வித்தியா படுகொலை வழக்கு: முழு விவரம்

  • 30 வருட கடூழியச் சிறை
  • வித்தியா குடும்பத்துக்கு
    ரூ. 7 மில்லியன் நட்டஈடு
  • 2 பேருக்கு தலா ரூ.70 ஆயிரம் தண்டம்
  • 5 பேருக்கு தலா ரூ.40 ஆயிரம் தண்டம்
  • ஒருவர் விடுவிப்பு
  • குற்றவாளிகள் குடும்பத்தினர் ஓலம்
  • விஜயகலா மகேஸ்வரனுக்கு விமர்சனம்

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த, புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தவர்களில் ஏழுபேரைக் குற்றவாளிகளாக இனங்கண்ட யாழ்.மேல் நீதிமன்றம், அவர்களுக்கு, நேற்று (27) மரண தண்டனைத் தீர்ப்பளித்துள்ளது. மரண தண்டனையோடு, 30 ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 4ஆம் 8ஆம் 9ஆம் எதிரிகளுக்கு தலா 70 ஆயிரம் ரூபாயும், ஏனைய நால்வருக்கும் தலா 40 ஆயிரம் ரூபாயும் தண்டம் விதித்துள்ளது.

இதேவேளை, வித்தியாவின் குடும்பத்துக்கு தலா 10 இலட்சம் ரூபாய் பிரகாரம், 7 மில்லியன் ரூபாய் நட்டஈடும் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிமன்றம், தவறும் பட்சத்தில், கடூழிய சிறைத்தண்டனை நீடிக்கப்படும் என்றும் உத்தரவிட்டது.

இந்த வழக்கின், 1ஆம் மற்றும் 7ஆம் எதிரிகளின் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றஞ்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையால், அவ்விருவரும் வழக்கிலிருந்தே விடுவிக்கப்பட்டனர்.

(1ஆம் எதிரியான பூபாலசிங்கம் இந்திரகுமார், நிரபராதியென, மன்றால் விடுவிக்கப்பட்ட போதும் இந்த வழக்கில் தம்மைக் கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தரை வெளியில் வந்து வெட்டுவேன் என மிரட்டியமை தொடர்பிலான வழக்கு, விசாரணை ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் இவர் விளக்கமறியல் கைதியாக உள்ளதால், அவர் தொடர்ந்து சிறையிலையே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கொலை மிரட்டல் தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் 3ஆம் திகதி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது)

இந்த வழக்கில், 2ஆம், 3ஆம், 5ஆம் மற்றும் 6ஆம் எதிரிகளான பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன் ஆகியோர், கூட்டு வன்புணர்வு, கொலை ஆகிய குற்றச்சாட்டுகளில், குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம், 8ஆம் மற்றும் 9ஆம் எதிரிகளான பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசீந்திரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன், ஜெயதரன் கோகிலன், மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோர் குற்றமொன்றை மேற்கொள்வதற்கான சதித்திட்டத்தை மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, ‘ட்ரயல் அட் பார்’ முறையில், யாழ். மேல் நீதிமன்றத்தில், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில், யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியான மாணிக்கவாசகம் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னி​லையில் இடம்பெற்றது.

வழக்கின் தீர்ப்பு நேற்று (27) வழங்கப்பட்டமையால், நீதிமன்ற வளாகத்திலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

எதிரிகள், கடும் பாதுகாப்புக்கு மத்தியில், சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றப்பட்டு,அழைத்துவரப்பட்டனர். நீதிமன்றத்துக்குள் சென்ற அனைவரும் கடும் உடற்சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா, கடந்த 2015.05.13ஆம் திகதி காலை 7 மணியளவில் வீட்டிலிருந்து பாடசாலைக்கு சென்ற வேளை கடத்தப்பட்டு, வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் இலங்கை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது நாடளாவிய ரீதியில் மாணவிக்கு நீதி கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மாணவியின் தாயாரை ஜனாதிபதி சந்தித்து, சிறப்பு நீதிமன்றம் ஊடாக நீதி பெற்று தரப்படும் என உறுதியளித்திருந்தார்.

அந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக வழக்கு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று, கடந்த 2017.05.29ஆம் திகதி முதல் நீதாய (ட்ரயல் அட் பார்) விளக்க முறையில் யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது.

