தமிழ் தேசியத்தை குறுகிய இனவாதத்தின் செல்வாக்கிலிருந்து காப்பாற்ற உழைத்தவர் பத்மநாபா

1983 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துக் காலைப் பொழுதொன்றில் புன்முறுவல் பூத்த முகமாய் தமிழ் வாலிபன் ஒருவன் என் வாசலுக்கு வந்தான். ஈழ மாணவர் பொது மன்றத்தின் ~ரஞ்சன்~ என தன்னை அறிமுகப்படுத்தினான்.

மிகவும் நெருங்கிய நண்பனைப் போலவும், நன்கு பழக்கமானவன் போலவும் என்னுடன் இலங்கையின் பொதுவான அரசியலைப் பற்றி பேசத் தலைப்பட்டான்;. இல்லை, இல்லை நான் பேசுவதைக் கேட்க விரும்பினான். அவன் கொழும்பு வந்தது தென்னிலங்கை சமதர்ம, முற்போக்கு அரசியல் கட்சிகளினதும் குழுக்களினதும் தலைவர்களுடனும் முற்போக்கு புத்திஜீவிகளுடனும் தொடர்பு கொண்டு உறவுகளை வளர்த்துக்கொள்வதற்கே என தன் நோக்கத்தை கூறினான்.
இது தான் நான் முதன் முதலில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமான தோழர் பத்மநாபாவை சந்தித்த பொழுதுகளின் சாராம்சம் ஆகும்.
1983 ஆம் ஆண்டிலே நிகழ்ந்த இனக்கலவரம் வரை, தென்னிலங்கையிலும் மலையகத்திலும் சுதந்திரமாக உலவி வந்த தோழர் பத்மநாபா, அறிமுகப்படுத்திக்கொண்ட சிங்கள புத்தி ஜீவிகளுள் கலாநிதி நியூட்டன் குணசிங்க இவரை மிக நெருக்கமாகப் புரிந்துகொண்டிருந்தார்.
சமதர்மத்திற்காக போராட வேண்டிய தேவையை தமிழ் இளைஞர்களுக்கு உணர்த்திய தோழர் பத்மநாபா தமிழ் தேசியத்தை குறுகிய இனவாதத்தின் செல்வாக்கிலிருந்து காப்பாற்றுவதற்காகவும் உறுதியோடு உழைத்தார்.
தேசிய ரீதியில் வறுமைக்கு எதிரான போராட்டத்தில் அனைத்துப் பொதுமக்களுடனும் தோளோடு தோள் நின்று போராடுவதற்காக, தமிழ் தேசியப் போராட்டத்தையும் தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் போராட்டத்தினையும் இணைப்பதில் அந்தரங்கசுத்தியோடு உழைத்தார்.
தமிழ் தேசிய போராட்டம் என்ற தமிழ் மக்களுக்கு அவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தினை (சுய நிர்ணய உரிமையை வென்றெடுக்கும் போராட்டம்) இலங்கையில் சமதர்ம சமூக மாற்றத்தினைக் கொண்டுவருவதற்கான போராட்டத்துடன் இணைப்பதற்காக அவர் பிரயத்தனப்பட்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் சிங்கள எல்லைக் கிராமங்கள் மீது நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையெல்லாம் மனித நேயத்துடனும், மன வேதனையுடனும் கண்டித்தார்.
தோழர் பத்மநாபா ~~ஈழம்|| என்ற சுலோகம் தனி ஒரு சிறிய நாட்டை உருவாக்குவதற்காக அல்ல என்றும், அது உறுதிவாய்ந்த சமதர்ம இலங்கையை உருவாக்குவதற்கான முன்னோடி என்றும் கருதினார். பிரிவினை வேதனைக்குரியது எனவும் கூறினார்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுத்த@ போராடிய பத்மநாபா, உழைக்கும் சிங்கள மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தையும் கூர்ந்து கவனித்ததுடன் ஒத்துழைத்தார்.
1985 திம்பு பேச்சு வார்த்தை ஆரம்பமாகும் போது சிங்கள மக்களின் ஜனநாயக உரிமை மீறல்கள் சம்பந்தமாகவும் ஒர் அறிக்கையை அங்கு சமர்ப்பிப்பதற்காக தயாரித்திருந்தார். 1988 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாண சபையை நிறுவியதுடன் அது தொடர்பான அதிகார பரவலாக்கல் சம்பந்தமாக பேச்சுவார்த்தைகள் நடந்தபோது சிங்கள மக்களின் ஜனநாயக உரிமைகள் குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.
