மஹிந்தவை மீண்டும் பிரதமராக்க முயற்சி – JVP

யாழ். கச்சேரியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில், மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் இதை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்ஷ அலிபாபாவும் அவருடன் சேர்ந்து மக்களின் வரி பணங்களை சுரண்டிய திருடர்கள் மீண்டும் பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்சவை கொண்டுவருவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள்.

ஏனெனில் 21 ஆம் திருத்தம் மூலம் ஜனாதிபதியிடம் இருக்கின்ற அதிகாரங்களை பாராளுமன்றத்துக்கு வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜனாதிபதியிடம்  இருக்கின்ற அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்கும் போது பிரதமர் அதிகாரம் கொண்டவராக காணப்படுவார்.

தற்போதிருக்கும் ரணில் விக்ரமசிங்கவிடம் அதிகாரம் சென்றால் ராஜபக்ஷக்களை பாதுகாப்பார் இல்லாவிட்டால் அவரை பதவி நீக்கம் செய்துவிட்டு ராஜபக்சவின் திருடர்கள் பிரதமராக மஹிந்தவை அரியணையில் அமர்த்துவார்கள்.

மேற்குலகத்தின் செல்லப்பிராணியாகவும் ராஜபக்சக்களின்  நண்பராகவும் காணப்படும் ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் ராஜபக்சக்களைக் காட்டிக் கொடுக்க மாட்டார்.

மேலும் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு க .ஸ்டாலின் பொருளாதார நெருக்கடியில் வாழும் இலங்கை மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கியிரந்தார்.

ஆனால் அவர் உணவுப் பொதிகளை வழங்கி விட்டு கச்சதீவை மீட்பதற்கு இதுவே தருணம் எனக் கூறியிருப்பது தமிழகம் எமது தொப்புள் கொடி உறவா என்ற கேள்வி எழுகின்றது.

நமது நாட்டின் பொருளாதார பிரச்சினையை சாதகமாக பயன்படுத்தி இந்தியா தனது ஆதிக்கத்தை இலங்கையிலே மேற்கொண்டு வருகின்றமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இலங்கையின் பொருளாதார வளங்களை இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டு பெற்றுக் கொள்ளும் நிலையில் இலங்கையின் அரிதான பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் இரு நடுகளின் வசம் சென்றுள்ளது.

ஆகவே இலங்கைக்கு நிவாரண பொருட்களை வழங்குவதற்கு  இந்தியா 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். போன்ற நிபந்தனைகளை விதித்திருந்தால் உண்மையில் அவர்கள் தொப்புள் கொடி உறவுகள் தான் ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.