குறித்த வழக்கின் விசாரணைகள் அனைத்தும் பூர்த்தியடைந்த கடந்த 13ஆம் திகதி எதிரிகள் தரப்பு தொகுப்புரைகளுடன் நிறைவடைந்ததை அடுத்து, நேற்றைய தினம் வழக்கின் தீர்ப்புக்காக தீர்ப்பாயம் கூடியது.

வழக்கு தொடுநர் தரப்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த், மற்றும் சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் ஆகியோர் மன்றில் தோன்றினர்.

எதிரிகள் தரப்பில் 1ஆம் 2ஆம் 3ஆம் 6ஆம் மற்றும் 8ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன , 5ஆம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி, 4ஆம் 7ஆம் 9ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் மற்றும் ஒன்று தொடக்கம் 9 வரையிலான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தா ஆகியோர் மன்றில் தோன்றினார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியங்கள் நலன் காக்கும் பொருட்டு, சட்டத்தரணிகளான வி.மணிவண்ணன் மற்றும் ரஞ்சித்குமார் ஆகியோர் மன்றில் தோன்றினார்கள்.

எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்

எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம், ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார் , மகாலிங்கம் சசிதரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்த், பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன், மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து தீர்ப்பாயத்தின் தலைமை நீதிபதி, காலை 10 மணிக்கு தீர்ப்பை வாசித்தார். 132 பக்ககளில் தீர்ப்பு எழுதப்பட்டு இருந்தது.

தலைமை நீதிபதியின் தீர்ப்பு

“குறித்த வழக்கில் ஒன்பது எதிரிகளுக்கும் எதிராக, சதித்திட்டம் தீட்டியமை, கடத்தல், வன்புணர்வு, கொலை, உடந்தை உள்ளிட்ட 41 குற்றசாட்டுகள் வழக்கு தொடுநர் தரப்பால் சுமத்தப்பட்டன.

அத்துடன், எதிரிகளுக்கு எதிராக 53 சாட்சியங்களை வழக்கில் இணைத்து இருந்ததுடன் 01 தொடக்கம் 27 வரையிலான சான்றுப் பொருட்களும் முன் வைக்கப்பட்டன.

இந்த வழக்கின் 2ஆம் 3ஆம் 5ஆம் மற்றும் 6ஆம் எதிரிகளுக்கு எதிராக, கண்கண்ட சாட்சியங்களான உதயசூரியன் சுரேஷ்கரன் மற்றும் மாப்பிள்ளை என அழைக்கப்படும் நடராஜா புவனேஸ்வரன் ஆகியோர் சாட்சியம் அழைத்துள்ளனர்.

அவர்களின் சாட்சியங்களைத் தவிர, 2ஆம் எதிரியை சம்பவ தினத்தன்று சம்பவ இடத்துக்கு அருகில் கண்டதாக பாடசாலை மாணவனான ஒன்பதாவது சாட்சியான மணிவண்ணன் தனுராம் சாட்சியம் அளித்துள்ளார். அத்துடன், அதே இடத்தில் 2ஆம் 3ஆம் எதிரிகளை கண்டதாக நாலாவது சாட்சியமான பாலசிங்கம் பாலசந்திரன் சாட்சியம் அளித்துள்ளார். இவர் 2ஆம் எதிரியின் மைத்துனன். இவரின் கூட பிறந்த தங்கை தான் எதிரியின் மனைவி. அத்துடன் 15ஆவது சாட்சியமான சதானந்தரூபிணி சம்பவ தினத்தன்று சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அருகில் 5ஆம் எதிரியை கண்டதாக சாட்சியம் அளித்துள்ளார். இந்த சாட்சியங்களை ஒப்பிடு செய்யும் போது அவற்றில் முரண்பாடுகள் காணப்படவில்லை.

அதேவேளை வழக்கின் 4ஆம் , 8ஆம் மற்றும் 9ஆம் எதிரிகள் சம்பவ தினத்துக்கு முதல் நாள் 12ஆம் திகதி புங்குடுதீவின் ஆலடி சந்தி பகுதியில் வாகனத்தில் இருந்ததாக 7ஆவது சாட்சியான ஞானேஸ்வரன் இலங்கேஸ்வரன் சாட்சியம் அளித்துள்ளார். இவரின் சாட்சியத்தை ஒப்பீடு செய்யும் விதத்தில் மாணவியின் தாயார் வழங்கிய சாட்சியத்தில் மாணவி அன்றைய தினம் (12ஆம் திகதி) ஆலடி சந்தியில் வாகனம் ஒன்றில் இருந்து தன்னைச் சிலர் பார்த்ததாகக் கூறியதாக சாட்சியம் அளித்துள்ளார்.

