வவுனியாவில் அழிவின் விழிம்பில் இருக்கும் தமிழ்க் கிராமம்

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புதுவிளாங்குளம் கிராமத்தில் மக்கள் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் இன்மையால் அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. வவுனியா மாவட்டம் கனகராயன்குளம் நகர்ப்பகுதியிலிருந்து சுமார் நான்கு கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருக்கும் விவசாய கிராமமே புதுவிளாங்குளம் கிராமமாகும்.

தலைமுறை தலைமுறையாக தமிழ்க் குடும்பங்கள் விவசாயத்தை நம்பி தமது ஜீவனோபாயமாக கொண்டு செல்வச் செழிப்புடன் வாழ்ந்தமைக்கான எச்சங்கள் குறித்த கிராமத்தில் தற்போதும் காணப்படுகின்றது.

கிராமத்துக்கு நடுவே சிவன் கோவில் ஓன்று அமைந்துள்ளது. அக் கோயிலை தனியொருவராக பூசகர் பராமரித்து அங்கேயே தங்கி வாழ்கின்றார்.

கோவிலை சுற்றி பனை, மா மரங்கள் சோலை போல காட்சி தருகிறது. மக்கள் குடியிருந்த பகுதிகள் பெரிய மரங்கள் வளர்ந்து காடுகள் போல காட்சியளிக்கின்றது.

மக்கள் குடியிருந்த பகுதியை சுற்றி வயல் நிலங்கள், குளம் என்பன காணப்படுகின்றது. அவ்வாறு இயற்கை எழில் கொஞ்சும் வன்னிவிளாங்குளம் கிராமத்தில் தற்போது ஒருகுடும்பம் கூட குடியிருக்கவில்லை.

விவசாய காலத்தில் மட்டும் யானைகள் மற்றும் வனவிலங்குகளுடன் போராடி வயல் விதைத்து அறுவடையின் பின்னர் குறித்த கிராமத்தில் ஆள்நடமாட்டமே இருக்காது யானைகள், விலங்குகள் மட்டுமே கிராமத்தில் வாழ்ந்து வருவதாக கிராம வாசியொருவர் தெரிவித்தார்.

போர்கால சூழலில் இடம் பெயர்ந்த புதுவிளாங்குளம் மக்கள் கனகராயன்குளம், வவுனியா மற்றும் புலம்பெயர் தேசங்களென இடம்பெயர்ந்து சென்றனர்.

தற்போது மீள்குடியேற்ற காலப்பகுதியில் அடிப்படை வசதிகளான போக்குவரத்து, மின்சாரம், பாடசாலை, வைத்தியசாலை, வீதிகள் சீர் இன்மையால் குறித்த கிராமத்தில் மக்கள் குடியமர்வதற்கு தயக்கம் காட்டிவருகின்றனர்.

தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படும் நிலையில் தமிழ் கிராமங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் புதுவிளாங்குளம் கிராமத்தில் மக்கள் மீண்டும் வாழ்வதற்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.