‘நான் விலகுகின்றேன்’ மாவைக்கு சி.வி கடிதம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து தான் விலகுவதாக, வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன், கட்சித் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். தாம் விலகுவதாக விக்கினேஸ்வரன் கட்சிக்கு அறிவித்துள்ள நிலையிலும் புதிய கட்சியை ஆரம்பித்திருப்பதாலும் அவர் தாமாகவே கட்சியிலிருந்து விலகியதாகவே கருதப்படுவார் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நீதியரசாராக இருந்த விக்கினேஸ்வரன், கடந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராகக் கொண்டுவரப்பட்டிருந்தார். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அனைத்தும் இணைந்து கொண்டு வந்து தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மாகாணசபையின் ஐந்து வருட ஆட்சிக் காலத்தின் இடையில் விக்கினேஸ்வரனுக்கும் கூட்டமைப்புக்கும் குறிப்பாக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்குமிடையே முரண்பாடுகள் வலுவடைந்ததன.

இந்நிலையில், மாகாண சபையின் காலம் முடிவடைவதற்கு முன்னர் “தமிழ் மக்கள் கூட்டணி” என்ற புதிய கட்சியொன்றையும் ஆரம்பிக்கவுள்ளதாக விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

ஆனால், அந்தக் கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக அறிவிப்பதற்கு முன்னதாக தான் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆகியோருக்கு விக்கினேஸ்வரன் கடிதமொன்றையும் அனுப்பி வைத்திருக்கின்றார்.

அக்கடிதத்தில் தன்னை அரசியலுக்குக் கொண்டு வந்தமைக்கு நன்றி தெரிவித்திருக்கும் விக்கினேஸ்வரன், தன்னை கட்சி உறுப்பினராகப் பார்க்காது தனக்கு எதிரான செயற்பாடுகளையே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். ஆகையால் தான் அக்கட்சியில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகிக்கொள்வதாகவும் அறிவித்திருக்கின்றார்..

இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் கேட்ட போது, மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பிலே விக்கினேஸ்வரன் போட்டியிட்டிருந்தார். அவர் தற்போது கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்றார்.

ஆனால், அவர் அண்மையில் ஒரு புதிய கட்சியொன்றையும் ஆரம்பித்திருந்தார். அவ்வாறு கட்சி ஆரம்பித்ததனூடாக அவர் தாமாகவே கட்சியிலிருந்து விலகியதாக கருதப்படுவார். அவ்வாறு புதிய கட்சியை ஆரம்பித்த விக்கினேஸ்வரன் மீதோ அல்லது அவருடைய செயற்பாடுகள் மீது எந்தவித ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

ஆகவே, அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து புதிய கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் அவர் தாமாகவே கட்சியிலிருந்து விலக்கப்படுகின்றதாகவும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.