4ஆம் 8ஆம் 9ஆம் எதிரிகள் இந்த மன்றில் 12ஆம் திகதி கொழும்பில் நின்றதாக கூறினார்கள். ஆனாலும் சாட்சியங்களை முன் வைக்கவில்லை. ஆனால், சம்பவ தினத்தன்று, 13ஆம் திகதி கொழும்பில் நின்றமைக்கான சாட்சியங்கள் சான்றுகளை மன்றில் முன் வைத்தனர்.

எனவே, இந்த வழக்கில் கூட்டு வன்புணர்வு, கொலை, கடத்தல், சதித்திட்டம் தீட்டியமை, உடந்தை அளித்தமை உள்ளிட குற்றச்சாட்டுக்களில் 2ஆம் 3ஆம் 4ஆம் 5ஆம் 6ஆம் 7ஆம் மற்றும் 9ஆம் எதிரிகளை குற்றவாளியாக தீர்ப்பளிக்கிறேன்” என தீர்ப்பளித்தார்.

குறித்த தீர்ப்பை 2 மணி நேரமாக நீதிபதி தொடர்ந்து வாசித்து. மதியம் 12 மணிக்கு தனது தீர்ப்பை அறிவித்தார்.

அதனை அடுத்து தீர்ப்பாயத்தின் நீதிபதிகளில் ஒருவரான அன்னலிங்கம் பிரேமசங்கர் , சகோதர நீதிபதியான பாலேந்திரன் சசிமகேந்திரன் அளித்த தீர்ப்புடன் ஒத்துபோவதாகவும் அதே தனது தீர்ப்பு என, அறிவித்தார்.

நீதிபதி மா.இளஞ்செளியனின் தீர்ப்பு

அதனைத் தொடர்ந்து, தீர்ப்பாய நீதிபதிகளில் ஒருவரான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், தனது தீர்ப்பை மதியம் 12.05 நிமிடத்துக்கு வாசிக்க ஆரம்பித்தார். அவர் 345 பக்கத்தில் தீர்ப்பெழுதி இருந்தார்.

தனது தீர்ப்பில் , சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தீர்ப்புகள், ஐ.நா நீதிமன்றத் தீர்ப்புகள் , மனித உரிமை தீர்ப்புகள், உகண்டா தீர்ப்பு, யுத்தக் குற்ற தீர்ப்புகள், இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் என்பவற்றைச் சுட்டிக்காட்டியும் இலங்கையில், கிருஷாந்தி, சரத் அம்பேபிட்டிய, பண்டாரநாயக்க உள்ளிட்ட ட்ரயல் அட் பார் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி தீர்ப்பெழுதி இருந்தார்.

2ஆம், 3 ஆம், 5 ஆம், மற்றும் 6ஆம் எதிரிகளுக்கு எதிராக கண்கண்ட சாட்சியங்கள் உள்ளான. அத்துடன், மரபணு பரிசோதனை அறிக்கையில் மாணவியின் உடலில் இருந்து மீட்கப்பட்ட தலைமுடியானது, மாணவியின் உடையது அல்லது தாயினுடையது அல்லது 1, 2 மற்றும் 3 ஆம் எதிரிகள் தாய் வழி உறவுள்ளவர்களினதாக இருக்க வேண்டும் என, 53ஆவது சாட்சியமான ஜின்டெக் நிறுவனத்தின் சிரேஷ்ட விஞ்ஞானி ருவான் இளையபெரும சாட்சியம் அளித்துள்ளார்.

மாணவியின் உரோமம் அவரின் உடலில் உதிர்ந்த நிலையில் இருக்க சந்தர்ப்பம் குறைவு, தாயின் உரோமம் அந்த இடத்தில் வந்திருக்க முடியாது. எனவே அது 2ஆம் 3ஆம் எதிரிகளினுடையதாக தான் இருக்க வேண்டும். ஏனெனில், கண்கண்ட சாட்சியங்களின் சாட்சியத்தின் பிரகாரம் முதலில் பெரியாம்பி எனும் 6ஆம் எதிரி வன்புணர்ந்தார், பின்னர் 5ஆவதும் 2 மற்றும் 3ஆம் எதிரிகள் தொடர்ச்சியாக வன்புணர்ந்தனர் என, சாட்சியம் அளித்துள்ளனர்.

