புலி துண்டுப் பிரசுரங்கள் வீதிகளில் பறந்தன

தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்.ரீ.ரீ.ஈ) புலனாய்வுத் துறை என்ற பெயரில், அந்த இயக்கத்தின் இலட்சினையுடன் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், வவுனியாவில் உள்ள வீதிகள் சிலவற்றில், வீசப்பட்டு கிடந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு பிரதேசத்தில் உள்ள வீதிகள் மற்றும் சிறி டெலோ கட்சியின் காரியாலயத்துக்கு அண்மையில், வீசப்பட்டுக் கிடந்த நிலையிலேயே அந்தத் துண்டுப் பிரசுரங்களை பொலிஸார், செவ்வாய்க்கிழமை இரவு பொறுக்கியெடுத்துள்ளனர்.

தமிழ்ப் பெண்களால் மேற்கொள்ளப்படும் பிழைகள் தொடர்பில், புலிகளின் புலனாய்வு பிரிவு அவதானித்துக் கொண்டிருக்கிறது என்றும், தமிழ்ப் பெண்கள், சிங்கள ஆண்களுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ளக்கூடாது. அவ்வாறானவர்கள், கண்காணிக்கப் படுகின்றீர்கள் என்றும், மீறி நடந்தால் தண்டனை வழங்கப்படும் என்றும் அதில் எழுதப்பட்டுள்ளது.