ஒரு சிங்கள முதலாளித்துவ அரசால் தம்ழ் மக்களின் உரிமைகளை வழங்க முடியாதெனப் புரிந்துகொண்ட தோழர் பத்மநாபா பெரும்பான்மையான உழைக்கும் சிங்கள மக்கள், தாம் இழந்த ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்காக ஸ்தாபன ரீதியாக திரளுகின்றவரை தமிழ் மக்கள் தமது உரிமைகளை பெற கஷ்டம் நிறைந்த போராட்டத்தையே நடத்தவேண்டி வரும் என அறிந்திருந்தார். இதை சரியாக உணர்ந்திருந்த தோழர் பத்மநாபா தென்னிலங்கை மாற்று சிந்தனையாளர்களுக்கும் சமதர்ம கட்சிகளுக்கும் குழுக்கழுக்கும் உதவ பின்நிற்கவில்லை.
விடுதலைப் புலி இயக்கத்தின் உதவியுடன் அதன் பயங்கரவாதத்துக்கு உரமூட்டி ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைமையில் இருந்த வடக்கு கிழக்கு மாகாண அரசை இலங்கை அரசு ஸ்திரமின்மை அடையச் செய்த பின்னர் மீண்டும் ஒரு முறை இந்தியாவில் அஞ்ஞாதவாசம் செய்த தோழர் பத்மநாபாவுடன் சிறிது காலம் நான் ஒன்றாக இருக்க நேர்ந்தது இந்த அஞ்ஞாதவாசத்தின் போது நானும் தோழர் பத்மநாபாவும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் நமத தேசத்தின் அரசியல் பற்றியும் ஈ.பி.ஆர்.எல்.எவ் மாநாடு பற்றியும் நிறைய பேசியிருக்கிறோம்.
இலங்கையில் சமதர்ம, ஜனநாயக கட்சியினரின் தோல்வியையிட்டு தோழர் பத்மநாபா கருத்து தெரிவிக்கையில் இந்தியாவில் இருந்ததைப் போன்ற சாமானியர்களின் மத்தியில் ஆழமாகவும் பரவலாகவும் வேரூன்றிய ஒரு ஜனநாயக இயக்கம் எமது சுதந்திரத்துக்கு முன் இல்லாமல் போனதும் பின்னர் தோன்றாது இருந்ததுமே முக்கிய காரணமென்றார். இந்த பலவீனத்தின் மூலவேர் இதுவே எனக் கூறினார்.
அது மட்டுமல்ல எமது நாட்டின் கலாசாரத்தில் ஜீவனுள்ள ஜனநாயக மரபுகள் இல்லாத காரணத்தினால் நாட்டின் அரசியல் கட்சிகளுக்குள்ளும் எதேச்சாதிகாரம் தோன்றுவதற்கு வழி கோலியது எனவும் கருதி, இலங்கையின் சமதர்ம சமூக மாற்றத்தின் இயங்கு சக்தி இலங்கையின் அனைத்து உழைக்கும் மக்களுமே என்பதனை புரிந்துகொண்டு சகல உழைக்கும் மக்களையும் ஸ்தாபன ரீதியாக திரட்டாமல் வெறும் கோஷ்டிவாதம் பேசிக்கொண்டிருந்ததும், பிரிவினைகளை மறந்து ஒன்று திரளாமல் இருந்த காரணத்தினாலும் தான் முதலாளித்துவ கட்சிகளே ஜனநாயக காப்பாளர்களாக தோற்றமளித்தன. சில இடதுசாரி கட்சிகளும் இந்த மாயையினால் முதலாளித்துவ கட்சிகளின் பின்னால் போயின. இந்த நிலைமைகளை இடதுசாரிக் கட்சிகள் மீளாய்வு செய்ய வேண்டும் என தோழர் பத்மநாபா விரும்பினார்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற அரசியல் இராணுவ ஸ்தாபனத்தில் செயலாளர் நாயகமாக வாழ்;ந்த தோழர் பத்மநாபா – தமிழ் தேசிய போராட்டத்தின் முழமையான ஒரு வடிவத்தைப் பற்றிய தெளிவிருந்த தோழர் பத்மநாபா – ஒரு சிறந்த மனித நேயம் கொண்ட ஒரு உண்மையான ஈழ மைந்தன் என கருதப்படலாம்.
(அமரர் தோழர் பத்மநாபாவின் நினைவாக வெளியிடப்பட்ட ~~எங்கள் தலைவனும் ஆசானும்|| என்ற நூலில் தோழர் ஜோ. செனிவிரத்னா எழுதிய நினைவு குறிப்பிலிருந்து மேற்படி பகுதி தோழர் பத்மநாபாவின் 65 வது பிறந்த நாளையொட்டி இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது.)