பழிவாங்கல்கள் தொடர்கிறது!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் பலரை ஒழுக்காற்று நடவடிக்கை எனக் கூறி கட்சியிலிருந்து வெளியேற்ற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கான கூட்டத்திற்கு உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த உறுப்பினர்களில் 95 சதவீதத்தினர் வருகை தந்துள்ளனர். இவர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை என்று கூறி, இவர்களையும் கட்சியிலிருந்து வெளியேற்றினால், இவர்கள் செல்வதற்கு ஒரு இடம் வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீர்கொழும்பு, கொச்சிக்டை பிரதேசத்தில் அமைந்துள்ள ரன்வெல் ஹோட்டலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். சட்டவிரோத பொலிஸ் பிரிவொன்று அமைக்கப்பட்டு எனது குடும்பத்தினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களும் பழிவாங்கப்படுகிறார்கள். இவ்வாறு பழிவாங்கல்கள்; தொடர்வதற்கு இடமளிக்க முடியாது. அந்தப் பொலிஸ் பிரிவு கலைக்கப்படாவிட்டால் தொடர்ந்து அவர்களுடன் இருக்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

இந்தக் கூட்டத்தில் சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலானோர் வருகைத் தந்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, வாசுதேவ நாணயக்கார, டி.வி.குணசேகர, பவித்ரா வன்னியாராச்சி, பிரசன்ன ரணதுங்க, ஜோன்ஸ்டன் பெர்ணாந்து, ரோஹித்த அபே குணவர்தன, தினேஸ் குணவர்தன, ஜயந்த கெடகொட, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பசில் ராஜபக்ஷ, சரத் குமார குணரத்ன, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா உட்பட பலர் கலந்துகொண்டனர்.