புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்…

புத்தளம் நகர சபை, புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா, புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ மஸ்ஜித், புத்தளம் இஸ்லாமிய அமைப்புகளின் சம்மேளனம், புத்தளம் வாலிபர் ஒன்றியம், புத்தளம் மாணவர் அமைப்பு என்பன கூட்டாக இணைந்து இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியது..

புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ மஸ்ஜிதுக்கு முன்பாக ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்கார்கள் “வேண்டாம் வேண்டாம் ஐ.எஸ். வேண்டாம்”, “ஒழிக ஒழிக ஐ.எஸ். ஒழிக” என்ற கோஷத்தோடு, புத்தளம் கொழும்பு முகத்திடலை அடைந்து அங்கு எதிர்ப்பு பொதுக்கூட்டத்தை நடத்தினர்..

புத்தளம், அதனை அண்மித்த கிராமங்களின் பள்ளிவாசல் சம்மேளனங்கள், பொதுமக்கள், அரபுக்கல்லூரிகளின் மாணவர்கள், வடபுல முஸ்லிம் சமூகத்தினர் என பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

புத்தளம் பொலிஸார் மற்றும் முப்படையினர், இந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு பாதுகாப்பினை வழங்கி இருந்தனர்.

கொழும்பு முகத்திடலில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் புத்தளம் நகர சபை சார்பாக அதன் தலைவர் கே.ஏ.பாயிஸ், புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சார்பாக அதன் தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், புத்தளம் இஸ்லாமிய அமைப்புகளின் சம்மேளனம் சார்பாக எச்.அஜ்மல், புத்தளம் வாலிபர் ஒன்றியம் சார்பாக இப்ளால் அமீன், புத்தளம் மாணவர் அமைப்பின் சார்பாக அதன் தலைவர் என்.நஸ்ரக், வடபுல மக்களின் சார்பாக அஷ்ஷெய்க் அப்துல் மலிக் ஆகியோர் அங்கு உரையாற்றினர்.

புத்தளம் நகரபிதா கே.ஏ.பாயிஸ், புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், புத்தளம் பெரிய பள்ளி தலைவர் பீ.எம். அப்துல் ஜனாப் ஆகியோரால் கையொப்பமிடப்பட்ட ஆறு அம்சங்களை உள்ளடக்கிய பயங்கரவாதத்துக்கு எதிரான புத்தளம் முஸ்லீம் மக்களின் பிரகடனமும் இங்கு வெளியிடப்பட்டது.