நீரில் மூழ்கித் தப்பிய யாழ்.மாணவி மரணம்

யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்பரப்பில், கடந்த 24ஆம் திகதியன்று இடம்பெற்ற விபத்தில் நீரில் மூழ்கிக் காப்பாற்றப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவியொருவர் உயிரிழந்தார். யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மூன்றாம் வருட மாணவியான சகாயதாசன் டயானா (வயது 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இவர்,மண்பிட்டி நாவாந்துறையைச் சேர்ந்தவராவார் நாவாந்துறையைச் சேர்ந்தவர்கள் குருசடித்தீவு அந்தோனியார் ஆலயத்துக்கு சென்றபோதே இந்த விபத்து நடந்தது. ஒரு படகில் 6 பேர் பயணித்துள்ளனர். இதன்போதே, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்று விசாரணைகளிலிருந்து தெரியவருந்துள்ளது.

இதனையடுத்து, அங்கிருந்தவர்களால் ஐவர், உடனடியாக காப்பாற்றப்பட்டனர். ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
காப்பாற்றப்பட்டவர்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒன்றரை வயதுக் குழந்தையும் பெண்ணொருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். அவ்வாறு சிகிச்சைபெற்று வந்த நிலையிலேயே இந்த மாணவி உயிரிழந்துள்ளார்.