இளையோரின் ஏற்றத்திற்கான எமது முயற்சியை கொச்சைப்படுத்தாதீர்கள்!

அது பற்றி எமது கருத்தினை மக்களரங்கில் பகிர்ந்து கொள்ளவேண்டியதன்
அவசியத்தை உணர்ந்து இக்கட்டுரையை வரைகிறேன். அங்கு பேசிய மாணவர், நாங்கள் மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் பயிற்சி அளிக்கப்போவதாகவும், அது நம் மாணவர்களின் சுயாதீனத்தை கெடுத்து தேவையற்ற அழுத்தங்களை உண்டாக்கிவிடப் போகிறது எனவும் விசனப்பட்டிருந்தார்.

அண்மையில் நடந்த அடிக்கல் நாட்டு விழாவில், நான் நிகழ்த்திய உரையின் ஒரு சிறு பகுதியை மட்டும் பிரமாண்டமாகப் ‘போகஸ்’ செய்தும், மற்றைய என் கருத்துக்களை முற்றாக ‘எடிட்’ செய்தும் மிகவும் புத்திசாலித்தனமாக எமது முயற்சியை சமூகத்தின் முன் பிழையாகப் பதிவு செய்ய அவர் முயன்றார்.

அவருடைய அந்தக் கீழ்மையான முயற்சியைக் கண்டு மனவருத்தமுறுகிறோம். இது ஒட்டுமொத்த மாணவர்களின் கருத்து அன்று என்பதையும் இம் மாணவர் யாருடையதோ தூண்டுதலால்தான் அவசர அவசரமாக இக்காரியத்தைச் செய்ய முனைந்தார் என்பதையும் நன்கு உணர்கிறோம்.

நம் இனத்தின் அடுத்த தலைமுறையை வழிநடத்தப்போகிற கற்ற இளையோரேனும் நிமிர்வோடும் நிதானத்தோடும் தமது சொந்த புத்தியால் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

அன்றைய மாணவரின் உரையில் உண்மையை அறிந்து வெளிப்படுத்தும் நோக்கம் இருக்கவில்லை. சமூகத்தை, எமக்கு எதிராகத் தூண்டும் முயற்சி மட்டுமே இருந்தது. அது இளையோர் மீது நம்பிக்கை கொண்ட எமக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.

அந்தப் பத்திரிகை மாநாட்டை நடத்துவதற்கு முதல், அம் மாணவ நண்பர் எங்களோடு தொடர்பு கொண்டு, நாம் என்ன செய்ய நினைத்திருக்கிறோம் என்பதைக் கேட்டு அறிந்திருக்கவேண்டும். அதனைச் செய்யாமல் வெறும்
ஊகத்தின் அடிப்படையில் ஒரு செய்தியை உருவாக்கிக் கொண்டு, நாம்
செய்ய நினைக்கும் நற்காரியத்தை ஏதோ ‘இனத்துரோகம்’ செய்வதுபோல்
வர்ணித்து பேசியிருந்தார்.

‘மூட்டைப்பூச்சிக்கு துப்பாக்கி எடுத்தகதை’யாய் அவசரப்பட்டு நண்பர் நடாத்திய பத்திரிகை மாநாடு வேடிக்கைக்குரிய ஒன்றாய் அமைந்தது. தமக்குச் சார்பாய், கிடைத்த ஒரு புள்ளியை வைத்து அவசர அவசரமாக கோலம் போட்டுவிடவேண்டும் என்று நினைக்கும் சில கீழ்;த்தரமான அரசியல்வாதிகளின்; வேகமே அவரது செயலில் வெளிப்பட்டது.

கம்பன் கழகம், கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக எங்களுடைய தமிழ்ச் சமூகத்துடன் இணைந்தே பயணித்திருக்கிறது. எமது கழகத்தின் முயற்சிகளின் தூய்மையை நமது தமிழ்ச் சமூகம் நன்கு அறியும். இன்றுவரை எமது கழகம் செய்யும் முயற்சிகளின் வெற்றிக்கு நம் சமூகம் தரும் ஆதரவும், அன்புமே காரணமாயின.