அவ்வாறெனின், இறுதியாக வன்புணர்ந்த எதிரிகளின் உரோமம் மாணவியின் உடலில் காணப்பட்டு இருக்கலாம்.

அடுத்து 4, 8, மற்றும் 9ஆம் எதிரிகள், 12ஆம் திகதி ஆலடி சந்தியில் 5, மற்றும் 6ஆம் எதிரிகளுடன் வெள்ளை நிற வாகனத்தில் இருந்துள்ளனர். அதன் பின்னர் சுவிஸ்குமார் தலைமையில் 4, 8 ஆம் எதிரிகள் கொழும்புக்குச் சென்றுள்ளனர்.

பின்னர் அந்த குழு சம்பவ தினமான 13ஆம் திகதி CCTV கமெரா உள்ள இடங்களில் நடமாடி உள்ளனர். அது அவர்களின் சதித்திட்டம். தாம் குற்றம் நடந்த சமயம் கொழும்பில் நின்றமைக்கான சாட்சியங்களை உருவாக்கியுள்ளனர்.

ஆனால், 12 திகதி கொழும்பில் நின்றமைக்கான எந்த ஆதாரத்தையும் சாட்சியத்தையும் மன்றில் முற்படுத்த வில்லை. 12ஆம்ய திகதி கொழும்பில் நின்றதற்கான எந்த CCTV காட்சிகளையும் மன்றில் சமர்ப்பிக்க வில்லை.

கொழும்பில் நின்ற சுவிஸ்குமார் தலைமையில் 4, 7 மற்றும் 8ஆம் சந்தேகநபர்கள் புங்குடுதீவு வருகின்றார்கள். அவர்கள் அனைவரும் சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சியம் அளிக்கையில் தங்களுக்கு வித்தியாவை யார் என்று தெரியாது , என்ன நிறம் என்று தெரியாது ,Who is Viththiya ? என கேட்டார்கள்.

யாரென்றே தெரியாத வித்தியாவின் மரண சடங்கில் கலந்து கொள்ள புங்குடுதீவு வந்தார்களா, இல்லை இவர்கள் புங்குடுதீவு வந்ததன் நோக்கம், இந்தக் கொலையின் முக்கிய குற்றவாளிகள் இருவர் பொலிஸாரால் கைது செய்யபட்டுவிட்டனர், ஏனைய இருவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம், ஆகையால் அது தொடர்பில் நேரில் அறிந்து கொள்ளவே புங்குடுதீவு வந்துள்ளார்கள்.

அப்படி வந்தவர்கள் 17ஆம் திகதி வரை, புங்குடுதீவில் நடமாடி உள்ளனர். அந்த நிலையிலேயே 4, 5, 6, 7, மற்றும் 8ஆம் எதிரிகள் 17ஆம் திகதி ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அன்றைய தினம் இரவு 9ஆவது எதிரியான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் ஊர் மக்களால் பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு இருந்தார்.

அந்நேரம் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் இரவு 11 மணியளவில் அந்த இடத்துக்குச் சென்று, சுவிஸ்குமாரை அடிக்க வேண்டாம் எனக் காப்பாற்றினார். அது நல்ல விடயம்.

ஆனால், அங்கே போன அவர் முதலில் கேட்ட கேள்வி, “நீ சசியின் அண்ணாவா ?” என, யார் அந்த சசி? இந்த வழக்கில் அன்றைய தினம் மாலை 3 மணிக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு கொண்டிருந்த நபர்.

‘சுவிஸ்குமாரை அடிக்க வேண்டாம்’ என, மக்களிடம் இருந்து காப்பாற்றியவர், அந்த இடத்தில் 2 மணி நேரம் காத்திருந்து சுவிஸ்குமாரைப் பாதுகாப்பாக ஒப்படைத்து விட்டுச் சென்றுள்ளார்.

அதன் பின்னர் புங்குடுதீவுக்கு சட்டபீடாதிபதி வி.ரி.தமிழ் மாறனுடன், யாழ்.பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் சு.ஸ்ரீகஜன் மற்றுமொரு, சிங்கள பொலிஸ் உத்தியோகர் சென்ற வேளை சுவிஸ்குமார், ஸ்ரீகஜனிடம் சரணடைந்துள்ளார்.

