யாழ். பல்கலையில் மாணவர்கள் தாடி வளர்க்கத் தடை

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு, நாளை 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக கலைப்பீடாதிபதி பேராசிரியர் நா.ஞானகுமரன், நேற்று புதன்கிழமை (24) அறிவித்துள்ளார்.

‘யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையினால், புதிய ஆடை ஒழுங்கு விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆண் கல்விசார் ஊழியர்கள் மற்றும் ஆண் மாணவர்கள், விரிவுரை மண்டபங்களுக்கு டெனிம் ஜீன்ஸ் மற்றும் டீ-ஷேர்ட் அணிந்து வருவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், விரிவுரைகளுக்குத் தாடியுடன் வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

பெண் மாணவர்கள் மற்றும் பெண் கல்விசார் ஊழியர்கள், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சேலை அணிந்து விரிவுரைகளுக்கு வரவேண்டும். இந்த நியதிகளை மீறுபவர்கள், எக்காரணம் கொண்டும் விரிவுரைகளுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்’ என கலைப்பீடாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.