தலைமன்னார் – இராமேஸ்வரத்துக்கு இடையில் கப்பல் சேவை

தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்கும் இடையிலான கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ள மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு, சபரி மலை யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொம்பனித்தெரு ஸ்ரீ ஹரி ஹர சுதன் ஐயப்ப யாத்திரைக் குழுவினருக்கும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே, மேற்கண்ட விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது என்றும் அமைச்சு, நேற்று (21) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய நுழைவுக்கட்டணம் (விசா) இன்றி இலவசமாகப் பயணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு, ஐயப்ப யாத்திரைக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

பௌத்த மக்கள் புத்தகயாவுக்கு புனித யாத்திரைப் பயணமாக செல்வதைப் போன்று, இஸ்லாமியர்கள் புனித மக்கா நகருக்குச் செல்வதைப் போன்று, சபரி மலைக்கு புனித யாத்திரை சென்று வருவதற்கு அங்கிகாரமும், இலகுவான வழிமுறைகளும் ஏற்படுத்தித் தருவதற்கு உதவி செய்யவேண்டும் என்றும் அந்தக் குழுவினர் கோரியுள்ளனர்.

ஐயப்ப யாத்திரைக் குழுவினர் விடுத்த கோரிக்கையின் நியாயத்தைப் புரிந்து கொள்வதாகவும், இந்திய நுழைவுக்கான (விசா) கட்டணம் அறவிடப்படாது இலவசமாக நுழைவு அனுமதி பெற்றுத்தரப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் விசேட அமைச்சரவைப் பத்திரமொன்றையும் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தலைமன்னாருக்கும், இராமேஸ்வரத்துக்குமிடையே கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஒரு வருடத்தில் சுமார் 15 ஆயிரம் யாத்திரர்கள், சபரி மலைக்கு புனித யாத்திரை செய்வதோடு, ஏனைய தென்னிந்திய புனிதத் தலங்களுக்கு, இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வதால் அவர்களின் பயணத்தை இலகுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ​டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாத்திரிகள், 100 கிலோகிராமுக்கும் அதிகமான பொதிகளை தம்மோடு எடுத்துச் செல்வதற்கும் இந்தக் கப்பல் சேவையில் வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தாரென, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனிதப் பயணத்தை மேற்கொள்வதற்காக முதலில் கப்பல் போக்குவரத்தை ஆரம்பித்தாலும், அத்துடன், சாதாரண பொதுமக்களும், வர்த்தகர்களும் இந்தியாவுக்கான தமது பயணத்தை இலகுவாகவும், குறைவான செலவுடனும் மேற்கொள்வதற்கு வசதியாக இந்தக் கப்பல் சேவை செயற்படுத்தப்படும் என்றும் அவ்வாறு கப்பல் சேவை நிரந்தரமாக முன்னெடுக்கப்படும்போது, இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருக்கும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இலங்கை மக்கள் தமது உடமைகளுடன், பொதிகள் தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு முகங்கொடுக்காமல் இலகுவாக தாயகம் திரும்புவதற்குமான வாய்ப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.