இன்று எமது கழகத்தின் சாதனையாய்ச் சொல்லப்படும் விடயங்கள் அனைத்தும்; எம்மக்கள் தந்த ஆதரவால் நிகழ்ந்தவையே. அந்த நன்றியை நானும் எமது கழகமும் என்றும் மறக்கப்போவது இல்லை.

முன்னைய கூட்டணித் தலைவர்கள்;, அதன்பின் வந்த போராளித் தலைவர்கள் தற்போதைய நம் அரசியல்த் தலைவர்கள் என அனைவருமே, இதுவரை எம் கழகத்தைக் கண்ணியப்படுத்தியே வந்திருக்கிறார்கள். அன்று நாம் நடாத்திய அடிக்கல் நாட்டுவிழாவில், முரண்பாடுடைய அனைத்துத் தலைவர்களும் கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து வந்ததே மேல் உண்மைக்கான தக்க சாட்சியாம்.

போராட்ட காலத்தில் பலவாகப் பிரிந்திருந்த போராளிக் குழுக்கள் அனைத்துமே கூட, எங்கள் மீதான மதிப்பினைப் போற்றியே வந்தன. எங்களை வீழ்த்தவேண்டும் என நினைத்த சிலர், புலிகளுக்கும் எங்களுக்கும் பெரிய பிரச்னைகள் உண்டானதாய், கற்பனைக் கதைகள் பலவற்றைக் கட்டி மகிழ்ந்தார்கள். இன்றும் மகிழ்கிறார்கள்.

ஆனால் அதை வைத்து எம்மை வீழ்த்த நினைத்த அவர்களின் முயற்சி கைகூடவில்லை. நாம் புலிகளோடு சில முரண்பாடுகளைக் கொண்டிருந்தது பகிரங்கமான விடயம். அம் முரண்பாடுகள் எங்களின் கொள்கை சார்ந்தவை மட்டுமே. சில விட்டுக் கொடுப்புக்களை நாம் செய்யாததால் அவர்கள் எம்மேல் அதிருப்தியுற்றிருந்தார்கள். அவ்வளவே!

ஆனால் அவர்கள் கடைசிவரை எம்மைக் கௌரவத்தோடுதான் நடத்தினார்கள். அக்காலத்தில் இருந்த புலிகளின் அதிகாரத்தோடு ஒப்பிடும்போது, நாங்கள் புள்ளியளவானவர்களாய்க்கூட இருக்கவில்லை. அவர்கள் நினைத்திருந்தால், இவர்களைப் போல ஏதாவது இல்லாத பழிகளைச் சொல்லி எங்களைத் துடைத்தெறிந்திருக்க முடியும். அவர்கள் அப்படிச் செய்யாததே எம்மேல் அவர்கள் கொண்ட மதிப்புக்கான சாட்சியாய் இருந்தது.

புலி உறுப்பினர் சிலருடன் ஏற்பட்ட ஒரு சில கருத்து முரண்பாடுகளால் ‘இனி இந்த மண்ணில் பேசமாட்டோம்’ என நாம் பகிரங்கமாய் அறிவித்த போது, அதனை தங்கள் இயக்கத்திற்கு நாம் விடுத்த சவாலாய்க் கொள்ளாமல், ஒன்றுக்கு மூன்று தரமாய் தமது புலனாய்வு உறுப்பினர்களை அனுப்பி எம்மை மீண்டும் பேசவேண்டும் என அவர்கள் திரும்பத் திரும்ப வேண்டிக் கொண்டனர்.

ஆனால் நாமோ, ‘எமக்கு நேர்மையான தீர்வு கிடைக்கும் வரையும் பேசப் போவதில்லை’ என பிடிவாதம் பிடிக்க, யாழ். மண்ணுக்குள் இராணுவம் புகத் தொடங்கியிருந்த அந்த இக்கட்டான வேளையில்கூட, நேரம் ஒதுக்கி புலிகளின் புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டம்மான் என்னை நேரில் சந்தித்து நடந்த பிரச்னைகள் பற்றிக் கேட்டறிந்தார்.

