யார் இந்தத் திலீபன்?

ஒடுக்குவோரின் அரசியல் பின்னணியிலேயே சிவகுமாரன், திலீபன்.. போன்றவர்கள் முன்னிறுத்தப்படுகின்றனர். இந்தவகையில் வரலாறாக இருப்பதெல்லாம், ஒடுக்குவோரின் சிந்தனையும் – ஒடுக்குவோரின் அக முரண்பாடுகளுமே. தமிழனைத் தமிழன் ஒடுக்குகின்ற சிந்தனையை யார் கொண்டுள்ளனரோ, அவர்கள் திலீபனைக் கொண்டாடுகின்றனர்.

இப்படி கொண்டாடப்படும் திலீபன் 1987 வரை புலிகள் அரங்கேற்றிய இயக்கப் படுகொலைகளில் முன்னின்று பங்காற்றிய கொலைகாரன். நடந்த படுகொலைகளுக்கு தலைமை தாங்கியதுடன், தாங்கள் நடத்திய மனிதவிரோதச் செயல்களை அரசியல்ரீதியாக நியாயப்படுத்தியவன். புலிகளின் ஜனநாயக விரோத அரசியலை நியாயப்படுத்த – புலிகளின் அரசியல் பொறுப்பாளனானவன். இப்படி கொலைகளுக்கு எல்லாம் பொழிப்புரை வழங்கிய கொலைகாரக் கும்பல்களின் தலைவர்களில் ஒருவனே, இந்தத் திலீபன்.

இந்தக் கொலைகார புலிக் கும்பல் ஆரம்பம் முதலே பல இயக்கத் தலைவர்களைக் கொன்று குவித்தது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தை (PLOTE) உருவாக்கிய சுந்தரத்தை 02.01.1982 அன்று புலிகள் சுட்டுக் கொன்றனர். அப்படி புலிகள் சுட்டுக்கொன்ற போது பிரபாகரன் ரெலோ இயக்கத்தில் இருந்தபடியே இதைச் செய்வித்தான். சுந்தரத்தை சுட்டுக் கொன்றதுக்கு எதிராக புலிகளில் இருந்து விலகி – புளட்டை உருவாக்கிய நாகராஜா, புளட் இன்னுமொரு புலியாக மாறிய போது அதில் இருந்தும் விலகி இருந்த போதும், சுந்தரம் படுகொலையை எதிர்த்து துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டார். இப்படி கொலைகாரக் கும்பலை அம்பலப்படுத்தியதை அடுத்து, ரெலோ இயக்கத்தைச் சார்ந்த சிறீ சபாரத்தினமும், பிரபாகரனும் நாகராஜாவைக் கொலை செய்வதற்காகக் கடத்திச் சென்றனர். இப்படி பிரபாகரன் ரெலோ இயக்கத்தின் உறுப்பினராக இருந்தபடி – புலியாகச் செயற்படத் தொடங்கிய காலம். மாற்று அரசியல் கருத்துகளையும் – இயக்க செயற்பாடுகளையும் முன்வைக்கும் நபர்களை கொன்று உருவான கொலைகாரர்களின் வரலாறுகள் இப்படிதான் தனியாகவும் – கூட்டாகவும் உருவானது. இது புளட், ரெலோ, ஈரோஸ் .. இயக்கங்களுக்கும் பொருந்தும்.

திலீபன் உள்ளடங்கிய புலிகள் தமிழீழ விடுதலை இராணுவம் (TELA) இன் தலைவர் ஒபரோய் தேவனை 14.08.1983 அன்று சுட்டுக் கொன்றனர். இதே போல் தமிழீழ விடுதலை தீவிரவாதிகள் (TELE) இயக்க தலைவர் ஜெகனை 09.09.1984 இல் சுட்டுக்கொன்றனர். எப்படிப்பட்ட கொலைகார அகிம்சாவாதிகள், திலீபன் பெயரால் கொண்டாடப்படுகின்றனர் என்பதை வரலாற்றில் இருந்தே தேட வேண்டும். தாம் அல்லாத மற்றவர்களை கொன்று, தங்களை மட்டும் முன்னிறுத்தியதைக் கொண்டாடும் சமூக மனநிலையை நியாயப்படுத்தவும், அதைக் கொண்டாடவும் திலீபன் என்ற கொலைகாரனுக்கு அகிம்சாவாதி என்ற பூச்சு தேவைப்படுகின்றது.

கொலைகார புலிகளின் வரலாற்றில், 29.04.1986 திகதி ரெலோ அழிப்பு மனித படுகொலைகளாக அரங்கேறியது. வீதி வீதியாக உயிருடன் மனிதர்களை சந்திகளில் எரித்த கும்பல்களுக்கு, தலைமை தாங்கியவர்களில் திலீபனும் அடங்கும். இதை நியாயப்படுத்திய அரசியலுக்கும், இந்த அகிம்சாவாதியான திலீபன் தலைமை தாங்கினான். ஏன், எதற்கு இன்று கொண்டாடுகின்றனர் என்றால், தமிழனை தமிழன் ஒடுக்கிய அந்த வரலாற்றை போற்றத்தான். தமிழனைத் தமிழன் ஒடுக்குவது என்பது, வெள்ளாளிய சமூக அதிகாரத்தின் அரசியல் குறியீடு.

சமூகத்தின் ஜனநாயக மூச்சையே வெட்டிய கும்பல்களுக்கு தலைமை தாங்கியவர்களில் திலீபனும் அடங்கும். சமூக நலன் சார்ந்த சமுதாய முன்னோடிகளின் செயற்பாடுகளை அழித்தொழித்த வலதுசாரி அரசியலின் கதாநாயகன் திலீபன். சமூக இயக்கமாக இயங்கும் மனித இயக்கத்துக்கு வேட்டு வைத்த சமூக விரோதி. திலீபன் அகிம்சைவாதி என்பதே, புனையப்பட்ட பொய்.

இவன் அதிகாரத்தில் உயிருடன் இருந்த காலத்தில் தான், யாழ் பல்கலைக்கழக மாணவ தலைவன் விஜிதரன் 04.10.1986 காணாமலாக்கப்பட்டான். இறுதி யுத்தத்தில் அரசால் காணாமலாக்கப்பட்டவர்கள் போராட்டங்கள் இன்று நடப்பதற்கு முன்பே, 1986ம் ஆண்டுகளில் இயக்கங்களால் காணாமலாக்கப்பட்டவருக்கான போராட்டத்தை – யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் பொது மக்களும் இணைந்து நடத்திய வரலாறு – இந்த அகிம்சவாதிகளின் வேடத்தை அம்பலமாக்கியது.

(Rajakaran)