பின்னப்பட்ட சதிவலை (Part 2)

2001 ஜூலை 24ல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் மீது புலிகள் நடத்திய தாக்குதலானது இலங்கை அரசுக்கு பெரும் பின்னடைவை கொடுத்தது போலவே 2001 செப்டெம்பர் 11ற்கு பின்பு புலிகளுக்கும் பாதகமாகவே அமைந்தது. அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் புலிகளும் உள்ளடக்கபட்டனர். பயங்கரவாத எதிர்ப்பு போரில் இறங்கியிருந்த அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இலங்கையிலும் நேரடியாக தலையிடும் புறச்சூழல் உருவனது. இவ்வாறு தமக்கு பாதகமாக சூழல் உருவானதை சமாளிக்க ஏதாவது ஒன்றை செய்யவேடிய கட்டாயத்தினுள் புலிகள் தள்ளப்படனர்.ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தொடங்கிய நோர்வே அனுசரணை சமாதான முயற்சிகளை பற்றிக்கொள்ள அவர்கள் முயற்சித்தனர். அத்தோடு தமது ஆயுத போராட்டமானது முற்றிலும் தமிழரின் சுயநிர்ணயம் சார்ந்த்தே அன்றி இலங்கையின் இறையாண்மை மீது நடத்தப்படுகின்ற வலிந்த பயங்கரவாத தாக்குதல் அல்ல என்கின்ற தோற்றத்தையும் சர்வதேச அரங்கில் உருவாக்கவேண்டிய தேவை புலிகளுக்கு ஏற்பட்டது. எனவேதான் அவர்கள் 1980களில் தங்களால் அழித்தொழிக்கப்பட்ட மென் அரசியலுக்கு உயிர்கொடுக்க முன்வந்தனர். புதிதாக உயிரூட்டப்பட்ட மென் அரசியலுக்கு தமது உறுப்பினர்களையோ அல்லது தமது ஆதரவாளர்களையோ பயன்படுத்தி கொண்டால் அது தாம் கூறமுயலும் செய்தியின் மீது சர்வதேச சமூகத்துக்கு நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் என்பதால் அவர்கள் வேறு நபர்களையே இதற்காக பயன்படுத்தவேண்டியிருந்தது.

மிதவாத தமிழ் அரசியல்வாதிகளாக சர்வதேச அரங்கில் இலங்கை அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு, அரவணைக்கப்பட்ட சில தமிழ் அரசியல்வாதிகள், ஆயுதங்களை கைவிட்டு ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்துவிட்டதாக தங்களை அறிவித்துக்கொண்ட முன்னாள் போராளிக்குழுக்களை சேர்ந்த சிலரையும் அதுவரையும் தமிழரின் அரசியல்வரலாற்று காட்சியில் தோன்றாத ஏனைய சிலரையும் அழைத்து 2001 ஒக்டோபர் 20 ல்“தமிழ் தேசியம்” என்னும் புதிய முகமூடி அணிவித்து அவர்களூடாக தமது செய்தியை புலிகள் சர்வதேச சமூகத்துக்கு வழங்க முயன்றனர். அதாவது தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக அதுவரை தம்மை முன்னிலை படுத்திக்கொண்ட புலிகள் முதன் முறையாக தமிழ் மென் அரசியல் என்கின்ற பிரதிநிதிகளும் தமிழர்தரப்பில் உள்ளனர் என சர்வதேசத்துக்கு கூறியதோடு மட்டுமல்ல தாமும் ஏற்றுக்கொள்ளவேண்டியதாயிற்று.

