நாடு திரும்ப விரும்பும் அகதிகளுக்கு 4 வாரங்களுள் கடவுச்சீட்டு

இந்தியாவிலிருந்து நாடு திரும்பவிருக்கின்ற அகதிகளுக்கு, இரண்டு வார காலத்திலிருந்து நான்கு வாரங்களுக்குள் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை தெரிவித்தார்.

பிரதமரிடம் கேள்விகளைக் கேட்கும் நேரத்தில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தொடுத்த கேள்விக்குப் பதிலளிக்கும்போதே, பிரதமர் ரணில், மேற்கண்டவாறு பதிலளித்தார். பிரதமர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், ‘குழப்பங்கள் காரணமாக இந்தியாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் சென்றிருப்போரை, நாட்டுக்குள் அழைத்துவருவதே, அரசாங்கத்தின் கொள்கையாகும். அவ்வாறு வருவோருக்குப் பிரஜாவுரிமை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

‘சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று பிரச்சினைகள் இல்லை. இலங்கைக்குத் திரும்புவோருக்கு, பிரஜாவுரிமை வழங்கப்படும். இன்னும்சிலர், இரட்டைப் பிரஜாவுரிமையைக் கோரியிருக்கின்றனர்.

‘பிள்ளைகளுக்கான பிறப்புச் சான்றிதழ், திருமணப் பதிவுச் சான்றிதழ் விவகாரங்களைக் கையாள்வதற்கு, இந்தியாவிலுள்ள இலங்கையின் துணைத் தூதுவர், உதவிப் பதிவாளராகச் செயற்படுகிறார்’ என்றார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த பிரதமர், ’22 வயதுக்குக் குறைந்த வயதுடையவர்களைப் பதிவதற்கு, 2003ஆம் ஆண்டு முதல், அடிப்படைக் கட்டணம் அறவிடப்படவில்லை. அத்துடன், நாட்டுக்குத் திரும்ப விரும்புபவர்களுக்கு, இரண்டு – நான்கு வாரங்களுக்கும் இடைப்பட்ட காலத்துக்குள் கடவுச்சீட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.