(மாதவன் சஞ்சயன்)
2007ன் பின் இப்போது தான் கதிர்காமம் வருகிறேன். மக்கள் மனங்கள் உட்பட எந்த ஒரு பெரிய மாற்றமும் இங்கு எனக்கு தெரியவில்லை. அன்று ராணுவத்துக்கு மகன்களை அனுப்பிய தந்தைகள் பற்றி முன்பு எழுதினேன். இன்று அவர்களின் மரண செய்தி வராதது மட்டுமே மாற்றம். மற்றப்படி அதே தங்கும் விடுதிகள், உணவகங்கள், பூஜா வட்டி விற்பனை நிலையங்கள் என ஏற்கனவே பார்த்த காட்சிகள் தான். காப்பற் பாதைகள் உயர்ந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை. அடிக்கடி பயணிக்கும் பேரூந்துகள் தெற்கின் எல்லையை கொழும்புடன் இணைத்தாலும் அதில் தினம் தினம் பயணிக்க ஆட்கள் இன்றி அவை குறுந்தூர ஆட்களை ஏற்றி இறக்கி, தம் டீசல் செலவை ஈடு செய்யும் நிலை தான் காணப்படுகிறது.