13 வது திருத்தச் சட்டம் பற்றிய ஒரு அலசல்

எனது விடை:

அன்பார்ந்த நண்பர்களே! ஆற்றல் மிகு தோழர்களே!
13வது திருத்தம் என்றால்என்ன?


1978ம் ஆண்டு ஜே ஆர். ஜெயவர்த்தனா அரசாங்கம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய அரசியல் யாப்பே இலங்கையில் இப்போதும் நடைமுறையில் அதிகார பூர்வமாக இருக்கும் அரசியல்யாப்பாகும். அது பல திருத்தங்களை பின்னர் நிறைவேற்றியது. 1987ம் ஆண்டு ஏற்பட்ட இந்திய – இலங்கை சமாதான உடன்பாட்டைத் தொடர்ந்து 13வது தடவையாக அரசியல்யாப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலமே இலங்கையில் மாகாண சபைகள் என்னும் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அதன் பிரகாரமே மாகாண சபைகளுக்கான அதிகாரப்பரவலாக்கல் என்னென்ன விடயங்களில் எந்தெந்த அளவில் இருக்கும் என்பவை போன்ற விடயங்களும் அரசியல் யாப்பு ரீதியில் சட்டபூர்வமாக ஆக்கப்பட்டன.

இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன.

இந்த மாகாண சபை அமைப்புக்கள் இலங்கைக்கு புதினமானவையல்ல தென்னிலங்கையில் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக அவை தங்;கு தடையற்று சிங்;களவர்களை மிகவும் பெரும்பான்மையாகக் கொண்ட மாகாணங்களில் – மாநிலங்களில் செயற்பட்டு வருகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்;த ஒன்றே. வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைத்த மாகாண சபையானது பதினாறு மாதங்கள் மட்டுமே செயற்பட முடிந்தது. 2007ம் ஆண்டு வடக்கு-கிழக்கு மாகாணங்களின் மாகாண சபை நிர்வாகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கடந்த பதினைந்து மாதங்களாக கிழக்குமாகாணத்தில் மாகாண சபை செயற்பட்டு வருகின்றது.
அரசியற் தீர்வு குறித்து 13வது திருத்தத்தை மையமாகக் கொண்டு பல குரல்கள்
புலிகளின் அழிவைத் தொடர்ந்து அரசியற் தீர்வு தொடர்பான விடயங்கள் அண்மைக்காலமாக முன்னணிக்கு வந்துள்ளன.


• சிலர் 13வது திருத்தம் முழுமையாக அமுல் செய்யப்பட்டாலே போதும் என்கின்றனர்.
• சிலர் 13வது திருத்தம் போதாது அதைவிடக் கூடுதலாகத் தரப்பட வேண்டும் என்கின்றனர்.
• ஜேவிபி மற்றும் ஹெல உருமயக் கட்சி போன்றவை மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரமோ நில அதிகாரமோ நிதி அதிகாரமோ வழங்கப்படக் கூடாது என நிற்கின்றன.
• மஹிந்த அரசாங்கத்தின் அங்கமாக இருக்கும் தமிழ்ப் பிரதிநிதிகள் சிலர் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரமும் தேவையில்லை நில அதிகாரமும் தேவையில்லை நிதி அதிகாரமும் தேவையில்லை இப்போதுள்ள நடைமுறையே திருப்திகரமாக உள்ளது என்கின்றனர்
• சிலர் 13வது திருத்தமே கூடாது. அது முற்றாக நீக்கப்பட்டு புதிய அதிகாரப் பகிர்வு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கின்றனர்.
• சிலர் ஒற்றையாட்சி முறை நீக்கப்பட வேண்டும் என்கின்றனர்
• சிலர் இந்திய அரசியல் முறை கொண்டு வரப்பட வேண்டும் என்கின்றனர்.
• சிலர் அமெரிக்கா, கனடா மற்றம் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் சமஷ்டி அமைப்பு முறையைத் தவிர வேறெதுவும் பிரச்சினையைத் தீர்க்க உதவாது என்கின்றனர்.
• அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவுக்குத் தலைவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண அவர்கள் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவது ஒரு தற்காலிக ஏற்பாடே, அது பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது, 13வது திருத்தத்துக்கு மாற்றாக ஒரு அரசியற் தீர்வை தமது குழு உருவாக்கி வருவதாகவும் 90 சதவீதமான விடயங்களில் அனைத்துக் கட்சிகளின் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கூறுகிறார். ஆனால் எட்டப்பட்டவை எவை? எட்டப்படாதவை எவை? என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது.
• 2002ம் ஆண்டு நோர்வே பேச்சுவார்த்தையின் போது சமஷ்டி அமைப்புக்கு ஒத்துக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி இப்போது அந்த நிலையை மாற்றி ஒற்றையாட்சிக்குள்ளேயே அரசியற் தீர்வு என்கிறது.
• சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் ஒற்றையாட்சி முறை நீக்கப்பட வேண்டும், அதிகபட்சமான அதிகாரங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறிய சிறீ லங்கா சுதந்திரக் கட்சி இப்போது ஒற்றையாட்சி முறையில் உறுதியாக இருப்பதோடு 13வது திருத்தத்துக்கு உட்பட்ட அதிகாரங்களையாவது வழங்கத் தயாராக இருக்கிறதா என்பதே கேள்விக் குறியாக உள்ளது.
• ஆட்சிக்கு வந்தவுடன் வடக்கு-கிழக்கு மாகாண சபைக்கு அதிகபட்ச அதிகாரங்களை வழங்கப் போவதாகக் கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்கான வரைபுகளைத் தயாரிப்பதற்காக அரசியல் யாப்பு நிபுணர்கள் குழுவையும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழவையும் அமைத்தார். நாட்டுக்குள்ளேயே உருவாக்கப்படும் ஒரு தீர்வையே தாம் முன்வைக்கப் போவதாகக் கூறினார். பின்னர் புலிகளை அடித்து முடித்த பின்னர்தான் அதிகாரப்பரவலாக்கல் நடைபெறும் என்றார். இப்போது அதிகாரப் பகிர்வு பற்றிய பேச்சே அடுத்த ஜனாதிபதித் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் நடந்து முடிந்ததன் பின்னர்தான் கவனத்தில் எடுக்கப்படும் என்கிறார்.