அவரை, ஸ்ரீகஜன் மற்றும் சட்டத்தரணி வி.ரி.தமிழ்மாறன் ஆகிய இருவரும் யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து ஒப்படைத்துள்ளனர். எனினும் பொலிஸாரின் துர்நடத்தை காரணமாக பிரதான சந்தேக நபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தையில் மீண்டும் கைது செய்யப்பட்ட சுவிஸ்குமார், சிறையில் இருந்தபோது இர்பானிடம் 2 கோடி ரூபாய் பேரம்பேசியுள்ளதாகவும் இர்பானே தன்னிடம் பேரம்பேசியதாக சுவிஸ்குமாரும் மாறி மாறி வாக்குமூலம் வழங்கியுள்ளனர். ஆக, 2 கோடி பேரம் பேசப்பட்டது உண்மை. இதனை சுவிஸ்குமார் தனது சக கைதிகளிடமோ அல்லது சிறையில் இருக்கும்போது அடிக்கடி சந்தித்த தனது மனைவியிடமோ கூறவில்லை.

இவ்வழக்கில் எதிரி தரப்பு சட்டத்தரணிகள், ஒரே விடயத்தைத் திரும்பத் திரும்ப முன்வைத்தார்கள். எதிரிகள் சிறையில் இருக்கும்போது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்று. ஆனால் அவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட சான்றுகள், மருத்துவ அறிக்கைகள் எவையும் இல்லை. இதேவேளை, பாடசாலை மாணவி ஒருவரும் நிர்வாணமாக்கப்பட்டு கால்கள் 180 பாகை அளவில் விரித்து கட்டப்பட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவியின் நிலைமை தொடர்பாக சட்டத்தரணிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

டி.என்.ஏ பரிசோதனையின்போது தடயப்பொருட்கள் அழிவடைந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பாடசாலை மாணவியொருவர் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையிலும் தடயவியல் பொலிஸாரில் உயர் அதிகாரிகள் எவரும் அவ்விடத்துக்குச் செல்லவில்லை. சாதாரண கான்ஸ்டபிளே அவ்விடத்துக்குச் சென்று தடயங்களை சேகரித்துள்ளார். இது தடயவியல் பொலிஸாரின் அசமந்த போக்கை எடுத்துக்காட்டுகிறது. எனினும், சி.ஐ.டி பொலிஸாரே குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர். எனவே, அவர்களை பாராட்டுகின்றேன்” என தெரிவித்தார்.

“மேலும், 1ஆம் மற்றும் 7ஆம் சந்தேக நபர்களை வழக்கிலிருந்து விடுவிக்கின்றேன்” எனத் தெரிவித்தார்.

பின்னர் ஏனையோரை நோக்கி, “உங்களுக்கு ஏன் மரண தண்டனை விதிக்கக் கூடாது” என வினவினார்.

இதனையடுத்து, 2ஆம் குற்றவாளி, “நான் இந்தக் குற்றத்தைச் செய்யவில்லை. எனக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

3 ஆவது குற்றவாளி, “இந்த குற்றத்துக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. சி.ஐ.டி யும் பொலிஸாரும் இணைந்து பொய் சாட்சிகளை ஏற்படுத்தி எம்மை சிக்க வைத்துவிட்டனர். எமக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை” எனத் தெரிவித்தார்.

இதேவேளை, 4 ஆவது எதிரி, சம்பவ தினமன்று நாங்கள் கொழும்பில் இருந்தோம். வெள்ளவத்தை சந்தி, ஏஞ்சல் லொஜ் ஆகியவற்றிலுள்ள சி.சி.டி.வி கமெரா ஆகியவற்றை சோதனை செய்து பார்த்தால் நாங்கள் அங்கிருந்தது தெரியும். எனக்கு என, யாரும் இல்லை. அம்மா மட்டுமே என்னுடன் இருந்தார். அவரும் வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும்போது உயிரிழந்து விட்டார். எனது மனைவியிடம் எமக்கு தேவையான ஆதாரங்களை திரட்டவோ கொழும்புக்குச் சென்று சி.சி.டி.வி கமெரா ஆதாரங்களை திரட்டக்கூடிய திறமையோ இல்லை. அதனால் எமக்கான ஆதாரங்களை திரட்ட முடியவில்லை. ஆனால் திட்டம் எவையும் நான் தீட்டவில்லை. அதேபோன்று கடவுளுக்கு தெரியும்” என தெரிவித்தார்.

