார்கள் என்று கட்சிக்கரனுக்கு உதவும் கருத்து திணிப்பில் காசு பார்க்கும் ஊடகங்கள்.

இங்கு பொருளாதார நிபுணர்களை கண்டெடுக்க அவர்களிடம் விவாதிக்க அறிவு இல்லா ஊடகங்கள்.

பாமர மக்களை யாருக்கு ஓட்டு என்று கேட்டு தங்களை அறிவு ஜீவியாக காட்டிக் கொள்கின்றனர்.

தமிழ், தமிழன், என பெருமை பேசும் ஊரில் ஒரே ஒரு பொருளாதார அறிஞர் கூட இல்லையா?

பட்ஜட் விவாதம் என்பதை , கடந்த 5 ஆண்டுகளில் தமிழக பட்ஜெட்டை அலசி ஆராய யாருமே இல்லையா?

அஇஅதிமுக தேர்தல் அறிக்கை செயல்படுத்தினால் அது பொருளாதார ரீதியாக சாத்தியமா?

திமுக அறிக்கை செயல்பட்டால் நிர்வாகம் கடனின்றி இயங்குமா என்று கருத்துப் பரிமாற தமிழ் நாட்டில் யாருமே இல்லையா?

அப்புறம் என்ன வீண் பெருமை? யாரோ ஒரு ஐஏஸ் அதிகாரி கையில் ஒப்படைத்து மேஸ்திரி வேலை பார்த்து கட்டிங் அடிக்கவா ஆட்சி?

(Kanniappan Elangovan)