புலிகளுக்கும் எங்களுக்கும் கடும் முரண் இருந்ததாகப் பேசப்பட்ட கால கட்டத்தில்கூட, திலீபனின் நினைவுக்கூட்டத்தின் இறுதிநாளன்று, எங்கள் கழகத் தாரை அழைத்தே அவர்கள் பட்டிமண்டபம் நடத்தினார்கள். நல்லூர் வீதியில், பெரும் சனத்திரளுக்குக்கிடையில் நடந்த அக்கூட்டத்தில், புலிகளின் ஆதரவாளர்க ளின் சில செயல்களை நான் கடுமையாகக் கண்டித்துப் பேசினேன்.

அப்போது என் கருத்துப் பற்றி யாழ்ப்பாணம் முழுவதும் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் அப்பேச்சில் நான் சொன்ன விடயங்களை அவர்களது தலைமை ஏற்றுக் கொண்டமையை அடுத்த திலீபனின் விழாவில் காணமுடிந்தது.

இடம்பெயர்ந்து நாங்கள் இருந்த போது, கொழும்பு செல்ல ஒருவருக்கும் ‘பாஸ்’ வழங்காத அன்றைய நிலையில் எனக்கும் கழக நண்பர்களுக்கும் பாஸ் தந்து அவர்கள் மதிப்பளித்தார்கள்.

அது மட்டுமல்லாமல், புலிகளின் கடைசி ‘சென்ரி’யைத் தாண்டி வவுனியாவுக்குள் செல்ல நாம் முயன்றபோது, ஒரு புலி நண்பன் என்னை தனியே அழைத்து ‘இந்த நேரத்தில் நீங்கள் கொழும்பு செல்வது புத்திசாலித்தனம் இல்லை’ என்று எம் நன்மை நோக்கித் தடுத்தான்.

பின்னர் எம் தேவையை நான் உணர்த்த, அதை ஏற்றுக்கொண்டு எங்களைப் போக அனுமதித்தான். தற்போது இவர்கள் உண்டாக்கியிருக்கும் பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான முயற்சியாய் இவர், தமக்கு ‘புலிச்சாயம்’ பூச முயல்கிறார் என சிலர் உரைக்கலாம்.

அப்படிச் செய்ய நான் ஓர் அரசியல்வாதி அல்ல. இவை பற்றியெல்லாம் எனது ‘உன்னைச் சரணடைந்தேன்’ எனும் நூலில் எப்போதோ நான் தெளிவாக எழுதியிருக்கிறேன். இப்போது இவற்றை நினைவூட்டுவதன் காரணம் எங்கள் மீது பழிதூற்ற, எங்களோடு சில விடயங்களில் முரண்பட்டிருந்த புலிகள்கூட முன்வரவில்லை என்பதை உணர்த்தவேயாம்.

இப்படியாய், அரைநூற்றாண்டை அண்மிக்கும் எமது பொது வாழ்வின் உயர்ந்த நோக்கத்தை, வரலாறு அறியாமல் குறித்த அந்த நண்பர் சிதைக்க முற்பட்டிருக்கிறார்.

இன்றுவரை எமது கழகத்தின் முயற்சிகளை நம் தமிழினத்தின் உயர்வு நோக்கியே நாம் நகர்த்தி வந்திருக்கிறோம். நமது சமூக உயர்வுக்காய் செய்யப்படும் நல்ல விடயங்களை பகிரங்கமாய் பாராட்டவும், இனத்தின் வீழ்ச்சிக்காய் செய்யப்படும் தீய விடயங்களை எவருக்கும் அஞ்சாமல் கண்டிக்கவும் நாம் என்றும் தவறியதில்லை. இது உலகறிந்த உண்மை.

வரலாறு இப்படியிருக்க, எமது கம்பன் கழகம் இளையோரை இராணுவத்தின் வயப்படுத்த முயல்வதாய் அந்நண்பர் பேசியிருப்பது சமூகத்தோடு தொடர்பில்லாத அவரது நிலையையே வெளிப்படுத்துகிறது.

போராட்டங்களின் மூலம் தன் இருப்பை நிலைநிறுத்த அந்நண்பர் விரும்பினால், அதற்கு நம் சமூகத்தில் வேறு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. அவற்றை விடுத்து, தேவையற்று எமது நன்முயற்சியை தாழ்த்த நினைப்பது அவரது அறியாமையின் வெளிப்பாடேயாம்.

