அரசியல் தீர்வு பற்றி : ‘சம்பந்தன் உறுதிப்படுத்திவிட்டார்’

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், அதிகாரப் பகிர்வு தொடர்பில் தெரிவித்த கருத்தானது, அவர் ஒரு ஜனநாயகவாதி என்பதை உறுதிபடுத்திவிட்டார்” என, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைமை அலுவலகத்தில், நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அதிகாரப்பகிர்வு மற்றும் ஆளுநர் நீக்கம் தொடர்பான கூட்டமைப்பின் கருத்து தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்து கருத்துரைத்த அவர் கூறியதாவது,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாண அதிகாரங்கள் தொடர்பிலான பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், முழுமையான சமஷ்டி வேண்டும் என்ற மோசமான கருத்தை முன்வைக்கிறார். ஆனால் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அரசியல் மேடைகளில் எவ்வாறான கருத்துக்களை முன்வைத்தாலும், முழுமையான சமஷ்டி வேண்டும் என்று, அரசியலமைப்புப் பேரவையில் ஒருபோதும் கேட்கவில்லை. அரசியலமைப்புப் பேரவையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனைகளைப் பொறுத்தே, அவர்களின் உண்மையான நிலைப்பாடு என்னவென்பது தெரியவரும்” என, அவர் மேலும் குறிப்பிட்டார்.