• இதுகாலவரை புலிகளுக்கு ஊதுகுழலாக இருந்து 13வது திருத்தம், இந்திய அரசிலமைப்பு மாதிரி, சந்திரிகா முன்வைத்த தீர்வு, பேராசிரியர் திஸ்ஸ விதாரண முன்வைத்த தீர்வு ஆகிய எல்லாவற்றையும் நிராகரித்து தமிழீழத்தைத் தவிர வேறெதுவும் தீர்வாகாது என்று புலிகளுக்கு ஜிஞ்சா போட்டு முழங்கி வந்த சம்பந்தன், சேனாதிராஜா, சுரேஷ், அடைக்கலநாதன் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஓர் அரசியற் தீர்வைத் தாம் தயாரித்து வருவதாகக் கூறுகிறார்கள். அரசாங்கத்தில் பிழை பிடிப்பதை மட்டுமே கொண்ட அரசியலை நடத்துவதில்தான் இவர்கள் அக்கறையாக இருந்தார்கள். சில வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய அரசின் பிரதிநிதிகள் கடுமையாக வற்புறுத்தியதாலும் மற்றொரு பக்கம் மஹிந்த ராஜபக்ஷவுடன் தமது சுயநலன்கள் தொடர்பாக ஒரு ரகசிய சமாதான உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளவுமே இப்போது தாம் ஓர் அரசியற் தீர்வுப் பெட்டகத்தைத் தயாரிப்பதில் அக்கறை காட்டுவது போல நடந்து கொள்கிறார்கள். பின்னணி என்னவாயினும் அவர்கள் ஓர் அரசியற் தீர்வுப் பெட்டகத்தை தயாரிப்பதற்குள் அவர்களுக்குள்ளேயே குத்து வெட்டும் குழி பறிப்பும் ஆரம்பித்து விடும். அதையெல்லாம் மீறி ஒன்றைத்தயாரித்து வெளியேவிட்டால் அது நல்லதாக இருக்குமோ இல்லையோ! நிச்சயமாக அது அவர்கள் தங்களுக்கே வைக்கும் ஓர் ஆப்பாகவே அமையும்.
கடந்த இருபது ஆண்டுகால அநுபவம்
13வது திருத்தத்தின் கீழ் அதிகாரப்பரவலாக்கல் எப்படி நிறைவேற்றப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள கடந்த இருபது ஆண்டுகால அநுபவம் போதாதா? அதிகாரப் பரவலாக்கலை நிறைவேற்றும் விடயத்தில் ஒரு குறிப்பிட்ட ஜனாதிபதியை அல்லது ஒரு குறிப்பிட்ட ஆட்சியாளர்களை குறை கூறுவது மட்டும் போதுமா? டிங்கிரி பண்டாவை நீக்கி விட்டுப் பார்த்தாலும் கூட ஜெயவர்த்தனா, பிரேமதாச, சந்திரிகா, மஹிந்த என நான்கு ஜனாதிபதிகள் ஆண்டிருக்கிறார்கள். இடையில் இரண்டாண்டுகள் ரணில் விக்கிரமசிங்கா நடைமுறையில் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஒரு பிரதமராக இருந்திருக்கிறார். ஒருவர் மாறி மற்றவர் ஆட்சிபீடத்தில் ஏறிய போதும் அதிகாரப் பரவலாக்கல் விடயம் கழுதை தேய்ந்து கட்டெறும்;பான கதையாகத்தான் நடந்தேறி வருகிறது.
வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் புத்தி கெட்டதனமாக அன்றைய ஜனாதிபதியான பிரேமதாசாவை எதிர்த்து இலங்கை அரசைப் பகைத்து இந்திய அரசுக்கு அணைவாக நடந்து கொண்ட படியால்தான் அப்போது அரசியல் அதிகாரம் நடைபெறாமற் போனது என சிலர் வரலாற்று வியாக்கியானம் செய்கின்றனர். இந்த சிலருக்கு இந்த வியாக்கியானத்துக்கு அடியெடுத்துக் கொடுத்தது யார்? இந்த வியாக்கியானத்தில் உள்ளிடையாக உள்ள அர்த்தங்கள் என்ன – நோக்கங்கள் என்ன போன்ற விடயங்களை நாம் வேறோரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.
கடந்த இருபது ஆண்டுகளாக தென்னிலங்கையில் உள்ள ஏழு மாகாணங்களிலும் பெரும்பாலும் கொழும்பு மைய அரசாங்கக் கட்சியைச் சேர்ந்தவர்களே ஆட்சியில் இருந்து வந்திருக்கிறார்கள். இருந்தும் ஏன் 13வது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை?
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஒரு சடங்கு சம்பிரதாய முதலமைச்சர் என்ற கட்டத்துக்கு மேல் செயற்படுவதற்கு அதிகாரமற்றிருக்கும் அவரும் அரசின் ஆதரவுக் கட்சிக்காரர்தானே. அப்படியிருந்தம் ஏன் அங்கு அதிகாரப்பகிர்வு நடைபெறவில்லை?
இந்த நிலைமை மஹிந்தவின் காலத்தில் மட்டும்தான் என்றில்லை. பிரேமதாசாவின் காலத்திலும் இதுதான், மேல்மாகாண முதலமைச்சராக சிலகாலம் இருந்து மாகாண அதிகாரங்கள் தொடர்பாக அதிருப்திப்பட்டுக் கொண்ட சந்திரிகாவின் ஜனாதிபதிக் காலத்திலும் இதுதான் நிலைமை. எனவே தவறு ஜனாதிபதிகளிடத்தில் எந்தளவு தூரம் இருக்கிறது என்பதை அளவிட முதல் 13வது திருத்தம் அடிப்படையில் கொண்டிருக்கும் தவறுகளை – முரண்பாடுகளை கண்டறிந்து புரிந்து கொள்வது அவசியமாகும்.
இந்திய-இலங்கை சமாதான உடன்பாட்டின்படி அமையவில்லை
13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றினால் பிரச்சினைகளுக்கு குறைந்த பட்சமாயினும் திருப்திகரமான தீர்வு கிடைக்குமா? இதற்கு, 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுதல் என்று சொல்வதன் அர்த்தம் என்ன? என்பது பற்றி ஒரு தெளிவான விளக்கம் வேண்டும். அந்த விளக்கத்தைப் பெற வேண்டுமாயின். 13வது திருத்தத்தில் எவ்வாறு எந்தெந்த விடயங்களில் எந்தெந்த அளவுக்கு அதிகாரப் பகிர்வு சட்டரீதியாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது? என்ற கேள்விக்கு விபரமான புரிதல் வேண்டும். 13வது திருத்தம் பற்றிய அறிவும் புரிதலும் ஐந்து குருடர்கள் யானையின் ஒவ்வொரு பாகத்தையும் தடவிப் பார்த்து தமக்குத் தெரிந்த உதாரணங்களைக் கொண்டு புரிந்து கொண்டது போல அமையக் கூடாது. அல்லது காணாத கடவுளை வர்ணித்துத் தேவாரம் பாடுவது போலவும் அமையக் கூடாது.
