கொரோனா வைரஸ் முன்பு நினைத்ததை விட அதிக தூரம் பயணிக்கின்றது என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

COVID-19 தோற்றை தவிர்ப்பதற்காக பொது இடங்களில் 3 முதல் 6 அடி இடைவெளியில் “பாதுகாப்பான தூரம்” இருக்குமாறு பரிந்துரைத்த சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை சீன அரசாங்க தொற்றுநோயியல் நிபுணர்களின் ஆராய்ச்சி சவாலுக்கு உட்படுத்துகின்றது என்று தென் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.

“ஏர் கண்டிஷனிங் கொண்ட ஒரு மூடிய சூழலில், புதிய கொரோனா வைரஸின் தொற்றக்கூடிய தூரம் பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பான தூரத்தை விட அதிகமாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியும்,” என்று ஆராய்ச்சியாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

சுற்றுச்சூழலைப் பொறுத்து வைரஸ் ஒரு மேற்பரப்பில் பல நாட்கள் நீடிக்கும் என்று ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எடுத்துக்காட்டாக, 37 C வெப்பநிலையில் , கண்ணாடி, துணி, உலோகம், பிளாஸ்டிக் அல்லது காகிதத்தில் இது இரண்டு முதல் மூன்று நாட்கள் நீடிக்கும் என்று அவர்கள் கண்டறிந்தனர்.
இது மனித மலம் அல்லது உடல் திரவங்களில் ஐந்து நாட்களுக்கு மேல் உயிர்வாழ முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஜனவரி 22 அன்று நீண்ட தூர பயணம் மேற்கொண்ட வைரஸ் பாதிப்புக்குள்ளான ஒரு பஸ் பிரயாணியை வைத்து விஞ்ஞானிகள் இந்த ஆராய்ச்சியை செய்து முடிவுகளை வெளியிட்டனர். இதில் மொத்தம் 13 பேருக்கு தொற்று ஏற்பட்டது என்று கண்ணுபிடித்துள்ளனர்.
நான்கு மணிநேர சவாரி முழுவதும் நோயாளி மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவில்லை என்பதை CCTV காட்சிகள் காண்பித்தன – ஆனால் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்கள் ஆறு வரிசைகள் அல்லது 15 அடி தூரத்தில் அமர்ந்திருந்தனர் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

வைரஸ் தொற்றை பெற்ற ஒரு நபர் பாதிக்கப்பட்டவர் இறங்கி 30 நிமிடங்களுக்குப் பிறகு பஸ்ஸில் ஏறினார் என்றும் – முதல் குழுவால் சுவாசிக்கப்பட்ட காற்றை சுவாசித்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
அதே பயணி பின்னர் மற்றொரு பேருந்தில் ஏறி, அங்கும் 15 அடி தூரத்தில் அமர்ந்திருந்த இரு பயணிகளுக்கு தனது வைரஸை தொற்றவைத்துள்ளார்.

“சாத்தியமான காரணம் என்னவென்றால், முற்றிலும் மூடப்பட்ட இடத்தில், காற்று ஓட்டம் முக்கியமாக எயர் கொண்டிஷன் (ஹீட்டர்) மூலம் உருவாக்கப்படும் சூடான காற்றால் உருவாக்கப்படுகின்றது. சூடான காற்றின் உயர்வு வைரஸ் நிறைந்த நீர்த்துளிகளை அதிக தூரத்திற்கு கொண்டு செல்ல முடியும், ”என்று அந்த ஆய்வறிக்கை கூறியது.

விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சி முகமூடி அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகக் கூறினர் – ஏனெனில் இரு பேருந்துகளிலும் இருந்த முகமூடிகளை அணிந்த பயணிகள் யாரும் பாதிக்கப்படவில்லை.

“சுரங்கப்பாதைகள், கார்கள், விமானங்கள் போன்ற மூடிய பொது போக்குவரத்தில் சவாரி செய்யும்போது, நீங்கள் எப்போதும் முகமூடியை அணிய வேண்டும், அதே நேரத்தில், உங்கள் கைகளுக்கும் பொதுப் பகுதிகளுக்கும் இடையிலான தொடர்பைக் குறைக்கவும், சுத்தம் செய்வதற்கு முன் உங்கள் முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும் , ” என்று அவர்கள் அறிவுறுத்தினர்.

பொது போக்குவரத்தில் சுகாதாரத்தை மேம்படுத்தவும் – ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை உட்புறங்களை சுத்தம் செய்வது உட்பட – மற்றும் முடிந்தவரை புதிய காற்று வருவதை உறுதிசெய்ய ஏர் கண்டிஷனிங் சரிசெய்யவும் அவர்கள் பரிந்துரைத்தனர்.
இருப்பினும், நோய்காவிக்கு பக்கத்தில் அமர்ந்திருக்கும் பயணிகள் – அதிக வைரஸ் தொற்றை பெற்றிருக்கவேண்டியவர்கள் – ஏன் பாதிக்கப்படவில்லை என்று அவர்களால் பதிலளிக்க முடியவில்லை.
“இந்த வைரஸ் பரவுவதைப் பற்றிய எங்கள் அறிவு இன்னும் குறைவாகவே உள்ளது” என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவர் கூறினார்.