சுமார் இரு தசாப்பத்ங்களுக்கும் மேலாக ஈழத்தமிழ் அரசியலுக்கு தலைமை தாங்கிய புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் முதன் முறையாக தமிழ் மென்அரசியலுக்கு தலைமையேற்க 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் திருகோணமலைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரான இராஜவரோதயம் சம்பந்தனை தெரிவுசெய்யவேண்டியதாக இருந்தது. தமது ஆயுத வன் அரசியலுக்கு தற்காலிக ஓய்வளித்து சம்பந்தன் தலைமையில் மென் அரசியலை முன்னிலைபடுத வேண்டும் என்கின்ற ஒரெயொரு தெரிவு மட்டுமே அன்று பிரபாகரனிடம் இருந்தது.இதனை புலிகளின் ஒரு சாதுரியமான நடவடிக்கையாக இன்றுவரை சிலர் பார்கின்றனர். ஆனால் பதினெட்டு ஆண்டுகளின் பின் சம்பந்தன் தலைமையில் புத்துயிர் அளிக்கப்பட்ட இம்மென் அரசியலின் பாராளுமன்ற பிரவேசம் சர்வதே அரசியல் வியூக வகுப்பாளர்களுக்கு ஒரு செய்தியை வழங்கியிருந்தது“தமிழ்மக்கள் ஆயுத வன்அரசியலை விட, ஜனநாயக மென்அரசியல் விரும்புகிறார்கள் அதுவே அவர்களின் அரசியல் தெரிவு, ஆயுத வன் அரசியல் என்பது அவர்கள் மீது வலிந்து திணிக்கப்பட்ட ஒன்று” என்பதே அந்த அழுத்தமான செய்தியாகும்.

புலிகளின் செயற்பாடுகளில் இணக்கமற்றிருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் வியூக வகுப்பாளர் அதனையே தமக்கு கிடைத்த துருப்புச்சீட்டாக பயன்படுத்திக்கொள்ள முயற்சித்தனர். புலிகளால் வீரியத்தோடு முன்னெடுக்கப்பட்ட வன் அரசியலை அழித்தொழிக்கும் சதிவலையை பின்னத்தொடங்கினர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கா தனது அமைச்சர்களான மலிந்த மொரகொட போன்ற இராஜதந்திரிகள் மூலம் இந்திய, அமெரிக்க அரசுகளோடு இணைந்து இச்சதிதிட்டத்திதை மிகசரியாக நகர்த்தி சென்றாதாக கூறப்படுகின்றது. இதற்கு சமாந்தரமாக முற்றிலும் வேறுமாதிரியான மறைமுக மனவியல் போரையும் புலிகள் இயக்க உறுப்பினர்கள் மீது பிரதமர் விக்ரமசிங்கா தலைமயிலான ஐக்கிய தேசிய முன்னனி அரசு நடத்தியது. இலங்கைக்கு உதவிவழங்கும நாடுகள் அல்லது இணைத்தலைமை நாடுகள் என்று தம்மை அழைத்துக்கொண்ட ஜப்பான், நோர்வே, ஐரோப்பிய யூனியன் போன்றவை பிரதமர் ரணிலின் இந்த முயற்சிக்கு தாராளமாகவே உதவின.அதுவரை போரில் மட்டுமே ஈடுபாடுகாட்டிய புலிகளின் வலிமைமிக்க படையணிகளை சேர்ந்தவர்களிடம் அவர்களின் மூர்கமான போரிடும் மனநிலையில் சிதைவையை ஏற்படுத்தி அவர்களின் போரிடும் ஆற்றலை நீர்த்துபோக செய்வதோடு, புலிகள் இயக்கதுக்குள்ளேயே முரன்பாடுகளையும் தோற்றுவிக்க முயற்சித்தனர். இச்சதிமுயற்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கா வெற்றியும் பெற்றார். தமது இயக்க உறுப்பினர்கள் மீதும் வடகிழக்கு தமிழ் மக்கள் மீதும் தமக்கிருந்த பிடி தளர்வடைவதை உணர்த பிரபாகரன் அதில் இருந்து சுதாகரித்துக்கொள்ள முயன்றபோது அவரின் புலிகள் இயக்கம் முன்னெப்போதும் சந்திக்காத பெரும் பிளவை மார்ச் 2004ல் சந்தித்தது. இப்பிளவனது புலிகளின் போரிடும் ஆற்றலை சிதைத்ததோடு பின்நாட்களின் அவ்வியக்கத்தின அழிவுக்கு வித்திட்ட பல காரணிகளில் முதன்மையானதாகவும் மாறியது.

