வடமாகாண சபையில் விவசாய அமைச்சருக்கு எதிராக பிரேரணை

வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசனுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து மாகாண சபையில் பிரேரணை கொண்டு வரப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் இடம்பெற்றது. இந்த அமர்வின் போது, இரணைமடு நீர்பாசனத் திட்டம் தொடர்பிலான செயற்பாடுகள், பாதீனிய ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகள், பளைப் பிரதேசத்தில் நிறுவப்பட்ட காற்றாலை தொடர்பிலான விடயம், சுன்னாக நிலத்தடி நீர் தொடர்பிலான செயற்பாடுகள், மருதங்கேணி கடல்நீரை நன்னீர் ஆக்கும் செயற்பாடு, கார்த்திகை மர நடுகை, அனர்த்த நிவாரண விநியோகம், உழவர் திருநாள், மலர்க்கண்காட்சி, விவசாய தினம், மண் தினம், போன்றவை தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களுக்கு உரிய முறையில் அறிவிக்காமல் நடாத்தியமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, இந்த விழாவுக்கான செலவீனங்களை வெளிப்படுத்தாமை, கூட்டுறவுத் துறையில் உள்ள முறைகேடுகளை சீராக்காமை, விவசாயத் துறையில் பல செயற்திட்டங்களை முன்னெடுக்காமை, சிறு குளங்களை புனரமைக்க மத்திய அமைச்சு அழைத்த போது அதனை நிராகரித்தமை, மூங்கில், மல்லிகை போன்றவற்றை வவுனியா மாவட்டத்தில் நாட்ட அனுமதிக்காமை மற்றும் வவுனியா மாவட்டம் தொடர்ந்தும் விவசாய அமைச்சினால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை, போன்ற பல்வேறு முறைகேடுகளில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஈடுபட்டதாக மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் பிரேரணை ஒன்றினை மாகாண சபையில் முன் மொழிந்தார்.

அத்துடன் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விவசாய அமைச்சர் மீது விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி பிரேரணையை சமர்ப்பித்தார். குறித்த பிரேரணை மாகாண சபை உறுப்பினர்கள் எவரது எதிர்ப்பும் இன்றி, சபையில் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதேவேளை, இந்தப் பிரேரணை சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டதும், உறுப்பினர்கள் சிலரும் விவசாய அமைச்சருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.