மனது கேட்குதில்லையே இந்த வலிந்தெடுத்த மரணங்களை கேட்டும் போது

மரணித்தவரின் கணவரும் ஆபத்தான நிலையில் இதே கொரனாவின் தாக்கத்தில் இருப்பதாக கூறினார். சந்றே இடிந்தே போனேன். ஏற்க முடியாத மரணங்கள் பலவற்றை வாழ்வில் சிலரை போலவே கடந்து வந்த எனக்கு எப்படியாவது அந்த மனிதர் மரணத்தின் வாயிலிருந்து மீண்டெழுத்து வர வேண்டும் என்ற எனது மனதிற்குள் வேண்டிக் கொண்டேன்.

தொடர்ந்த அவரின் செய்தி என் மனதிற்குள் உள்ளான வேண்டுதலை அவரிடம் திரும்ப திரும்ப இறைஞ்சுவது போல் சொல்லிக் கொண்டே இருந்தேன். ஆமாம் அவர் கூறினார் அவர்களின் மூன்று மகள் களில் ஒருவரும் இதே வைரஸ் தாக்கத்தினால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்தாக கூறினார்.

என் மனதில் அந்த மூன்று பெண்பிள்ளைகளையும் என் மகள்களாக உருவகப்படுத்தி பார்த்து உணர்வுகளை உள்வாங்கி மன உழைச்சலுக்குள் உள்ளாகி மீண்டெழுந்தேன். இதனை நண்பரிடமும் தெரிவித்தேன்.

பிள்ளைகள் எவ்வாறு துடித்துப் போய்விடுவார்கள் தனித்துப் போய்விடுவார்கள் எவ்வாறு மீண்டுவரப் போகின்றார்கள். தன் மனைவின் மரணத்தை அறியாமல் அவரின் கணவன் மரணப்படுக்கையில் இன்னொரு மகள் இவர்களுக்கு அருகில் அழுது ‘கொண்டாட” முடியாத அவலம். வீட்டில் தனித்திருக்கும் ஏனைய இரு பெண் பிள்ளைகள் தாயை.. தங்களது அம்மாவை இறுதியாக பார்க்க முடியாத அவலம். தமது அப்பாவை அணைத்து அழுது புலம்ப முடியாத தொற்றல்கள்…. தோற்றல்கள்…..

கொரனாவின் கொடுமை பலரை இரையாக்கியிருந்தாலும் குறியீட்டு ரீதியில் இவ் மரணம் என் மனதிற்குள் குடைந்த வண்ணமே கடந்த சில தினங்களாக…..

இன்று அந்த தகப்பனும் இறந்து விட்டார் என்று இருவரும் கணவன் மனைவியாக இணைந்திருந்த படங்களை…. செய்திகளைப் பாரத்த போது… பிறப்பும், இறப்பும் இயற்கையானது என்ற விஞ்ஞானத்தையும் மீறி இறப்பிற்கு இறப்ப வேண்டும் என்று கதறத் தோன்றும் மனநிலை ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

இவர்களை நான் இன்றுதான் புகைப் படத்தில் முதன் முதலாக பார்க்கின்றேன். இவரகள் என் மச்சானும் இல்லை… மாமனும் இல்லை… அண்ணையும் இல்லை… பங்காளியும் இல்லை… முகமறிந்த நட்பும் இல்லை…. முகமறியா முகநூல் நட்பும் இல்லை….. ஆனால்…. ஆனால்;;…. குறியீட்டு ரீதியாக கொரனாவின் கொடூரனை எமக்கெலலாம் எடுத்தியம்பி நிற்கும் மரணமாக பார்க்கின்றேன் இவற்றை.

தனிமைப்படுதல்… தள்ளி இருத்தல்…. (வீட்டில்)தங்கியிருத்தல் என்பதை எம்மில் பலருக்கும் இயலாமை ஆக்கிய பசியாற்ற முடியாத அரசுகளும், குடியிருப்பு வசதிகளும், வேலை வேலை என்று தம்மை கவனிக்காது என்று ஓடியலைந்த புதிய உலக ஒழுங்கு பொருளாதாரக் கட்டுமானங்களும், உறவுகளை மறந்து தேடலை நோக்கி துரத்தப்படும் வாழ்க்கை முறையும், இயற்கையை மறுத்த வாழ்வியலும், கிருமியை உரிய வேளையில் உரிய முறையில் பரவலைத் தடுக்காத அரசும் அரச இயந்திரமும் என்று யாரை நோவது.

ஆதரவற்ற இருக்கும் இந்த குழந்தைச் செல்வங்களின் முகம்தான் மனத் திரையில் வந்து நிற்கின்றது.

உறவுகளே அது கறுப்பாக இருந்தாலும்…வெளுப்பாக இருந்தாலும் விழிப்பாக இருங்கள். தனித்திருங்கள் தள்ளியிருங்கள் வீட்டில் தங்கியிருங்கள். அரசுகளே இவற்றை மக்கள் செய்ய ஆவன செய்யுங்கள் பொருளாதாரச் சுட்டிச் சரிவை நாம் மீட்பது பின்பு பார்த்துக் கொள்ளலாம். கிரோசிமாவில் அணுக் குண்டு வெடித்த போது மனித குலம் இனி மீள முடியாது என்றுதானே ஆய்வாளர்கள் சிலர் கூறினர்.

மனிதகுலம் தன்னைப் பாதுகாத்துக் கொண்டால் அழிவில் இருந்து அது மீட்டெழுந்து பொருளாதாரத்தை வளங்களை வாய்புக்களை கட்டியெழுப்ப முடியும். அதற்கு மனிதன் உயிர் வாழுதலே முதன்மையாகின்றது.
எனவே ‘சுட்டி”யை விடுங்கள் சுற்றி இருப்பவர்கள் உயிர் வாழ்தலை உறுதி செய்யுங்கள் இது அரசு, பொது மக்கள் இருதரப்பினரதும் கடமையும் கூட.

மீண்டும் எழுவோம். அதுவரை ஆதரவாக ஒத்துழைப்பாக பங்காளிகளாக அந்த மூன்று பிஞ்சு இளம் குருத்துக்களுக்குமாகவும் இருப்போம்.