இத்தருணத்தில், நம் இளையோர்க்கு நாம் எடுக்கத் தொடங்கியிருக்கும் முயற்சி பற்றி விளக்கம் அளிப்பது எமது கடமை என நினைக்கிறோம்.

மூன்று தசாப்தங்களாக போரின் இன்னல்களுக்கு இடையில் வளர்ந்த எமது இளைய தலைமுறை, அதனால் பல பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கிறது. அப்பாதிப்புகளில் முக்கியமானதாய் நாம் கருதுவது ‘ஆளுமை’ இழப்பினையேயாம்.

இத்தனைப் பெரிய இன்னல் பாதையைக் கடந்து வந்த பின்னும்கூட நம் இளையோர், தம் அறிவாற்றலில் யாருக்கும் ‘சோடை’ போகவில்லை. ஆனால், நிகழ்ந்த ஆளுமை இழப்பு என்பது அவர்கள் அடைந்திருக்க வேண்டிய உயர் நிலைகளை அடையமுடியாமல் ஆக்கியிருக்கிறது.

இது பற்றி நானும் எனது கழக நண்பர்களும் பல காலமாக சிந்தித்து வருகிறோம்.

அதிகூடிய பரீட்சை சித்தி பெற்ற மாணவனும் கூட, நம் மண்ணைத் தாண்டி தெற்கிற்குள் நுழைந்தால், அங்குள்ள மாணவர்களின் ஆளுமைக்கும், நிமிர்விற்கும் முன்னால் நின்று பிடிக்க முடியாமல் தளர்ந்து போகிறான். அதனால் அவன் கஷ்டப்பட்டு தேடிய தகுதிகளெல்லாம் ‘விழலுக்கிறைத்த நீராய்’ப் ஆகிவிடுகின்றன.

நாம் கூடி ஆராய்ந்தபோது இதற்கான இரண்டு காரணங்களை இனங்கண்டோம். முதலாவது, இந்நாட்டில் பயிலப்படும் மொழிகளில், தமிழ்மொழிதவிர்ந்த மற்றைய மொழிகளில் நம் இளையோர்க்கு ஏற்பட்டிருக்கும் பயிற்சியின்மை.

இரண்டாவது, உயர் ஆளுமையாளர்களை சந்திக்கக் கிடைக்காத வாய்ப்பிழப்பு. நம் மண்ணில் ஆளுமையாளர்கள் இல்லையா? என உடன் கேட்பீர்கள்.

முற்றாய் இல்லை என நான் சொல்லமாட்டேன். ஆனால் ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த உயர் கல்வியாளர்கள், அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் என்பவர்களின் ஆளுமைத்திறனோடு ஒப்பிடும்போது இன்றைய நம்சமூகத்தின் ஆளுமைத்திறன், பூச்சியத்தை அண்மித்ததாகவே இருக்கிறது.

அதனால், இன்று நம் இளையோர் பதவிகளையும் பட்டங்களையும் மட்டுமே ஆளுமையாய் நினைந்து, ஏமாந்து, உயர் ஆளுமைத் தரிசனம் இன்றிக் கிடக்கின்றார்கள்.

தெற்கில் வாழ்ந்த இளையோரோ, போர்க்காலத்திலும் தனிமைப்படாது உலகத் தொடர்பைப் பேணி வந்தார்கள். அதனால் அவர்களது மொழித்திறனும் ஆளுமைத்திறனும் மிகவும் விருத்தியாகி இருக்கிறது. அவர்கள் ஆளுமைத் திறனில் முப்பதாண்டு முன்னால் பயணிக்க, நம் பிள்ளைகள் பின்னால் பயணித்தார்கள். காலம் செய்த கொடுமை இது!

இதனால் அவர்களுக்கும் நம் பிள்ளைகளுக்கும் இடையிலான ஆளுமை வேறுபாடு ஐம்பது ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது.