பிரதமர் ரணிலின் இச்செயலுக்காக பழிவாங்க்கும் முகமாக 2005ல் ஜனாதிபதிதேர்தலில் அடுத்துவரும் ஆறு ஆண்டுகளுக்கு அவரின் அரசியலை செயலிழக்க செய்யும் செயலை புலிகளின் தலைவர் பிரபாகரன் செய்ய முனைந்தார். அத்தோடு தன்னைப்போலவே கடும் போகுவாதியாக அறியப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்சாவின் வெற்றிக்கு வழிஏற்படுத்தும் வகையிலும் பிரபாகரனின் இந்த செயல் அமைந்தது. இதனால் தனக்கு சாதகமான சூழல் சர்வதேச அரங்கில் மீண்டும் ஏற்படும் எனவும் அவர் நினைத்திருக்க கூடும். ஆனால் அது விரைவிலேயே வேறு மாதிரியான காட்சி களத்தை புலிகளுக்கு உருவாகும் என்பதை அவரால் அப்போது அறியமுடியாமல் போனது அவரின் நீண்டகால போராட்ட வாழ்வின் மிகபெரும் சறுக்கலாகவே இருந்தது.

புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்சவின் இலங்கை வரலாற்ற்ரில் வேறு எவரையும் விட அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்ததோடு சர்வதேச ஆதரவையும் பெற்றுக்கொண்டார். மகிந்த ராஜபக்சவின் எழுச்சியோடு இலங்கை தீவில் தமிழ்பேசும் மக்களுடைய பிரச்சினையை தீர்கவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்ட சர்வதேச சமூகம் அதற்காக தமிழர்கள் வன் அரசியல் மூலம் அத்தீர்வை அடையமுயல்வதை நிராகரித்ததது. அவ்வரசியலை முன்னெடுத்த புலிகள் இயக்கத்தினரையும் அங்கீகரிக்க மறுத்துவிட்டது. பதிலாக புலிகளால் புத்துயிரளிக்கப்பட்ட மென் அரசியலை ஏற்றுக்கொண்டு அதனை பலப்படுத்தி வன் அரசியலை வலுவிழக்க செய்யவும் முயன்றது. பிரபாகரனின் துனையுடன் எழுச்சிபெற்ற ராஜபக்சாவைத்தே பிர்பாகரனின் வீழ்ச்சியை சர்வதேசம் திட்டமிட்டது.
2001 இரட்டை கோபுரதாக்குதலினால் கோபமடைந்த அமெரிக்காவின் பார்வையில் இருந்து தப்பிக்கொள்வதற்காக புலிகள் சமாதானபேச்சுக்களில் தம்மை வலிந்து இணைத்துக்கொண்டபோதே, புலிகளின் திட்டத்தை நன்கு விளங்கி கொண்ட மேற்குலகும் இந்தியாவும் உசாரடைந்தனர். அவர்கள் ஒரு மாற்று திட்டத்தினையும் திட்டமிட்டிருந்தார்கள் என கூறலாம். இதன்படி தமக்கு சாதகமான காலம் வரும்போது புலிகள் மீண்டும் போரைத்தொடங்குவார்கள் என திடமாக நம்பிய அவர்கள் அதையே சாட்டக வைத்துக்கொண்டு புலிகளை ஒழித்துக்கட்டுவதற்குகாக அந்த திட்டத்தை வகுத்திருந்தனர். இலங்கையில் அரசியலிலும் இராணுவத்துக்கும்உறுதியான தலைமைத்துவதை வழங்ககூடியவர்களை அவர்கள் தெரிவுசெய்ய முயன்றனர்.

துரதிஸ்டவசமாக அப்போதைய ஆளும் ஐக்கியதேசிய கட்சியில் அவ்வாறனவர்கள் இல்லாத நிலையிலும் ஜனாதிபதி சந்திரிக்காவின் பதவிக்காலம் முடிவடைகின்ற நிலையிலும் அவருடைய இடத்துக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்குள் நான்காவது இடத்தில் இருந்த மகிந்த ராஜபக்சவே அவர்களின் தெரிவாக இருந்தார். அதன்படி கட்சியின் மூத்த உறுப்பினர்களான ரட்ண ஸ்ரீ விக்ரமநாயக்க, டி.எம். ஜெயரட்ண ஆகியோர் புறந்தள்ளப்பட்டு மகிந்த ராஜபக்ச சிறிலங்கா சுதந்திர கட்சிக்குள் ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு அடுத்த நிலையில் கொண்டுவரப்பட்டு எதிர்கட்சி தலைவராக்கப்பட்டு பின்னர் பிரதமராக்கவும் ஆக்கப்பட்டிருந்தார். பிரபாகரனை ஏமாற்றுவதன் மூலமே இவரால் ஜனாதிபதியாக முடியும் என்ற நிலைதோன்றியபோது இவரை கொண்டே பிரபாகரனின் பலவீனத்தை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டனர்.

