‘வட-கிழக்கு இணைப்பு தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்த ​​வேண்டும்’

“வட-கிழக்கு இணைப்பினை உறுதிப்படுத்த குரல் எழுப்பும் தரப்பினர், முதலில் முஸ்லிம் மக்களுக்கு ஏன் அது முக்கியமானதென்பதை தெளிவுபடுத்த வேண்டும்” என காத்தான்குடி முஸ்லிம் போரம் தெரிவித்துள்ளது. வடக்குக்கு பயணமொன்றை மேற்கொண்டிருந்த காத்தான்குடி முஸ்லிம் போரத்தின் பிரதிநிதிகள், யாழ். ஊடக அமையத்தில் வடக்கு ஊடகவியலாளர்களை சந்தித்து, நேற்று கலந்துரையாடினார்.

அதன்போது, “வடக்கு – கிழக்கை இணைப்பது தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம் சந்தேகமும் அச்சமும் உள்ளது. வட, கிழக்கு இணைந்தால் தாம் சிறுபான்மையாகிவிடுவோமென்ற சந்தேகமும் அவர்களிடம் இருகக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கிழக்கிலுள்ள முஸ்லிம் சிவில் சமூகத்திடம், தமிழ் தரப்பினால் முஸ்லிம்களுக்குத் தீர்வாக, எதை வழங்க முடியுமென்பதை தெளிவுபடுத்த வேண்டும். சிவில் சமூகத்தை தெளிவுபடுத்தினால் மட்டுமே முஸ்லிம் மக்களது சந்தேகத்தை நீக்கமுடியும்.

ஆனால், அது தொடர்பில் கூட்டமைப்போ அதன் தலைமையோ நடவடிக்கை எடுக்காது, வெறுமனே பத்திரிகை அறிக்கைகளை விடுத்துக்கொண்டிருக்கின்றது” என்றனர்.

மேலும், “தமிழ் மக்கள் பேரவை கூட, எழுக தமிழுக்கு ஆட்சேர்க்கத்தான் கூட்டங்களை நடத்துகின்றது. தமிழ் மக்கள் பேரவையிடம் கூட, முஸ்லிம் சிவில் சமூகத்துக்கு வழங்கக் கூடிய பதில், நம்பிக்கை தரக்கூடியதாக இல்லை.

வடக்கு, கிழக்கில் தமிழ் – முஸ்லிம் மக்கள், ‘புட்டுக்கு தேங்காய்பூ’ போலவே வாழ்கின்றனர். வடக்குடன் ஒப்பிடுகையில், கிழக்கில் நம்பிக்கையீனம் அதிகமாகவுள்ளது. அதனை போக்கினால் மட்டுமே, வடக்கு – கிழக்கு இணைப்பு பற்றி, கிழக்கில் ஆதரவை பெறலாம்” என அவர்கள் குறிப்பிட்டனர்.

யாழ். ஊடக அமையத்தினில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து, வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம், வடமாகாண முதலமைச்சர் உள்ளிட்டவர்களை, காத்தான்குடி முஸ்லிம் போரத்தின் பிரதிநிதிகள் சந்தித்தனர்.