1987ம் ஆண்டின் இந்திய இலங்கை சமாதான உடன்பாட்டின்படிதான் 13வது திருத்தம் உருவாக்கப்பட்டது என்பது பலரதும் அபிப்பிராயம். இந்த அபிப்பிராயமே அடிப்படையில் தவறாகும். இந்திய இலங்கை உடன்பாட்டில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சுருக்கமாக பின்வருமாறு:

  1. 1986ம் ஆண்டில் இந்திய மற்றும் இலங்கை அரசுப் பிரதிநிதிகளுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவாத்தைகளின் அடிப்படையில் மாகாண சபைகளுக்கு அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
  2. வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒருங்கிணைந்த ஒரே மாகாண நிர்வாகமாக அமைக்கப்படுதல் வேண்டும். மாகாண சபை செயற்படத் தொடங்கி ஓராண்டுக்குள் கிழக்கு மாகாணத்தில் ஓர் சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு இணைந்த மாகாணங்கள் தொடர்ந்து இணைந்திருப்பதா அல்லது தனித்தனியாவதா என்பது தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

இவை தொடர்பாக இந்திய அரசாங்கம் சில எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருந்ததையும் நாம் புரிந்த கொள்ள முடியும்:
ஒன்று – புலிகளும் இந்தியாவின் முன்முயற்சிக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள்,
இரண்டு – ஓராண்டுக்குள் சமாதானமான நிலைமை ஏற்பட்டு பூரணமாக ஜனநாயகரீதியான சூழல் ஏற்பட்டு விடும்
மூன்று – உள்நாட்டிலும் இந்தியாவிலும் அகதிகளாகிப் போயிருந்த மக்கள் மீண்டும் அவரவரது சொந்த இடங்களில் குடியேறிவிடுவார்கள்:
நான்கு – அந்த ஓராண்டுக்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியற் தலைவர்களுக்கிடையில் ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டு விடும்.
எதிர்பார்க்கப்பட்ட இவையெதுவும் ஏற்படவில்லை. புலிகளின் அரசியற் பலவீனங்களைப் பயன்படுத்தி ஜெயவர்த்தனா தனது அரசியற் காய்களை நகர்த்தி புலிகளைக் கொண்டே தமிழர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காமல் இலங்கை அரசிடமிருந்து இந்தியா எதிர்பார்த்தவற்றைப் பொய்யாக்கிவிட்டார். சிங்களத் தலைவர்களை நம்ப முடியாது என்று சொல்லிக் கொண்டே சிங்கள இனவாதத் தலைவர்களுக்கு துணையாகச் செயற்பட்டு தமிழர்களின் போராட்டத்தை பின்தள்ளிவிட்டதுதான் பிரபாகரன் செய்த சாதனை.
ஜெயவர்த்தனா தானே தனிப்பட்டரீதியில் முன்னின்று தனது சட்ட ஆலோசகர்கள் சட்ட வரைவாளர்களைக் கொண்டு காதும் காதும் வைத்தது போல இரவோடிரவாக சில இரவுகளிலேயே 13வது திருத்தத்தை வரைந்து முடித்தார். அதனை ஒரேநாளிலேயே நாடாளுமன்றத்தில் சட்டமாக்கினார். 13வது திருத்தம் பார்வையில் இந்திய அரசியலமைப்பில் மாநிலங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளித்தது போலவே வடிவமைக்கப்பட்டது. 13வது திருத்தம் தொடர்பாக திருப்தியற்ற இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அப்போதைய வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவை இலங்கைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் ஜெயவர்த்தனா தந்திரமாக எதற்கும் ஒப்புக் கொள்ளாமல் தவிர்த்துக் கொண்டார். அந்த நேரத்தில் புலிகள் இந்தியப் படைகளுக்கு எதிராக சண்டையில் ஈடுபட்டு இந்திய அரசாங்கத்தை இந்திய அளவிலும் சர்வதேச ரீதியிலும் சங்கடத்தில் ஆக்கி வைத்திருந்தது. இது வரலாறு. எனவே 13வது திருத்தம் சட்டமாக ஆக்கப்பட முன்னர் இந்தியாவின் பார்வைக்கு காட்டப்படவுமில்லை. அதனை இறுதியாக ஆக்குவதில் இந்தியாவின் நேரடிப் பங்களிப்போ அல்லது ஆலோசனையோ பெறப்படவுமில்லை.
உச்சநிதி மன்றத்திலும் உரசிப் பார்க்க வேண்டும்
13வது திருத்தம் இதுவரை காலமும் சட்டரீதியில் முழுமையாக நிறைவேற்றப்படவில்லையா?
அப்படியானால் எவையெவை நிறைவேற்றப்படவில்லை?
அல்லது நிறைவேற்றப்பட்டுள்ளவைகள் குறைபாடான முறைகளில் நிறைவேற்றப்பட்டுள்ளனவா?
அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு விடயங்களை முழுமையாக நிறைவேற்றுதல் அல்லது அரைகுறையாக நிறைவேற்றுதல் என மேற்கொள்ளமுடியுமா?
அரசியல் யாப்பானது வெளிப்படையாக சட்டவாக்க மற்றும் நிறைவேற்று அதிகாரங்களை பகிர்ந்தளித்துள்ள போது அந்த அதிகாரங்களை யாராவது யாருக்காவது கொடுத்தல் அல்லது கொடுக்க மறுத்தல் என விடயங்கள் உள்ளனவா?
அரசியல் யாப்புபூர்வமாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மத்திய அரசு தரமாட்டேன் என்று மறுக்க முடியுமா?
அப்படி மறுக்கப்படுகின்ற விடயங்களுக்கு தீர்;வுதர வேண்டியது ஜனாதிபதியா? மத்திய அமைச்சரவையா? நாடாளுமன்றமா? அல்லது உச்சநீதிமன்றமா?
போன்ற கேள்விகளை நீங்கள் உங்களுக்குள்ளேயே எழுப்பி விடைகளைத் தேடுவது ஓர் அதிகாரப் பகிர்வு முறையைப் பற்றிய பொது அறிவைப் பெறுவதற்கும், 13வது திருத்தத்தைப் புரிந்து கொள்வதற்கும் அவசியமாகும்.
இந்தியாவில் உள்ளது போல இலங்கையிலும் உச்சநீதிமன்றமே அரசியல் யாப்பின் காவலன் – அரசியல் யாப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள நீதி நியாயங்களை நிலைநிறுத்த வேண்டிய கடமையாளன். மத்திய மற்றும் மாகாண ஆட்சி அமைப்புக்களுக்கிடையில் அதிகாரம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் வரும்போது தீர்த்து வைக்கும் வல்லாண்மை உச்சநீதிமன்றத்துக்கே உண்டு. 13வது திருத்தத்தின் உண்மையான அதிகாரப் பகிர்வு அமைவை உச்ச நீதிமன்றத்திலேயே பரிசோதித்துப் பார்த்தல் வேண்டும்.
மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் இடையே அதிகாரப் பகிர்வு குறித்த சிக்கல் ஏதும் ஏற்படுமாயின் அந்தப் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசோ அல்லது மாகாண அரசோதான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும். அப்படியானால், இப்போதுள்ள எந்த மாகாண முதலமைச்சராவது 13வது திருத்தத்தின்படி நிறைவேற்ப்படாதவற்றை நிறைவேற்றும்படி கேட்டு உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கும் நிலையில் உள்ளாரா?;. கிழக்கு மாகாணம் உட்பட எல்லா மாகாண ஆட்சிகளும் மத்திய ஆட்சியாளரின் சார்பான ஆட்சிகளாக இருக்கும் நிலையில் யார் அவ்வாறான வழக்கைத் தொடுக்க முன்வருவார்கள்?;
கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்கப்பட்டு சில வாரங்களில் அனைத்து மாகாண முதலமைச்சர்களின் மாநாடு செயற்பட ஆரம்பித்தது. மாகாணங்களுக்கு அதிகாரங்கள் போதிய அளவு பகிரப்படவேண்டும் என்ற குரல் எழுந்தது. ஆனால் ஏதோ காரணத்தால் அந்தக் குரல் எழும்பிய அதே வேகத்திலேயே அடங்கிப் போய்விட்டது. அதிகாரப் பகிர்வு தொடர்பான ஒரு வழக்கை ஏதாவது ஒரு பொது நிறுவனமோ அல்லது ஒரு நபரோ பொது நலன் சம்பந்தப்பட்ட வழக்கு என உச்ச நீதி மன்றத்தில் தொடுக்கலாமா என ஆராய்ந்து அதற்கேற்றபடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இவையெல்லாம் செய்யும் அக்கறையும் போக்கும் அரசியல் சக்திகள் மத்தியில் நிலவினால் தான் அதிகாரப் பகிர்வு பற்றிய ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகும். அத்துடன் 13வது திருத்தம் பற்றிய தெளிவான நிலைமைகளும் வெளிப்படும். சிங்களப் பேரினவாத சக்திகள் வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதிலும் அதிகாரப்பகிர்வுக்கு எதிராகவும் உச்சநீதி மன்றத்தைப் பயன்படுத்துவதில் கொண்டிருக்கும் அக்கறையும் ஈடுபாடும் ஜனநாயக முற்போக்கு சக்திகளிடம் அவர்களது இலக்குகள் தொடர்பாக காணப்படவில்லை என்பதே வெளிப்படையான உண்மையாகும்.
தவறு 13வது திருத்தத்துக்கு உள்ளேயே இருக்கிறது
அரசியல் யாப்பின் 13வது திருத்தம் அதிகாரப் பகிர்வு விடயத்தில் சரியாக அமையாத – அமைக்;கப்படாத ஒரு சட்டமே.
எனது இக்கூற்றில் உள்ளடங்கியுள்ள அர்த்தங்களை; பின்வருமாறு: காணுங்கள்;-
• மிகப் பெரிய அளவில் மத்திய அரசுக்கு வசதியாக விளக்கம் கொள்ளக் கூடிய வகையில் வசன அமைப்புக்கள் உள்ளன. நிதி அதிகாரம், நிதி வளங்களின் பகிர்வு, நிர்வாக உறவுகள், நிர்வாக வளங்களின் பகிர்வு, மற்றும் நிலத்தின் மீதான அதிகாரங்கள் போன்ற விடயங்களில் குழப்பமான வாக்கிய அமைப்புக்களையே கொண்டுள்ளது.
• மாகாண சபைகள் நிதிவளத்துக்கு மத்திய ஆட்சியாளர்களின் தயவில் தங்கியிருப்பதால் அதிகாரப் பகிர்வின் மூன்றாவது நிரலிலுள்ள அதிகாரங்கள் அனைத்தும் நடைமுறையில் மத்திய அரசின் நிறைவேற்றதிகாரத்துக்கு உட்பட்டவையாகவே உள்ளன. அத்துடன் மாகாணங்களுக்கு தெளிவாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நிறைவேற்றுவதற்குக் கூட மாகாண ஆட்சிகளுக்குரிய நிதிஆதாரங்கள் போதியதற்றவையாகவே உள்ளன.
• மாகாண அதிகாரத்துக்கு உட்பட்ட விடயங்களிலும் நான்காந்தர ஊழியர்களைத் தவிர ஏனைய அனைத்து வேலை நியமனங்களிலும் மத்திய அரசின் ஆதிக்கம் அதிகாரம் செலுத்தும் விதமாக சட்ட ஓட்டைகளைக் கொண்டதாகவே 13வது திருத்தம் அமைந்துள்ளது.
• 13வது திருத்தத்தில் பொலிஸ் சட்டம் ஒழுங்கு என்ற தலையங்கத்தில் விடயங்கள் அதிகாரப் பகிர்வு நிரலிலும் பின்னிணைப்பிலும் நீளமாக சொல்லப்பட்டிருந்தாலும் சாராம்சத்தில் அவை தொடர்பாக அதிகாரங்கள் எதுவும் அர்த்தமுடையவையாக வழங்கப்படவில்லை.
• மத்திய அரசுக்கான நிரலிலுள்ள விடயங்களுக்கு மட்டுல்லாது மாகாண நிரலிலுள்ள விடயங்களுக்கும் பொதுநிரலிலுள்ள விடயங்களுக்கும் மத்தியில் அமைச்சுக்களும் அமைச்சர்களும் இருப்பதனால் நிதி முழுவதுவும் அங்கேயே பகிரப்படுகிறது. இதனால் மாகாண அமைச்சுக்கள் பெயரளவில் இருந்து கொண்டு ஈயோட்ட வேண்டியவையாக ஆக்கப்பட்டிருக்கின்றன.
• பிரேமதாசா காலத்தில்; அரசாங்க அதிபர்களைத் தவிர ஏனைய பொது நிர்வாக அதிகாரிகள் மாகாண ஆட்சிகளுக்கு உட்பட்டவர்களென இருந்தது. ஆனால் பின்னர் அதுவும் இல்லாமற் போனது. ஆளணிகளின் பகிர்வு தொடர்பாக 13வது திருத்தம் மௌனமாக இருப்பது மத்திய அரசுக்கு அதிகாரங்களை ஆக்கிரமிப்பதற்கு மிகவும் வசதியாக உள்ளது.
• மாகாண ஆளுநர்கள், அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் உத்தியோக பூர்வ தராதரங்கள் என்ன என்பது தெளிவாக நிர்ணயிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற ஒருவரை விட மாகாண அமைச்சர் ஒருவர் குறைந்த அரச தரமுடையவராகவே நடத்தப்படுகிறார். ஒரு மத்திய அமைச்சரையும் விட உயர்ந்த தரநிலை கொண்ட ஆளுநர் பதவிக்கு பதவியிலிருக்கும் மத்திய அரச நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள். இவையெல்லாம் மாகாண சபை அமைப்பு முறையைத் தரக் குறைவாக்கும் விடயங்களாக உள்ளன.
13வது திருத்தத்தின் மூலமான அதிகாரப் பரவலாக்கல் என்பது அது நடைமுறைக்கு வந்து இருபது ஆண்டுகளாகியும் இன்னமும் ஒரு குறைந்த பட்ச நம்பிக்கையையும் தரும் ஒன்றாக அமையவில்லை என்பதே உண்மையாகும்.
13வது திருத்தத்தை வைத்து ஒன்றுமே உருப்படியாகச் செய்ய முடியாதா என்று என்னைக் கேட்டால் தற்காலிகமாக அதனை நல்ல நோக்கங்களை சாதிப்பதற்காகப் பயன்படுத்த முடியும் என்று சொல்வேன். ஆனால் அதற்கு கொழும்பு மைய ஆட்சியாளர்களும் உச்சநீதிமன்றமும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.
