மஹிந்த புதிய கட்சி ஆரம்பிக்கட்டும்! நான் வேலையை காட்டுகிறேன்!

மஹிந்த ராஜபக்ச புதிய கட்சியை ஆரம்பிக்கட்டும், வேலையை நான் காட்டுகின்றேன். அவர் பாற்சோறு சமைக்கட்டும், காரமான உறைப்பை நான் வழங்குகின்றேன். இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் உதயமாகவிருக்கும் புதிய கட்சி தொடர்பில் செயற்குழுவிலுள்ள மஹிந்த ஆதரவு உறுப்பினர்களுக்கும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்கும் இடையில் பெரும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்வாறு தெரிவித்ததாக மத்திய செயற்குழுவிலுள்ள உறுப்பினர் ஒருவர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தார்.

இதேவேளை மத்திய செயற்குழுவின் கருத்துக்கு எதிர்முரணான கருத்தை குமார வெல்கம எம்.பி தெரிவித்திருக்கிறார் மஹிந்த ராஜபக்சவினதும், அவரவருக்கு இருக்கும் பலத்தையும் வைத்தே மக்கள் விருப்பு வாக்குகளை அளித்திருப்பதாக குமார வெல்கம எம்.பி இதன்போது கூறியிருக்கிறார். எனினும் மத்திய செயற்குழுவிலுள்ள ஏனைய உறுப்பினர்கள் இவரது கருத்திற்கு பதிலடி கொடுத்துள்ளனர். தனிநபருக்காக எந்த வாக்காளரும் வாக்களிக்கவில்லை என்றும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கே அனைவரும் வாக்களித்திருப்பதாகவும் ஆணித்தரமாக அவர்கள் கூறியிருப்பதாக அறியமுடிகிறது.