36 இலங்கை தமிழ் அகதிகள் நாளை இலங்கைக்கு வருகை

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய ஒருங்கிணைப்புடன் நாளை செவ்வாய்க்கிழமை 36 இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதர உள்ளனர் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவ் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி வெளிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, குறித்த அகதிகள் சென்னையிலிருந்து மிஹின்லங்கா விமானசேவை (MJ 130) ஊடாக மு.ப. 11.45 மணியளவில் வருகைதர உள்ளனர். இதற்கமைய அவர்களது பயணப்பொதியின் அளவையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ் அகதிகள் 36 பேரில் 20 ஆண்களும் 16 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு மீள்குடியமர்வதற்காக வருகை தருகின்றனர்.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் இவர்கள் இலங்கையை வந்தடைவதற்கு இலவசமாக விமான பயணச்சீட்டு வழங்கப்படும். அத்துடன், மீள் சமூக ஒருங்கிணைப்புக்கான நன்கொடையாக ஒவ்வொருவருக்கும் 75 அமெரிக்க டொலர்களும் போக்குவரத்து நன்கொடையாக ஒவ்வொருவருக்கும் 19 அமெரிக்க டொலர்களும் உணவு அல்லாத பண நன்கொடையாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 75 அமெரிக்க டொலர்களும் வழங்கப்படவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

‘2011ஆம் ஆண்டிலிருந்து மொத்தமாக 4,799 இலங்கை தமிழ் அகதிகள் (1,741 குடும்பங்கள்) தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். மேலும், இந்தியாவில் 64,000 பேர் இந்தியாவிலுள்ள 109 முகாம்களில் இருக்கின்றனர். மொத்தமாக ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இலங்கை அகதிகள் இந்தியாவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீள்குடியமர்த்தப்படும் மக்களுக்கு வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதி உதவிகளை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்ததன் பேரில், தற்போது அமைச்சினால் ஆகக்கூடிய தொகையாக 100,000 ரூபாய் தாயகம் திரும்பும் தமிழ் அகதிகள் தமது வாழ்வாதார நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக வழங்கப்படுகின்றது.

மேலும், மீள்குடியமரும் மக்களுக்கு 6 மாதகாலத்துக்கு உலர் உணவுகளை வழங்குவதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. வீடுகள் மற்றும் தமது உறவினர்களை இழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் நட்டஈடுகளை வழங்குமாறு, ஆட்களையும் ஆதனங்களையும் கைத்தொழில்களையும் புனரமைப்புச் செய்யும் அதிகாரசபைக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்தவர்களுக்கு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படும்’ என்றும் கூறப்பட்டுள்ளது.