ஐரோம் சானு ஷர்மிளா தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்

இம்பால்: மணிப்பூரின், “இரும்பு பெண்’ என்று அழைக்கப்படும், ஐரோம் சானு ஷர்மிளா, தனது 16 ஆண்டு கால உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டு தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

மணிப்பூரில், ஆயுதப் படைக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் சட்டம், மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. 2000ம் ஆண்டு, நவம்பர் 2ம் தேதி, இம்பால் விமான நிலையம் அருகே, அசாம் ரைபிள் படையினரால், அப்பாவி பொதுமக்கள், 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில், வீர தீர செயலுக்காக, தேசிய விருது பெற்ற சிறுவனும் கொல்லப்பட்டு இருந்தான். இதை கண்டித்தும், ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை, ரத்து செய்யக் கோரியும், மணிப்பூரை சேர்ந்த ஐரோம் சானு ஷர்மிளா என்ற பெண், தன், 28 வயதில் , 2000ம் ஆண்டு நவம்பர், 5ம் தேதி, உண்ணாவிரதத்தை துவக்கினார்.

சமூக ஆர்வலரான இவர், பத்திரிகைகளில் சமூக அவலங்களை கட்டுரையாக எழுதி வந்தார். காந்திய வழியில், போராடிய ஷர்மிளா, ஒரு சொட்டு தண்ணீர் கூட பருகாமல், பட்டினி கிடந்து, உலக கவனத்தை கவர்ந்தார். இதனால், மணிப்பூர் அரசுக்கு சிக்கல் எழுந்தது. இவர், மீது தற்கொலைக்கு முயன்றதாக குற்றச்சாட்டு சுமத்தி, பலவந்தமாக கைது செய்யப்பட்டார். இம்பாலில் உள்ள அரசு மருத்துவமனையில், பலவந்தமாக அனுமதித்து, தொடர்ந்து, பல ஆண்டுகளாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், ஷர்மிளாவுக்கு, இந்தியாவிலுள்ள பல்வேறு மக்கள் உரிமை அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

பல்வேறு தலைவர்கள், இவரை நேரில் சந்தித்து, உண்ணாவிரதத்தை கைவிடும் கோரிக்கைவிடுத்தனர். அதை அவர், ஏற்க மறுத்தார். இவரது, மன உறுதியை பாராட்டி, பல சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டது. தனது கோரிக்கையை ஏற்று ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யும்வரை, போராட்டத்தை தொடர்வதாக ஷர்மிளா அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், கடந்த 16 வருடங்களாக போராட்டம் நடத்தி வரும் ஐரோம் ஷர்மிளா, தனது உண்ணாவிரத போராட்டத்தை வரும் ஆகஸ்ட் 9ம் தேதி முடித்துக்கொண்டு, மணிப்பூர் தேர்தலில் போட்டியிட்டு, பிரச்னைக்கு தீர்வு காண உள்ளதாக கூறியுள்ளார்