ஒரு கட்டத்தில் எதிர்பார்த்தபடியே சமாதான பேச்சுக்களில் இருந்து புலிகள் நழுவதொங்கியபோது திட்டமிட்டபடி ரணில் அரசாங்கம் வெளியேற்றப்பட்டு மகிந்த பிரதமராகப்பட்டார். மகிந்த ராஜபக்ச அரசியல் தலைமைத்துவத்துக்கு உயர்த்தபட்ட அதேவேளை இராணுவத்திலும் மூன்றாவது நிலையில் இருந்த சரத் பொன்சேகாவை ஜனாதிபதி சந்திரிக்கா முதல்நிலைக்கு கொண்டுவந்தார். இராணுவ தளபதியாக பதவிவழங்கப்பட்ட சரத் பொன்சேகா இராணுவத்தை முழு அளவிளான போருக்கு தயார்படுத்தியும் கொண்டார். இறுதியாக முழு அளவில் போர் வெடித்தபோது அரசியல் தலைமையில் மகிந்தவும் இராணுவதலைமையில் பொன்சேகாவும் நன்கு நிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

திட்டமிட்டப்படியே புலிகள் அழித்தொழிக்கப்பட்டு இந்திய-அமெரிக்க கூட்டின் மாற்றுதிட்டம் இலங்கையில் நிறைவேற்றப்பட்டது. உண்மையில் இதுதான் அமெரிக்காவின் திட்டமாக இருந்தாலும் புலிகள் சாதுரியமான செயற்பட்டு சமாதானபேச்சுக்களில் தம்மை வலிந்து இணைத்துக்கொண்டு சமாதான பேச்சுக்கள் என்ற தெரிவை அமெரிக்காவிடம் வலுகட்டாயமாக திணித்துவிட்டனர். தனது நோக்கில் உறுதியாக இருந்த அமெரிக்க இதனை விருப்பமின்றி நகர்த்தி சென்ற அதே வேளை அதற்கு சமாந்தரமாக தமது மாற்று திட்டத்தினை இரகசியமாக இந்தியாவுடன் கூட்டு சேர்ந்து நடைமுறைப்படுத்தவும் தொடங்கியது. மீண்டும் ஒரு யுத்ததை புலிகள் தொடக்கும் போது அவர்களை கூண்டோடு அழித்தொழிக்கும் இந்த திட்டம்தான் அப்போது மிக பரவலாக பேசப்பட்ட ” புலிகளுக்கெதிரான சர்வதேச வலைப்பின்னல்” இதனை பிரதமர் ரணில விக்ரமசிங்கவே செய்வதாகவும் ஒரு இராஜதந்திர தோற்றம் கொடுக்கப்பட்டது.

2000களின் சீனாவின் உலகலாவிய பெரும் எழுச்சியும் தென் சீனக்கடலில் அதிகரித்த அதன் தலையீடும் அமெரிக்காவுக்கு சவாலாகிமையே இலங்கை மீது அமெரிக்க- இந்திய கூட்டு தமது ஆதிக்கத்தை அதிகரிக்க காரணமாகியது.
1.ஆபிரிக்க-மத்தியகிழக்கு பிராந்தியங்களுக்குள் பரவும் சீன செல்லவாக்கை தடுத்தல்.
2.இந்துமகா சமுத்திரத்தில் அதிகரிக்கும் சீனாவின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தல்.
3.தென்சீனக்கடலில் சீனா தனது ஆதிக்கத்தை விரிவாக்கிகொள்வதை தடுத்தல்.
4.மிக வேகமாக வளரும் சீனாவுக்கு தேவையான எண்ணெய் வழங்கல்களில் இடையூறை ஏற்படுத்தல்.
போன்றவற்றிகாக அமெரிக்க- இந்திய கூட்டு இந்து சமுத்திரத்தின் கட்டுப்பாட்டை தொடர்ந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகின்றது. இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களே இந்துசமுத்திரத்தை ஆட்சி செய்ய முடியும் என்பதாலேயே அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கை மீது அதிகளவு ஆர்வம் காட்டத்தொடங்கினர். எனவேதான் 2001செப்டம்பர11ல் இலங்கையின் மாற்றியமைக்கப்பட்ட தலைவிதியை 2009 மே18ல் இந்த வல்லரசுகள் இறுதிசெய்திருந்தன. இந்த வல்லரசுகளின் இந்த முயற்சிதான் ஈழப்போர் IV ஆகும்.
இந்த இறுதிபோரானது முன்னைய போர்களை போன்றல்லாமல் புலிகளின் கட்டுப்பாட்டை மீறிய ஒன்றாகவே இருந்தது. அது அவர்கள் மீது திட்டமிட்டு திணிக்கப்பட்டிருந்தது.

