மட்டக்களப்பிலிருந்து காலிவரை

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கென, பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைய, மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, தங்களது முதல் தொகுதி நிவாரணப் பொருட்களை, மட்டக்களப்பு சிவில் சமூகத் தலைவர் மாமாங்க ராஜாவிடம் செவ்வாய்க்கிழமை மாலை கையளித்தனர்.

காலி மாவட்ட மக்களுக்கு வழங்குவதற்கென, குறித்த நிவாரணப் பொருட்கள் கையளிக்கப்பட்டதுடன், இப்பொருட்களைக் கையளிக்கும் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உட்பட மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பிரதம கணக்காளர், மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவக கல்வி இணைப்பாளர் மற்றும் அதிகாரிகளும் சமுகமளித்திருந்தனர்.

பெண்கள், சிறுவர்களுக்கான பொருட்கள் மற்றும் அரிசி அடங்கலான சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களே, இதன்போது கையளிக்கப்பட்டன.

காலி மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களைச் சேகரிப்பதற்கான நிலையம், மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது.

பொது மக்களும் அமைப்புகளும், அந்நிலையத்தில், தங்களது நிவாரணப்பொருட்களைக் கையளிக்க முடியுமென்று தெரிவித்த மட்டக்களப்பு அரசாங்க அதிபர், நாளை வெள்ளிக்கிழமை காலை வரை சேகரிக்கப்படும் நிவாரணப் பொருட்கள், காலி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் கொண்டுசெல்லப்பட்டு, நேரடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இதற்காக, மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, மட்டக்களப்பு மாநகரசபை ஆகியன இணைந்ததான குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், நிவாரணங்களை வழங்குபவர்கள், கலாநிதி எம்.வர்ணகுலசிங்கம் – 0772681366, வி.பிரதீபன் – 0776109222, எஸ்.மாமாங்கராஜா – 0772662725 ஆகியோரைத் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.