உச்சநீதிமன்றத்தினூடாக அதிகாரப் பகிர்வு
அரசியல் யாப்பில் உள்ள 13வது திருத்தம் வழங்கியுள்ள அதிகாரப்பகிர்வுகளை செயற்பட வைப்பதற்கு உச்சநீதிமன்றத்தை அணுகுவது தவிர்க்க முடியாத – பரீட்சித்துப் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதன்மூலம் நாம் எதிர்பார்க்கக் கூடிய திருப்திகரமான நிலையை எந்தளவு தூரம் அடையலாம் என்பதை இப்போதே எதிர்வு கூற முடியாது. எனினும் அதை முறையாக அணுகுவதன் மூலம் குறிப்பிட்ட சில பலாபலன்களை அடைய வாய்ப்புகள் உண்டு..
உச்சநீதிமன்றத்தால் 13வது திருத்தத்தில் கூறப்பட்டவற்றை விட மேலதிகமாக எந்தவொரு அதிகாரத்தையம் மாகாண சபைகளுக்குத் தரமுடியாதெனினும் 13வது திருத்தம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை விரிவான, ஆழமான ஒரு தலையீட்டை மேற்கொள்வதற்கு வைக்க வேண்டியது அவசியமாகும். உச்ச நீதிமன்றம் 13வது திருத்தத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் கவனத்தில் எடுத்து 13வது திருத்த விடயங்கள் அரசியல் யாப்பில் கொண்டுவரப்பட்டதன் அடிப்படைகளையும் கவனத்திற் கொண்டு கீழே கூறப்பட்டுள்ள பிரதானமான மூன்று வகைப்பட்ட விடயங்களுக்கு உரிய தெளிவான சட்ட விளக்கங்களைத் தருவதோடு அவற்றிற்கு அமைவான கட்டளைகளையும் பிறப்பித்தல் வேண்டும் அல்லாதவரை 13வது திருத்தத்தின் குழப்பங்கள் தெளிவடைய மாட்டா. அந்த விடயங்களாவன:-

  1. 13வது திருத்தத்தில் உள்ள அனைத்து விடயங்களையும் முழுமையாக சரியாக மத்திய அரசாங்கம் நிறைவேற்றாமையைக் கண்டறிதல் – உதாரணமாக, தேசிய மற்றும் மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்களை நியமிக்காமை, மாகாணங்களுக்கு உரிய நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களையும், இலாக்காக்களின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களையும் உரிய நிறைவேற்று அதிகாரங்களுக்கு அமைய இன்னமும் பகிரப்படாமை போன்றன:
  2. 13வது திருத்தத்தில் உள்ள சில அல்லது பல விடயங்களில் மத்திய அரசாங்கம் சட்டத்துக்கு முரணாகச் செயற்படுகின்றமையை வெளிப்படுத்தல் – உதாரணமாக, கிழக்கு மாகாணத்தில் நிதி அமைச்சர் பதவியையும் அதிகாரங்களையும் ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சருக்கு கையளிக்க மறுப்பது, ஆசிரியர் வேலைகளை மத்திய அமைச்சரே வழங்குவது, வைத்தியசாலை மற்றும் சுகாதார விடயங்களின அதிகாரங்களை இன்னமும் மத்திய அமைச்சரே வைத்திருப்பது போன்றவை: :
  3. 13வது திருத்தத்தில் உள்ள சில முக்கியமான சொற்பதங்களுக்கு சரியான சட்ட விளக்கங்களைத் தருதல் – உதாரணமாக, மாகாணங்களின் வரிவருமானங்கள், பொது நிரலில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு விடயத்தின் மீதான நிறைவேற்றதிகாரம் எந்த ஆட்சியமைப்புக்கு உரியது, ஆளுநரின் நிறைவேற்றதிகார வரையறைகள்; போன்ற விடயங்கள்.
    அதிகாரப் பகிர்வு விடயத்தை முழுமையாகவும் சரியாகவும் மேற்கொள்வதில் பெரும்பாத்திரம் மத்திய அரசபீடத்தில் இருப்பவர்களாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். அவர்களிடம் அதற்கு அமைவாக தாமாகவே விருப்பம் கொண்ட மனம் வேண்டும், தீர்மானகரமான அரசியற் துணிவு வேண்டும், சாதிக்கும் வேகம் கொண்ட ஈடுபாடு வேண்டும். இருபது ஆண்டுகளுக்கு மேலாக வெல்லப்படவே முடியாதவர்கள் என்று கருதப்பட்ட புலிகளையே ஆணிவேர் வரை அழித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விரும்பித் துணிந்தால் அவரால் முடியாதென்றில்லை. ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைக்கத் தயாரென்கிறது, புலிகளின் தடங்கல் எதுவும் தற்போது கிடையாது. இந்தியா உட்பட உலகின் பெரும்பான்மையான நாடுகளின் பூரண ஒத்துழைப்பும் உதவிகளும் நிச்சயமாகக் கிடைக்கும், தமிழ்நாட்டிலிருந்தும்; திருப்திகரமான ஆதரவைப் பெறமுடியும் தமிழ் ஜனநாயக சக்திகள் மிகவும் உற்சாகத்தோடு செயற்படுவார்கள். ஆனாலும் அரசாங்கம் அந்தப்பாதையில் செயற்படத் தயாராக இருக்கின்றதா என்பதற்கான விடை இன்னமும் தெளிவாக இல்லை.
    13வது திருத்தம் நிரந்தரமான அரசியற் தீர்வுக்கான அடிப்படையாக அமைய முடியாது என்பது அறிந்தும் அறியாமலும் பலராலும் உச்சரிக்கப்படும் ஒன்றாக உள்ளது. ஆனபடியாற்தான் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அன்று மாகாண சபை அதிகாரத்தைக் கைவிட நேர்ந்தது. எமது அந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டபடியாற்தான் சந்திரிகா அவர்கள் ஓர் அரசியற் தீர்வை முன்வைத்தார். 13வது திருத்தம் போதியதல்ல சரியானதல்ல என்றபடியாற்தான் மஹிந்த ராஜபக்ஷ பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் கமிட்டியை ஆக்க வேண்டி ஏற்பட்டது. எனவே 13வது திருத்தம் திருப்திகரமானதல்ல என்பது மீண்டும் கூக்குரலிடப்பட வேண்டிய ஒரு விடயமல்ல.
    இப்போதுள்ள அரசியல் யாப்பில் ஏற்கனவே 13வது திருத்தம் என்ற வடிவில் அதிகாரப் பகிர்வு உள்ளது என்ற வகையில் இப்போதைக்கு மக்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒரு நல்ல நோக்குடன் தற்காலிகமாக – அதிகாரப்பகிர்வு விடயங்களை உடனடியாக முன்னெடுக்க வேண்டியது அவசிமான ஒன்று. முறையாக உள்ளடக்கங்களைக் கொண்ட சரியானதொரு அரசியல் தீர்வின் வரைவு இறுதி செய்யபட்டு சட்டமாக்கப்படுவதற்கு ஒரு கால அளவு கட்டாயமாகத் தேவைப்படும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது ஒரு தீய உள்நோக்கம் கொண்ட திட்டமிடப்பட்ட காலதாமதமாக இருக்கக் கூடாது. அந்த இடைக்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடியான அரசியல் நடவடிக்கையாக 13வது திருத்தத்தை மக்கள் மத்தியில் நம்பிக்கைகளைக் கட்டியெழுப்பும் விதமாக நிறைவேற்றப்படலாம்.
