வைகோவின் ஆகாச வெடி: ‘இலங்கை தமிழரை திருப்பியனுப்பினால் கிளர்ச்சி வெடிக்கும்’

‘இலங்கை தமிழர் தயன்ராஜை இலங்கைக்கு அனுப்பும் முடிவை கைவிட வேண்டும்’ என இந்திய மத்திய அரசு மற்றும் தமிழக மாநில அரசிடம் வைகோ வலியுறுத்தி உள்ளார். இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘இந்தியாவில் இலங்கை அரசின் ஆதிக்கம்தான் இன்னும் செயல்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள தயன்ராஜ் என்ற ஈழத் தமிழ் இளைஞர் மீது இலங்கையில் சில குற்ற வழக்குகள் இருப்பதாகவும், அவரை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று இலங்கை அரசாங்கள், இந்திய அரசைக் கேட்டுக்கொண்டதன் பேரில் அவரை பலவந்தமாக இலங்கைக்கு அனுப்ப இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு தமிழக அரசும் உடந்தையாக செயல்படுகிறது.

ஈழத் தமிழ் இளைஞர் தயன்ராஜ், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறி, அவரை சித்திரவதை செய்து உயிரைப் பறிக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தன்னை இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று வலியுறுத்தி, திருச்சி முகாமில் ஐந்தாவது நாளாக அவர் உண்ணாவிரத அறப்போர் நடத்துகிறார். அவரது மனைவியும், மகளும் மண்டபம் அகதிகள் முகாமில் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

ஈழத்து இளைஞர் தயன்ராஜை இலங்கைக்கு அனுப்புகின்ற முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையேல், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கிளர்ச்சி வெடிக்கும்’ என வைக்கோ தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.