பிள்ளையான் விடுதலை

இந்த வழக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் இன்று (13) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் “பிரதீப் மாஸ்டர்” எனும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, “கஜன் மாமா” எனும் கனகநாயகம், இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் எம்.கலீல் மற்றும் முன்னாள் இராணுவ வீரரான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், 2015ஆம் ஆண்டு தாங்கள் கைதுசெய்யப்பட்டு, குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்ட 1ஆம் மற்றும் 02ஆம் எதிரிகளின் வாக்குமூலமானது சுயேட்சையாக வழங்கப்படவில்லை, தூண்டுதல் அல்லது அச்சுறுத்தல் காரணமாக அந்த வாக்குமூலத்தை வழங்கியிருந்தார்கள், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நேரடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் வழங்கியிருந்ததாக தெரிவித்து, மேன்முறையீட்டு நீதிமன்றில் மீளாய்வு விண்ணப்பித்தனர்.

இதன்பிரகாரம், குறித்த ஒப்புதல் வாக்குமூலத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தன் அடிப்படையில், கடந்தாண்டு நவம்வர் 24ஆம் திகதி, மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் ஒப்புதலின் பேரில் பிணை வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை, கடந்த திங்கட்கிழமை (11) சட்டமா அதிபர் திணைக்களம் இந்த வழக்கினை தொடர்ந்து நடத்தமுடியாது என மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு அறிவித்திருந்த நிலையில், வழக்கின் குற்றச்சாட்டுகளில் இருந்து இன்று அவர்களை விடுவித்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.