    ஆனால், பழைய குருடி கதவைத் திறவடி என்பது போல 13வது திருத்தம் தொடர்ந்தும் கையாளப்பட்டால் இருக்கும் சிறிய நம்பிக்கைகளும் சிதறடிக்கப்பட்டுவிடும். 13வது திருத்தத்தை ஆக்கபூர்வமாக செயற்பட வைப்பதற்குரிய நடவடிக்கைகளை தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க சக்திகள் செயற்படாமல் இருப்பதுவும் தவறாகும்.
    அர்த்தமுடைய வகையாக 13வது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டுமானால் அது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படையான விடயங்கள் மிகவும் அவசியமாகும். அவற்றில் பிரதானமானவற்றை பின்வருமாறு வரிசைப்படுத்துகிறேன்:
  4. 13வது திருத்தத்தை முடிந்த அளவு மாகாண சபைகளுக்கு சார்பாக விளக்கமளிக்கும்படி அதிகாரம் கொண்ட அதிகாரப் பகிர்வு ஆணைக்குழு (னுநஎழடரவழைn ஊழஅஅளைளழைn) ஒன்று ஜனாதிபதியால் கட்சிசார்பற்ற நிபுணர்களைக் கொண்டு உடனடியாக அமைக்கப்பட வேண்டும். இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே அதிகாரப் பகிர்வின் நடைமுறை விடயங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்:
  5. மதிப்புக் கூட்டு வரி (ஏயுவு) உட்பட விற்பனவு வரிகள் (ளயடநள வுயஒநள) மதுபான வரிவருமானங்கள் (வுயஒநள யனெ ழவாநச சநஎநரெநள ழn யடஉழாழடள), சொத்துமாற்ற வரிகள் (ளுவயஅp னரவநைள ழn Pசழிநசவல வுசயளெகநசள) போன்றன உட்பட மாகாண சபைகளின் வரிவருமானங்களென 13வது திருத்தத்தில் உள்ள 19 வகை வருமானங்களும் திரட்டப்பட்டு காலதாமதமின்றி முழுமையாக மாகாண ஆட்சிகளுக்கு உரியபடி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்; அத்துடன் வருமானவரி (ஐnஉழஅந வுயஒ), சுங்க வரிகள் (ஊரளவழஅ னுரவநைள) மற்றும் வெளிநாட்டு வர்த்தக (குழசநபைn வுசயனந) வரிகளிலிருந்து கிடைக்கும் வருமானத்திலும் கணிசமான பங்கு மாகாண அரசுகளுக்கு தேசிய நிதி ஆணைக்குழுவின் சிபார்சின் பிரகாரம் பகிரப்பட வேண்டும். மத்திய அரசாங்கத்தால் மட்டுமே நிர்வகிக்கப்பட வேண்டிய விடயங்களான நாட்டின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு, வெளிநாட்டுறவு, கப்பல் துறை மற்றும் துறைமுகங்கள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்கள், றெயில்வே, மத்திய நிதி நிர்வாகம், வங்கிகள், தொலைத் தொடர்புகள், தொலைக்காட்சிகள், மற்றும் றேடியோ கட்டுப்பாடுகள், வெளிநாட்டு வர்த்தகம் போன்ற நாடு தழுவிய மற்றும் தேசிய விடயங்களைத் தவிர ஏனைய விடயங்கள் பெரும்பாலும் மாகாண சபைகளால் நிறைவேற்றப்படுபவையாக இருக்க வேண்டும் என்ற உணர்வோடு மத்திய நிதிவளங்கள் மாகாண அரசுகளுக்கு வழங்கப்படல் வேண்டும்.
  6. அதற்கு உரிய வகையில் குறைந்த பட்சமான அமைச்சுக்களையும் நிர்வாகக் கட்டமைப்புக்களையும் வைத்துக் கொண்டு ஏனையவற்றை மாகாண அரசுகளிடம் விட்டுவிட வேண்டும். இதன் மூலம் அநாவசியமாக உருவாகும் இரட்டை நிர்வாக அமைப்புக்களையும் அதனால் ஏற்படும் இரட்டைச் செலவீனங்களையும் தவிர்ப்பதோடு மாகாண அரசுகளை மக்கள் மத்தியில் சமூக பொருளாதார அபிவிருத்தி விடயங்களில் காரியதாக்கம் கொண்டவையாக செயற்படும் நிலையை உருவாக்க வேண்டும்.
  7. மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட பெருவீதிகள், சிறப்பு வீட்டுத்திட்டங்கள், குறிப்பிட்ட சமூக நலத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் என்பன மாகாண அரசின் நிறைவேற்று நிர்வாகங்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படுதல் வேண்டும். அவ்விடயங்களில் மத்திய அரசாங்கம் மாவட்டங்கள் தோறும் தனது மேற்பார்வை அதிகாரிகளைக் கொண்டிருப்பதைத் தவிர கீழ்நிலைப்பட்ட இலாக்காக்களைக் கொண்டிருக்கக் கூடாது.
  8. அரசாங்க அதிபர்கள் உட்பட பொதுநிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் அந்தந்த மாகாண ஆட்சிகளின் நிர்வாகங்களுக்கு உட்பட்டவர்களாக ஆக்கப்படுதல் வேண்டும். மத்திய அரசின் விடயங்களை நிறைவேற்றுவதில் அந்த உயர் நிர்வாக அதிகாரிகள் மத்திய அரசின் கட்டளைகளுக்குப் பணிவாக செயற்பட வேண்டும.; அப்படியில்லையாயின் மாகாண ஆட்சிகள் தமக்கென மாவட்டங்கள், பிரதேச எல்லைகள், கிராமங்கள் வரை பொது நிர்வாக அதிகாரிகளையும் ஊழியர்களையும் தனியாகக் கொண்டிருக்க வகை செய்ய வேண்டும். மாறாக மத்திய அரசின் அதிகாரிகளையும் ஊழியர்களையும் மாகாண ஆட்சிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது ஒரு நிர்வாகமனிதனை தலைகீழாக நடக்க வைக்கும் செயற்பாடாகும்..
