மஹிந்தவும் 13 பிளஸூம்

(எம்.எஸ்.எம். ஐயூப்)
“இரண்டு வருடங்களில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும்” என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த மாதம் வடக்கில், கந்தரோடையில் நடைபெற்ற பாடசாலை வைபவமொன்றின் போது கூறியிருந்தார். தமது அரசாங்கத்துக்கு, நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை பலம் இல்லாதிருந்தமையே, கடந்த காலத்தில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க முடியாமல் போனதற்குக் காரணம் எனவும் பிரதமர் அக்கூட்டத்தில் கூறினார். அதேபோல், எதிர்க்கட்சிக் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்‌ஷ, தாம் தலைமை தாங்கப் போகும் பொதுஜன பெரமுன பதவிக்கு வந்தால், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, தமது ஆட்சிக்காலத்தில், தாம் வாக்குறுதியளித்த, ‘13 பிளஸ்’ என்ற திட்டத்தை வழங்குவதாகக் கடந்த வாரம் கூறியிருந்தார்.