ரூ.67 கோடிக்கு என்னய்யா நடந்தது?

’67 கோடியே 44 இலட்சம் ரூபாய்க்கு வடமாகாணத்தில் என்ன நடந்தது என தெரியவில்லை’ என வடமாகாண எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா, கணக்காய்வு திணைக்கள அறிக்கையை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போதே வடமாகாண எதிர்க் கட்சி தலைவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘வடமாகாணத்தின் ஐந்து அமைச்சின் கீழ் உள்ள 28 திணைக்களங்களில் 67 கோடியே 44 இலட்சத்து 35 ஆயிரத்து 63 ரூபாய் பணம் தொடர்பில் கொடுக்கல், வாங்கலுக்கான உரிய ஆவணங்கள் எவையும் இல்லை என கணக்காய்வு திணைக்களம் கண்டறிந்துள்ளது.

2014ஆம் ஆண்டுக்குரிய கணக்காய்வு திணைக்கள அறிகையிலேயே இந்த விடயம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதேவேளை, 2014ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 784 மில்லியன் ரூபாய் உரிய நோக்கத்துக்கு பயன்படுத்தப்படவில்லை என்பதனையும் கணக்காய்வு திணைக்களம் சுட்டிக்காட்டி உள்ளது.

அதேபோன்று 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை இயங்கும் வடமாகாண சபையின் திணைக்களங்கள், அமைச்சு, அமைச்சின் அலுவலகங்கள், என்பன தனியார் வீடுகள் மற்றும் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. அவற்றில் 28 கட்டடங்கள் உரிய ஒழுங்கு முறைகள் பின்பற்றப் பட்டு பெற்றுக் கொள்ளப்படவில்லை எனவும் கணக்காய்வு திணைக்களம் அடையாளப்படுத்தி உள்ளது.

இவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி பல தடவைகள் நான் சபை அமர்வில் பேசிய போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதெல்லாம் அவ்வாறு இல்லை என என்னுடன் எதிர்த்து வாதிட்டீர்கள். ஆனால், தற்போது கணக்காய்வு திணைக்கள அறிக்கை சகலதையும் வெளிப்படுத்தி உள்ளது’ என தவராசா மேலும் கூறினார்.