அதேபோன்று, 5 ஆவது எதிரி, “நான் 5 பெண் சகோதரிகளுடன் பிறந்தேன். 2 பெண் குழந்தைகள் எனக்கும் உள்ளனர். இங்கு கொண்டுவரப்பட்டவர்கள், எவரும் கண்கண்ட சாட்சிகள் அல்ல. கண்கெட்ட சாட்சிகள். சட்டவைத்திய அதிகாரி மயூரன், நீதவான் நீதிமன்றில் 5 பேரின் விந்தணுக்கள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால், இதுவரை அது தொடர்பாக எவ்வித அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை. வெளியில் உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டாம். நிரபராதிகள் தண்டிக்கப்பட்டுள்ளோம். ஏழைகளாகிய எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நாங்கள் ஏழைகள் என்பதால் சட்டத்தரணிகளை எங்கள் சார்பாக முன்னிலையாக்க முடியவில்லை” எனத் தெரிவித்தார்.

6 ஆவது குற்றவாளி, “வித்தியாவைக் காதலித்தது நான் எனக் கூறுகின்றார்கள். ஆனால், வித்தியா அவரது தாயாரிடம் கூட அவ்வாறு கூறவில்லை. சுரேஸை அடித்து துன்புறுத்தியே எங்களுக்கு எதிராக சாட்சி கூற வைத்துள்ளனர். எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. அதேபோன்று உயிரிழந்த வித்தியாவுக்கும் நியாயம் கிடைக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

8 ஆவது குற்றவாளி, “எனக்கும் வித்தியா கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. நான் எவ்வித சதித்திட்டமும் தீட்டவில்லை. எமக்கும் உயிரிழந்த வித்தியாவுக்கும் நீதி கிடைக்க வேண்டும்” என தெரிவித்தார்.

9 ஆவது குற்றவாளி, “எனக்கு முன்னுள்ளவர்கள் கூறிய போலவே இது திட்டமிட்ட குற்றச்சாட்டு. செய்மதி ஊடாக வித்தியா கொலை வழக்கில் தொடர்புபட்டவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அதனை நீதிமன்றம் இதுவரை செய்யவில்லை. இனியாவது அதனைச் செய்து உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். அது தமிழ் மக்களுக்கு எதிராக, சி.ஐ.டியினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு” என தெரிவித்தார்.

தீர்ப்பு

இதனையடுத்து, நீதிபதி இளஞ்செழியன், பிற்பகல் 1.25 மணிக்கு தீர்ப்பை வாசித்தார். இதன்போது, மன்றில் விளக்குகள் அணைக்கப்பட்டு அனைவரும் எழுந்து நின்றனர்.

தீர்ப்பில், “வழக்கின் 2, 3 , 5 மற்றும் 6 ஆம் எதிரிகளை, வன்புணர்வு, கொலைக் குற்றவாளியாக இனங்கண்ட தீர்ப்பாயம், மரண தண்டனை விதித்தும், 30 வருட சிறை தண்டனையும் விதித்தும் தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், தலா 10 ஆயிரம் தண்டம் பணம் கட்ட வேண்டும் என்றும் தவறின் 4 மாத சிறை தண்டனையும் மாணவியின் குடும்பத்திற்கு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். தவறின் 2 வருட சிறைத்தண்டனை விதித்து மன்று தீர்ப்பளிக்கின்றது.

அதேவேளை, 4, 8 மற்றும் 9 ஆம் எதிரிகள் குற்றத்துக்கு உடந்தை மற்றும் சதித்திட்டம் தீட்டிய குற்றத்துக்கு மரண தண்டனையும் 30 வருட சிறைத்தண்டனையும் வழங்கியுள்ளது. அத்துடன், தண்டப்பணமாக தலா 70 ஆயிரம் தண்டப்பணம் செலுத்த வேண்டும். தவறின் 7 மாத சிறை தண்டனை, மாணவியின் குடும்பத்துக்கு தலா 10 இலட்சம் இழப்பீடு செலுத்த வேண்டும் தவறின் 2 வருட சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்” என்றார். வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டதன் பின்னர், குற்றவாளிகளின் உறவினர்கள் மன்றில் கதறியழுது ஓலமிட்டனர். இதனால் அங்கு ஒரு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது.

இதேவேளை, குற்றவாளிகள் அனைவரும், கைவிலங்கிடப்பட்டு, கடும் பாதுகாப்புக்கு மத்தியில், கண்டி, பல்லேகலையிலுள்ள சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.