சர்வதேசத்தின் கண்களில் மண்ணைதூவும் தமது வழமையான செயல்களை தொடர முடியாமல் போனமை, தமது இயக்கத்தில் ஏற்பட்ட கருணா தலைமையில் கிழக்கு மாகாண போராளிகளின் பிளவு, தொர்ச்சியாக எஞ்சிய தளபதிகளுக்கிடையில் ஏற்பட்ட சோர்வு மற்றும் போட்டி பொறாமை, வழமையை விட மிக நீண்ட காலத்துக்கு நீடித்த சமாதான செயற்பாடுகளால் போர் சிந்தனையில் இருந்து மக்களும், போராளிகளும் வெளியேறத்தொடங்கியமை, தொடர்ந்து சமாதான் செயற்பாடுகள் என்கின்ற பெயரில் காலம் கடத்துவதால் கருணா பாணியில் மேலும் பிளவுகள் ஏற்படலாம் என அஞ்சிய பிரபாகரன் எப்படியாவது உடனடியாக போரை தொடக்கிவிட வேண்டும் என்கின்ற மனநிலைக்கு கொண்டுவரப்பட்டிருந்தார். அதாவது தம்மையும், தமது இயக்கத்துக்குள் தனது பிடியையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் போரை தொடங்க வேண்டும் என்கின்ற நிலை பிரபாகரனுக்கு ஏற்படுத்தப்பட்டது. வல்லரசுகளின் சதிவலையை உணராத பிரபாகரன் போரை தொடங்குவதற்கு முயன்றார். ரணில் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றி விட்டால் போர் இல்லாமலேயே தனது இயக்கத்தை அழித்துவிடுவார் என அஞ்சிய பிரபாகரன் மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதன் மூலம் போரை தமக்கு ஏற்றபடி தீர்மாணித்து பழைய மாதிரியே தனது அதிகாரத்தை தொடர முடியும் என நம்பினார். இதனால் 2005 நவம்பரில் ஜனாதிபதி தேர்தலில் வட-கிழக்கில் தமிழர்களை வாக்களிக்க விடாமல் மகிந்த ராஜபக்சாவின் வெற்றியை உறுதிசெய்தார். மகிந்த போன்ற கடும் போக்கு அரசியல்வாதியின் அரசாங்கத்துடன் போரை தொடங்கினால் சர்வதேசம் தம்மீதான கெடுபிடிகளை தளர்த்திக்கொள்ளும் என அவர் அப்போது நம்பினார். ஆனால் தன்னை அறியாமல் தனக்கு எதிராக பின்னப்பட்ட சதிவலையில் விழுந்த்து தம்மீது திணிக்கப்பட்ட ஈழப்போர் IVஐ தொடங்கியிருந்தார்.

உண்மையில் சமாதான செயற்பாடுகளை தொடர்ந்திருந்தால் ரணில் அரசை பயன்படுத்தி புலிகள் இயக்கத்தில் பிளவுகளை ஏற்படுத்தி அவர்களை அழித்தொழிப்பது அல்லது அவர்கள் சுதாகரித்துக்கொண்டு போரை தொடங்கினால் மகிந்த அரசாங்கத்தை ஏற்படுத்தி அவர்களை போரில் அழித்தொழிப்பது என்கின்ற திட்டத்தினையே உலக வல்லரசுகள் இலங்கையில் கைக்கொண்டன. இவ்வாறு ஏதோ ஒரு வகையில் புலிகள் இயக்கத்தின் முடிவை 2001லேயே அவை குறித்து வைத்துக்கொண்டன.
தொடரும்..

(Rajh Selvapathi)