மேய்ச்சல் தரை வழக்கு முடிவு: 30 பேரும் விடுதலை

குறித்த வழக்கு மீதான விசாரணை ஏறாவூர் சுற்றுலா நீதவான்  நீதிமன்ற நீதிபதி  மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (20) எடுத்துக்கொள்ளப்பட்டது

மட்டக்களப்பு – செங்கலடி மத்திய கல்லூரிக்கு அன்று பதவியிலிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிகழ்வொன்றில் கலந்து கொள்ள 2023 அக்டோபர் 8ம் திகதி வந்தவேளை கொம்மாதுறை பகுதியில் – மயிலத்தமடு மாதவனை பகுதியில் ஏற்பட்டுள்ள மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் என சுமார் ஐந்நூறு பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தமை, முறைகேடாக ஆட்களை தடுத்துவைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் பேரில் 30 பேருக்கு எதிராக ஏறாவூர்ப் பொலிஸாரினால் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை தொடர்ந்து கொண்டு செல்வதற்கான மேலதிக ஆதாரங்கள் வழக்கு தொடர்ந்த தரப்பிடம் இல்லாததன் காரணமாக இலங்கை தண்டனை சட்டக்கோவை 186 ன் பிரகாரம் நீதவானுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கினை முடிவுறுத்தியதுடன் குற்றச்சாட்டப்பட்ட 30 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணி த.ஜெயசிங்கம், மயூரி ஜனன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்