கம்பவாரிதிக்கு ஓர் அன்பு மடல்! பகுதி – 3

ஒரு இலட்சத்து 35 ஆயிரம் விருப்பு வாக்குகளால் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சரானார். எனினும் சம்பந்தருக்குப் பின்பு விக்னேஸ்வரன் தலைவராகி விடுவாரோ என்ற ஏக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய எம்.பி ஒருவருக்கு ஏற்பட்டுவிட அவர் விக்னேஸ்வரனின் நிர்வாகத்தை முடக்குவதில் விடாப்பிடியாக நின்றார்.

கடந்த பொதுத்தேர்தலின் போது கூட்டமைப்புக்கு எதிராக முதல்வர் விக்னேஸ்வரன் பிரசாரம் செய்ததாக நீங்கள் கூறியிருந்தீர்கள். வடக்கின் முதலமைச்சர் என்ற வகையிலும் அவர் ஒரு நீதியரசர் என்ற நிலையிலும் நேர்மையானவர்களுக்கு, நல்லவர்களுக்கு தமிழ்மக்களுக்கு சேவையாற்றவேண்டும் என்று நினைக்கின்றவர்களுக்கு வாக்களியுங்கள் என்றே முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

இதில் என்ன பிழை இருக்கிறது. கூட்டமைப்பிற்குள் நேர்மையானவர்கள் இல்லாதபோது, தமிழ்மக்களுக்குப் பணி செய்கின்றவர்களுக்குப் பஞ்சம் இருக்கின்றபோது தான் முதலமைச்சரின் பிரசாரத்தில் கோபம் கொள்ள வேண்டும். நேர்மையானவர்கள் கூட்டமைப்பிற்குள்ளும் இருந்தால் தமிழ்மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பர். எனினும் வாக்குகள் எண்ணப்படும் இடங்களிலும் நேர்மை தழைத்தோங்கி இருக்கவேண்டும். அப்போதுதான் உண்மை எங்கும் பிரவாகிக்க முடியும்.

அன்புக்குரிய கம்பவாரிதி அவர்களே! இந்த நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வடக்கின் முதல்வரைச் சந்திக்க மாட்டேன், அவருடன் பேசமாட்டேன் என்று கூறிய போது கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு சில பாரா ளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் யாழ்ப்பாணம் வந்தபோது சந்தித்து அளவளாவியது நியாயம் என்று கருதுகிறீர்களா?

தமிழ்மக்களின் அதி கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று முதலமைச்சராகிய விக்னேஸ்வரன் அவர்களை மதிக்காத இடத்தில் யாழ்ப்பாணம் வந்த பிரதமருடன் கூட்ட மைப்பின் எம்.பிக்கள் எப்படி நடந்திருக்க வேண்டும் என்ற அறம் உங்களுக்குத் தெரியாததன்று.

இதுமட்டுமல்ல வடக்கு மாகாண சபையில் ஒரு சிறந்த நிர்வாகம் நடக்கவில்லை என்றும் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். ஒரு இலட்சத்து 35 ஆயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்று முதலமைச்சராகிய ஒருவரை கட்சியில் இருந்து விலக்கு, முதல்வர் பதவியில் இருந்து நீக்கு என்று சம்பந்தருக்கு நெருக்கமான கூட்டமைப்பின் எம்.பி. ஒருவர் கூறியது நியாயமா? அவர் அவ்வாறு கூறியதற்குக் காரணம் அவரிடம் இருக்கக்கூடிய மதவாதம் என்று ஊடகங்கள் பிரசாரம் செய்தால் நிலைமை என்னவாகியிருக்கும்.

வடக்கின் முதலமைச்சரை நீக்க வேண்டும் என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூறும் அளவில் முதலமைச்சர் பதவி சிறுமைப்பட்டு விட்டதா? அல்லது கூட்டமைப்பு என்ற ஒரு பெரிய அமைப்பு அந்த எம்.பியின் அதிகாரத்திற்குள் அடங்கிவிட்டதா?

