தோழர் பத்மா (அதிபர் அமலநாதன் மடு வலயம்) அடம்பன்

1983ம் ஆண்டு ஆடிமாதம் நடைபெற்ற இனக்கலவரத்தினைத் தொடர்ந்து தோழர் பத்மா அவர்கள் தன்னுடைய கல்வியை இடைநிறுத்தி EPRLF உடன் இணைத்துக்கொண்டார். தோழர்கள் ஐயா ,ரெட்னம் போன்ற தலைவர்களினால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் வகுப்புக்கள் கருத்தரங்குகளில் பங்கெடுத்திருந்தார். அவருடைய ஆரம்பகால அரசியற் பணியை வவுனியா பூவரசங்குளத்தை தளமாக கொண்டு தோழர் ஈசனுடன் இணைந்து செயற்பட்டார்.


1984ம் ஆண்டு கட்சியின் முதலாவது காங்கிரஸினை தொடர்ந்து மன்னார் மாவட்டத்தில் கட்சியை மேலும் பலப்படுத்தும் நோக்கில் வங்காலையில் தோழர் தயாளன்(சீலன்) தலைமையில் கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக நான்கு நாட்களாக நடைபெற்ற கூட்டத்தில் பெருமளவில் தோழர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.குறிப்பாக தோழர்கள் விமல்(அருமைறஞ்சன்),வெற்றி,சிக்ஸ்,சுகு(மன்னார்), சாந்தன், லம்பேட் காந்தன் போன்றவர்களுடன் தோழர் பத்மாவும் பங்கெடுத்திருந்தார்.

இந் நிகழ்வைத் தொடர்ந்து 1986ம் ஆண்டு மார்கழி மாதம் 13ம் திகதி புலிகளால் EPRLF தடைசெய்யப்படும்வரைக்கும் மன்னார் மாவட்டத்திலேயே தோழர் பத்மா தனது அரசியல் பணிகளை மேற்கொண்டிருந்தார். புலிகளால் தடைசெய்யப்பட்டு கைது செய்யப்பட்ட தோழர் பத்மா அவர்கள் அடம்பனிலுள்ள புலிகளின் முகாமில் தோழர் ஐயா போன்ற பலருடன் நீண்ட காலமாக சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.

1987ம் ஆண்டு இலங்கையின் அரசபடைகளின் முற்றுகைக்குள்ளான முகாமிலிருந்த புலிகளிகள் முகாமை விட்டு பின்வாங்கிய போது தோழர்களும் அவ் முகாமைவிட்டு தப்பிப்பதிற்கான சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டார்கள். அதிலொருவராக தோழர் பத்மாவும் தப்பித்துக்கொண்டார்.

பின்பு அவர் மீண்டும் தனது கல்வியைத் தொடர்ந்தார். ஆசிரியராக பாடசாலை அதிபராக தனது சமுகப்பணியை தொடர்ந்ததுடன் இல்லறவாழ்விலும் கணவனாக தந்தையாக தனது கடமைகளை முன்னெடுத்து வாழ்ந்துகொண்டிருந்த வேளையில் அவர் எம்மை விட்டு பிரிந்து விட்டார். அவருக்கு எமது அஞ்சலிகள்.