இந்த இடைவெளியை நிரப்பி நம்மவர்களின் ஆளுமையை வளர்ச்சியுறச் செய்து, பழையபடி மற்றவர்கள் நம் பிள்ளைகளின் நிமிர்வு கண்டு, வியக்கும் நிலைக்கு நம் சமூகத்தையும் நிமிரச் செய்ய வேண்டும் என்பதற்காகவே எமது இந்தப் புதிய முயற்சியை நாம் தொடங்கியிருக்கிறோம்.

இன்று இத்தகைய ஆளுமைப் பயிற்சிக் களங்கள் பலராலும் பரவலாக நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றிலெல்லாம் வெறும் வகுப்பு எடுக்கும் முயற்சியே செய்யப்படுகிறது. அதனால் பெரும் பயன் கிடைக்காது என்பது எம்கருத்து.

அதனாற்றான், மொழிப்பயிற்சியையும் ஆளுமைத் திறனையும் செயல்முறையூடாக நம் இளைஞர்கள் பெற வேண்டும் என நாம் நினைந்தோம். அதற்காக, இலங்கையின் பிற பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் வாழும் ஆற்றல்மிக்க மொழியியல் அறிஞர்கள், ஆளுமையாளர்கள் ஆகியோருடன் நம் இளையோர்க்கான சங்கமத்தை உண்டாக்க வேண்டும் என முடிவு செய்தோம்.

அச்சங்கமத்தால், இலங்கையளவில் தேவைப்படும் சிங்கள மொழிப்பயிற்சியையும், உலக அளவில் தேவைப்படும் ஆங்கில மொழிப்பயிற்சியையும் இயல்பாக உருவாக்கலாம் என்றும் உயர் ஆளுமையாளர்களின் சங்க மத்தால் நம் பிள்ளைகளின் ஆளுமையை வளர்ச்சியுறச் செய்யலாம் என்றும் நாம் கருதினோம்.

அதனால், இயல்பாகவே ஆளுமைத் திறன்கொண்ட இளையோர் சிலரை இனம் கண்டு, அவர்களை வேற்று மொழியாளர்களுடனும், ஆளுமையாளர்களுடனும் ஒன்றாகத் தங்க வைத்து, மொழித்திறன், ஆளுமைத்திறன் ஆகியவற்றை பயிலச் செய்ய வேண்டும் என்பது எங்களது முதற் திட்டமாய் இருக்கிறது.

ஆங்கிலத்தை ஆங்கிலேய ஆசிரியர்களுடனும், சிங்களத்தை அம்மொழிசார்ந்த ஆசிரியர்களுடனும் நாள் முழுதும் உடன் இருந்து செயல்முறையால் அவர்களைப் பயிலச் செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறோம்.

மொழிப்பயிற்சியை ஏற்படுத்திய பின்பு, ஆளுமைமிக்கவர்களை சந்திக்கவும், அவர்களோடு உடன் இருக்கவும் செய்து, அவர்களின் ஆளுமைத்திறனை நம் இளையோர் உள்வாங்கும்படியாகச் செய்யவேண்டும் என்பது எமது அடுத்த திட்டமாய் இருக்கிறது.

அதற்காக ஆளுமைமிக்க அரசியல் தலைவர்கள், நிறுவனத்தலைவர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் ஆகியோரைச் சந்திக்கச் செய்து, அவர்களோடு ஓரிரு தினங்கள் இவர்களைத் தங்கவைத்து, அதன்மூலம் நம் இளையோரின் ஆளுமைத்திறனை வளர்க்கத்தெடுக்க வேண்டும் என தீர்மானித்திருக்கிறோம்.

இங்குதான், அந்நண்பர் எழுப்பிய பிரச்சினை வருகிறது. நம் இளையோர்கள் ஆளுமைமிக்க இராணுவ உயரதிகாரிகளைச் சந்தித்து, அவர்களோடு நம் பிரச்னைகளைப் பற்றி சமநிலையில் நின்றுபேசி, தீர்வு காணும் துணிவைப் பெறுவதற்காகவும் இராணுவத்தின் இறுக்கமான கட்டுப்பாடுகளைத் தெரிந்து கொள்வதற்காகவும் அவர்களை இராணுவ முகாம்களுக்கும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறோம்.

யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற ஹாட்லி, சென். ஜோன்ஸ் கல்லூரிகளில் அதிபராய் இருந்த பூரணம்பிள்ளை அவர்களே, இம் முறையை எமக்கு முன்பு ஒருதரம் சொல் லியிருந்தார்.

அதுமட்டுமன்றி, நம் இளையோர்க்கு இத்தேசத்தில் வாழும் பிற மொழிச் சமூகங்கள், பிற மதங்கள் என்பவற்றைப் பற்றியும் ஆழ்ந்த புரிந்துணர்வை உண்டாக வேண்டும் என்பதற்காக, அத்தகைய இடங்களில் நம் இளையோரை நேரடியாகத் தொடர்புபடுத்தி அனுபவம் பெறச் செய்யவேண்டும் என்பதும் எம் எண்ணமாய் இருக்கிறது.

ஒரு சிறு தேசத்திற்குள் வாழ்ந்தாலும், நம்மவர்க்கு அருகில் இருக்கும் மதங்கள் பற்றியோ, அம்மதத்தாரின்; வழிபாட்டு முறைகள் பற்றியோ பெரும்பாலும் தெரிவதில்லை.

அதுபோலவே அருகிருக்கும் வேற்று இன மக்களின் வாழ்க்கை முறை, உணவுமுறை, கலாசாரம், பண்பாடு என்பவை பற்றியும் நம்மவர்கள் தெரிந்திருப்பதில்லை. இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டால் நம் இளையோரிடம் பரந்த சிந்தனையும் மற்றைய சமூகங்களுடன் சமப்பட்டு இணைந்து வாழும் திறனும் தாமாக உண்டாகும்.

அதனால் நம் இளையோரின் ஆளுமை மிக வேகமாக வளரும். அது மட்டுமல்லாமல் நம் இனத்தினதும், மொழியினதும், மதத்தினதும் பெருமைகளையும் மற்றவர்க்கு உணர்த்துகிற வாய்ப்பும் அவர்களுக்குக்கிட்டும்.

அதனால்தான் இப்பயிற்சியில் ஈடுபடப்போகும் இளையோரை மற்றைய இன, மத, மொழி மாணவர்களுடன் கலாசாரப் பரிவர்த்தனம் செய்யவேண்டும் எனவும் திட்டமிட்டுள்ளோம். இவையெல்லாம் எமது கனவுகள்!

ஒரு காலத்தில் இலங்கை முழுவதிலுமாக தமிழினத்தார் கொண்டிருந்த ஆளுமை மிக்கத் தலைமைத்தன்மையை மீட்டெடுக்கும் முயற்சியாகவே இத்திட்டங்களை நாம் வகுத்திருக்கிறோம்.

நடந்து முடிந்த போரையும் அதன் பாதிப்புக்களையும் சொல்லிச் சொல்லி, எவ்வளவு காலத்திற்குத்தான் எம் வாழ்க்கையை நாம் ஓட்டுவது? நிகழ்கால முயற்சியால், இறந்த காலப் பாதிப்புக்களை நீக்கி வருங்காலத்திலேனும், நம் கைவிட்டு நழுவிப்போன வீரியத்தை நாம் மீட்டெடுக்க வேண்டாமா?

அதற்காகவே இலக்கிய முயற்சி எனும் எம் எல்லையைக் கடந்து இத்தகைய ஒரு பாரிய சமூகப்பணியை முன்னெடுக்கத் தொடங்கியிருக்கிறோம். எங்களின் இம்முயற்சிக்கு கைகொடுக்க முன்வராவிட்டாலும், அதனைக் கொச்சைப்படுத்த முனையாமலேனும் இருக்கவேண்டும் என அனைவரையுமவேண்டி நிற்கின்றோம்.

இப்போது நாம் தொடங்கியிருப்பது மேற்சொன்ன திட்டங்களுக்கான ‘பிள்ளையார் சுழி’ மட்டும்தான்.

அந் நன்முயற்சியை முளையிலேயே கருகச் செய்ய நினைக்கும் சில சுயநலவாதிகளின் கருத்துகளுக்கு ஆட்படாமல், நமது இளைய தலைமுறை எம்முடன் தோளோடு தோள் நின்றுபாடுபட முன்வரவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்.