அன்பிற்குரிய கம்பவாரிதி அவர்களே! வடக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் தொடர்பில் தாங்கள் உன்னிப்பாக அவதானித்தால் உண்மை தெரியும். முதலமைச்சரை அவஸ்தைப்படுத்துவதற்காக கேள்வி எழுதிக்கொடுத்து முதல்வரிடம் கேட்க வைக்கின்ற மிகமோசமான செயல் நடந்து கொண்டிருக்கின்றது. ஒரு மாகாண சபை உறுப் பினர் யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் பதவியை மனதில் நினைத்துக் கொண்டு முதலமைச்சரை எதிர்க்கிறார்.

மற்றொரு உறுப்பினர் பாராளுமன்றப் பதவிக்காக எழுந்து நின்று முதலமைச்சரைப் பார்த்து சீறுகிறார். நிலைமை எப்படி என்று ஒருமுறை பாருங்கள். எதிர்க்கட்சித் தலைவர் தாராளமாக முதல்வரைக் கண்டிக்கின்றார். நல்லது ஆனால் நான் ஒன்றை மட்டும் சொல்லுவேன்.

நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் வடக்கின் முதலமைச்சராக இருப்பதால்தான் எதிர்க்கட்சித் தலைவர் தனது கருத்துரைகளைப் பஞ்சமின்றி முன்வைக்க முடிகிறது என்ற உண்மையையும் இங்கு கூறித்தான் ஆக வேண்டும்.

முதல்வரின் இடத்தில் இன்னொருவர் இருப்பாராக இருந்தால் எதிர்க்கட் சித் தலைவர் எழுந்து பேசும் போது எழும் கோசம் வேறு விதமாக இருக்கும். ஆக வடக்கின் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரனை மக்கள் தெரிந்து விட அவரின் நிர்வாகம் ஒழுங்காக நகர்வதற்குத் தடை செய்து விட்டு முதலமைச்சர் தனது நிர்வாகத்தை செம்மையாகச் செய்யவில்லை என்றொரு காட்டாப்பைக் காட்டுவதே நோக்கம்.

இந்த உண்மைகளை நீங்கள் அறியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இதுவே நிதர்சனம். எதுவாயினும் தமிழ் மக்கள் பேரவை அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ்மக்களின் நலன்களைப் பாதுகாக்கின்ற ஓர் அமைப்பு என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழ்மக்கள் பேரவையின் நன்நோக்கத்திற்கு உங்களின் பேராதரவு என்றும் இருக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. இன்றைய சூழ்நிலையில் புதியதொரு அரசி யல் கட்சி அவசியமற்றது என்ற உண்மையையும் நாம் உணராதவர்கள் அல்லர்.

எனினும் தமிழ்மக்களின் உரிமைகள் நலன்கள் என்ற விடயத்தை கூட்டமைப்பிற்குள் இருக்கக்கூடிய ஒரு சிலர் மட்டுமே தீர்மானிப்பது என்பதை தமிழ் மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட் டார்கள். நடந்து முடிந்த ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் தமிழ் அரசியல் தலைமை நடந்து கொண்டமை தமிழ்மக்க ளிடம் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது.

இத்தகைய அவநம்பிக்கைகளை கூட்டமைப்பு தவிர்த்துக் கொள்ளவேண்டும். தமிழ்மக்களுக்கான தீர்வுத் திட் டம் என்பதில் இது வரை எங்களிடம் ஒரு தெளிவான சிந்தனையும் இல்லை.

தீர்வுத் திட்ட வரைவும் இல்லை. இது மிகப் பெரும் குறைபாடாகும். இத்தகைய குறைபாடுகளை நீக்கி ஒரு சுமுகமான முறையில் அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ்மக்களின் நலன்களைப் பேணுவதை நோக்காகக் கொண்டே தமிழ மக்கள் பேரவை இயங்கும். இது சத்தியம். தங்களின் மேலான ஆலோசனைகள் கிடைக்கப் பெற்றால் அதைப் பெரும் பாக்கியமாகக் கருதுவோம்.

(முற்றும்) – புருசோத்தமன் – (வலம்புரி)