  9. புனர்வாழ்வு வேலைகளும், மத்திய அரசின் கட்டிடங்கள் தவிர்ந்தவற்றின் அனைத்து புனரமைப்பு வேலைகளும் முழுமையாக மாகாண அரசுகளின் அதிகாரத்துக்கு உட்பட்டவையாக ஏற்பாடு செய்யப்படுதல் வேண்டும். அந்தவகையில் அவற்றுக்கான நிதிகள் மாகாண நிர்வாகத்துக்கு உட்பட்டவையாக ஆக்கப்பட வேண்டும்:
  10. விவசாயம், நீர்ப்பாசனம், மீன்பிடி, கிராமிய அபிவிருத்தி, நகரங்களின் அபிவிருத்தி, சிறு தொழில்கள் மற்றும் குடிசைக் கைத்தொழில்கள், சமூக நலன் சேவைகள், கூட்டுறவு அமைப்புக்கள், மாகாணங்களுக்குள் வர்த்தகம், மாகாணங்களுக்குள் போக்குவரத்து, உள்ளுர் சுற்றுலாத்துறை போன்றவையும் அவை தொடர்பான விடயங்களும் முழுமையாக மாகாண அரசுகளின் அதிகாரங்களாக அமையும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
  11. மத்திய அரசின் கல்வி நிலையங்களென விசேடமாகக் குறித்து அறிவிக்கப்பட்டவற்றைத் தவிர ஏனைய அனைத்து பள்ளிக்;கூடங்களினதும் மற்றும் தொழில் பயிற்சிக் கல்வி நிலையங்களினதும் அபிவிருத்தி, நிர்வாகம், அசிரியர்கள் நியமனம் போன்றவற்றின் முழுமையான அதிகாரம் மாகாண சபைகளுக்கு உரியதாக விடப்பட வேண்டும்.
  12. மத்திய அரசுக்கு உட்பட்டதென திட்டவட்டமாகக் கூறப்பட்டவற்றைத் தவிர ஏனைய அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய சேவைகளின் விருத்தியும் நிர்வாகமும், மேலும் சுகாதாரம், மருந்துகள் மற்றும்; தொடர்பான அதிகாரங்களும் தலையீடற்ற விதமாக மாகாண அரசுகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
  13. மாகாண பொலிஸ் பிரிவானது மாகாணசபையின் சட்டங்களுக்கும் மாகாண முதலமைச்சரின் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவாக செயற்பட வேண்டும் என்ற நிர்வாக ஏற்பாடொன்றை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும். அத்துடன் மாகாண மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுக்களை காலதாமதமின்றி நியமிக்க வேண்டும்:
  14. காடு மற்றும் அரச நிலங்களின் பாவனை தொடர்பாக மத்திய அரசு கொள்ளும் சுற்றுச் சூழல் கொள்கைகளுக்கு அமைய மாகாண அரசுகளே நிலப்பாவனை, நில நிர்வாகம், நில அபிவிருத்தி, நிலப்பகிர்வு, அரசநிலங்களில் குடியேற்றங்கள் மற்றும் காட்டு வளங்கள் பற்றிய விடயங்களில் முழுமையான நிறைவேற்றதிகாரம் கொண்டிருக்க வகை செய்தல் வேண்டும்.
  15. தேர்தல் நடத்துவதைத் தவிர உள்ளுராட்சி அமைப்புக்கள் தொடர்பான அனைத்து அதிகாரங்களும் மாகாண ஆட்சிகளுக்கு உட்பட்டவையே என்பது உறுதியாக நிலைநாட்டப்பட வேண்டும்.
    அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தை இந்திய இலங்கை சமாதான உடன்பாட்டுக்கு அமைவாக நிறைவேற்ற வேண்டுமாயின் – தமிழர்களின் அரசியற் கோரிக்கைகளை குறைந்த பட்சமாயினும் முறையாகத் தீர்த்து வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பது உண்மையானால் நான் மேலே குறிப்பிட்டுள்ள பிரதானமான விடயங்களை, குறிப்பிட்டுள்ள பிரகாரம் நிறைவேற்றினால்தான் 13வது திருத்தம் பயனுடையதாக இருக்கும். அப்போதுதான் 13வது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்படும் அல்லது நிறைவேற்றப்பட வேண்டும் என்று சொல்வதில் உண்மையான அர்த்தம் ஏற்பட முடியும்.
    அதைவிடுத்து மாறாக அரசியல் மற்றும் ராஜரீக அழுத்தங்களைத் திசை திருப்புவதற்காக மேலெழுந்தவாரியாக 13வது திருத்தத்தை முழமையாக நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி அளிப்பதிலோ அல்லது 13வது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று வாக்குவேட்டைக்காக தேர்தற் கோஷம் போடுவதிலோ அதன் அர்த்தத்தைக் காணமுடியாது. அதேபோல 13வது திருத்தத்தைக் கண்ணை மூடிக் கொண்டு அது புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்று சொல்வதுவும் தவறாகும். 13வது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்படக் கூடாது என சிங்கப் பேரினவாத சக்திகள் கூச்சல் போடுவதிருந்தே 13வது திருத்தத்தில் பல நல்ல விடயங்கள் இருக்கின்றன என்பதை பொது அறிவுடைய எவரும் சூசமாகப் புரிந்து கொள்ளலாம்.
    நான் வரிசைப்படுத்தியுள்ள விடயங்கள் எதுவும் அதீதமான கறிபனைகளோ அல்லது 13வது திருத்தத்தை மீறியவையோ அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் 13வது திருத்தத்தை சரியாக அமுல்படுத்தி மாகாணங்களுக்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும் – மாகாண ஆட்சிகள் அரசியல்ரீதியல் அர்த்தபுஷ்டி உடையவையாக இருக்க வேண்டும் என்றால் – மக்களைத் திருப்திப்படுத்தும் வகையில் காரியசித்தி உடையவையாக அவை செயற்பட வேண்டுமென்றால் நான் கூறியுள்ளபடி 13வது திருத்தம் வியாக்கினம் (iவெநசிசநவயவழைn) தரப்பட்டு விடயங்கள் நடைமுறையாக வேண்டும்.
    அதற்கு மாறாக கடந்த இருபது ஆண்டுகளாக தென்னிலங்கையின் ஏழு மாகாண ஆட்சிகளுக்கும் கடந்த பதினைந்து மாதங்களாக கிழக்கு மாகாணத்துக்கும் வழங்கப்பட்டது போல்த்தான் இனியும் தொடர்ந்து மாகாண ஆட்சிகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுமாயின் இந்த மாகாண ஆட்சிகள் வெறும் வெள்ளை யானைகளே. இது மத்திய ஆட்சியாளார்கள் உலகுக்கு வேடிக்கை காட்டவும், சுமார் 400 பேருக்கு மாகாண சபை உறுப்பினர் என ஊரைச் சுத்தும் பதவியளிக்கவும் 45பேருக்கு மாகாண அமைச்சர்களென மக்கள் பணத்தில் ஒரு பகுதியைச் சுருட்டும் வாய்ப்புக்களைத் தரவும் தவிர வெறெதற்கும் பயன்படாது.
    13வது திருத்தம் ஒரு கூரான கத்தி போன்றது. ஜனாதிபதியும் அவரோடு இணைந்த ஆட்சியாளர்களும் அதனைப் பயன்படுத்துவதில் கொண்டிருக்கும் நோக்கத்தையும் பயன்படுத்தும் விதத்தையும் பொறுத்ததுதான் 13வது திருத்தத்தின் பயன்பாடு அமையும். 13வது திருத்தத்தை நல்லபடி நிறைவேற்றுவது என்பது ஒரு பெரும் அரசியற் சவால்.
    ஜனாதிபதியின் முன்னால் உள்ள சவால்கள்
    13வது திருத்தத்தை முழுமையாக – முறையாக நிறைவேற்ற விரும்பும் அதற்குத் தயாராகும் ஒரு ஜனாதிபதி குறிப்பாக இரண்டு விடயங்களை அடிப்படையில் சாதிக்க வேண்டும்:
    முதலாவது – இப்போது 90 பேர் மத்திய ஆட்சியில்; அமைச்சர்களாக இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை ஆகக் கூடிய பட்சம் 35 (225 நாடாளுமன்னற உறுப்பினர்களில் 15 சதவீதம்) பேருக்கு மேல் போகாமல் குறைக்க வேண்டும்:
    இரண்டாவது – மொத்த அரச வருமானத்தில் குறைந்த பட்சம் 50 சதவீதத்தையாவது மாகாண ஆட்சிகளின் நிர்ணயத்துக்கும் நிர்வாகத்துக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்.
    இந்த இரண்டு விடயங்களையும் நடைமுறைப்படுத்தாமல் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவது சாத்தியமில்லை. ஜனாதிபதி இந்த இரண்டு விடயங்களையும் சாதிப்பாரா? அப்படித்தான் அவற்றை அவர் சாதிக்க முனைந்தாலும் அவரைச் சூழ்ந்தவர்கள் விடுவார்களா? அவற்றை அவர் சாதிப்பதை வேறு எந்த சக்தியாவது உறுதிப்படுத்துமா?,
    மாற்றம் அவசியமே
    எவ்வாறாயினும், 13வது திருத்தத்தின் நல்லபோக்கும் கூடாத போக்கும் சட்டத்தின் ஆட்சியாக அல்லாமல் மத்திய ஆட்சித் தலைவரின் தனிப்பட்ட நோக்கத்திலும் கருத்திலும் தங்கியிருப்பதாகவே இருக்கும் என்பதால் அதன் மீது நீண்டகாலத்துக்கு நம்பியிருக்க முடியாது. ஆட்சிமாறினால் 13வது திருத்தத்தின் நடைமுறையும் மாறும். எனவே 13வது திருத்தம் நல்ல முறையில் முழுமையாக நிறைவேற்றப்பட்டாலும் கூட மிகவிரைவில் அதற்கு மாற்றாக சட்டரீதியாக நிரந்தரம் கொண்ட சரியானதொரு அரசியற் தீர்வு ஆக்கப்பட வேண்டும் – நடைமுறையில் அது செயற்படுத்தப்பட வேண்டும் என்பது தீர்க்கமானதாகும்.
    13வது திருத்தமானது மற்றொரு அரசியல் யாப்புத் திருத்தம் மூலம் நல்லமுறையில் மாற்றி அமைக்கப்பட்டாலே அது ஒரு பெரிய பயனுடைய விடயமாக அமையும். எனவே எதிர்காலத்தில் 13வது திருத்தத்துக்கு மாற்றாக ஓர் அரசியற் தீர்வு வரவேண்டும் என்று கருதுபவர்கள். அந்த மாற்று அமைப்பில் எவ்வளவுதான் அதிகாரங்கள் அதிகமாக அமைய வேண்டும் என்ற கருதினாலும், அடிப்படையில் 13வது திருத்தத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வுகளுக்குச் சார்பாக உள்ள அனைத்து விடயங்களும் கட்டாயம் உள்ளடக்கப்படுவதை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
    நுனிப்புல் மேயாதீர்கள்! உண்மைகளை நீங்களே அளவுங்கள்!;
    மிகப் பெரும்பாலானவர்கள் 13வது திருத்தம் பற்றிய எந்த அறிவும் இல்லாமலேதான் – பரவலாக எழுப்பப்படும் கோஷங்களை அடிப்படையாக வைத்துத்தான் 13வது திருத்தம் மீதான அதிருப்தியைக் காட்டுகின்றனர். சிலர் சிலநபர்களின் நுனிப்புல் மேய்ந்த வகையான கருத்துக்களைக் கேட்ட அளவிலேயே தமது அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கின்றனர். 13வது திருத்தம் பற்றிய முறையாக கிரகித்து புரிந்து கொள்ளாமல் ஒருவர் இலங்கையில் அதிகாரப் பகிர்வு பற்றி தமது தெளிவான அபிப்பிராயங்களை உருவாக்கிக் கொள்ள முடியாது.
    சமூக அரசியல் மீது அக்கறையும் ஈடுபாடும் கொண்ட தமிழ் புத்திஜீவி அன்பர்கள் இலங்கையின் அரசியல் யாப்பை குறிப்பாக அதில் 13வது திருத்தம் உள்ளடக்கியுள்ள விடயங்களை பொறுமையாக பல தடவை நீங்களே நேரடியாக வாசியுங்கள்:
    அது பற்றி மற்றவர்களுடன் சேர்ந்து குறிப்பாக சட்ட வல்லுனர்களின் துணையையும் பெற்று கூட்டாக ஆழமாகவும் விரிவாகவும் கலந்துரையாடுங்கள்:
    வேறு நாடுகளில் நடைமுறையிலுள்ள சமஷ்டி அமைப்பு அரசியல் யாப்புகளுடன் ஒப்பிட்டுப் படியுங்கள்:,
    சந்திரிகாவின் தீர்வு மற்றும், பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆரம்பத்தில் வைத்த தீர்வு ஆகியவற்றுடன் ஒவ்வொரு விடயமாக ஒப்பிட்டுப் பாருங்கள். 13வது திருத்தத்திலுள்ள நிறைகளையும் குறைகளையும் கண்டறியுங்கள்: அப்பொழுதுதான் அரசாங்கம் முன்வைக்கும் அரசியற் தீர்வைப் பற்றி உங்களால் சரியாக அபிப்பிராயம் கொள்ள முடியும்.
    எவ்வளவுதான் குறைபாடுகளைக் கொண்டதாக இருந்த போதிலும் அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே. எனவே 13வது திருத்தம் பற்றிய முறையான அறிவும் தெளிவான புரிதலும் உங்கள் சமூக இலட்சியப் பாதையில் உள்ள இன்றைய தேவையாகும். அத்துடன் 13வது திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் நடைமுறையாக வைப்பதற்கான வேலைகளை ஆக்கபூர்வமாக முன்னெடுப்பதுவும் தமிழர்களின் நலன்கள் மீது உண்மையான அக்கறை கொண்டோரின் கட்டாயமான கடமையாகும்.
    13வது திருத்தம் தொடர்பான உங்களது மேலதிக கேள்விகளை மையமாக வைத்து மேலும் எனது விளக்கத்தைத் தொடருவேன்.
    உங்கள் அன்பின்
    வரதராஜப்பெருமாள்
    புரட்டாசி 2009