தமிழினிக்காய் அழுகிறார்கள்.

(சாகரன்,ரகு கதிரவேலு)

மனித உயிர் மகத்தானது. மனித உயிரை விட சுதந்திரம் மகத்தானது. என்றவர் தமிழினியின் தலைவர். ஆயிரக்கணக்கான மனித உயிர்களைக் குடித்து தமிழர்களுக்கு இருந்த சுதந்திரத்தையும் இல்லாமல் பண்ணிவிட்டார். மனிதர்களைக் கொன்று மகிழ்ந்தவர்கள் புலிகள். புலிகள் கொன்றபோது மகிழ்ந்தவர்கள் புலிகளின் ஆதரவாளர்கள். தமிழினி போன்று எத்தனை பெண்களைக் கொன்றிருப்பார்கள் புலிகள்? செல்வியும்,ராஜினியும், மகேஸ்வரியும், ரேலங்கியும் மற்றும் புலிகளால் கொல்லப்பட்ட தமிழ்பெண்களின் உயிருக்குப் பெறுமதி இல்லையா? பத்மநாபாவும் தோழர்களும் துரத்தி துரத்தி புலிகளால் கொல்லப்பட்டபோது விருந்துண்டு கொண்டாடியவர்கள் தமிழினி உயிருக்காய் அழுது வழிகிறார்கள்.

யாருக்குத்தான் உயிர் வாழ ஆசை இல்லை. தலைவர் முதற்கொண்டு தமிழினி வரைக்கும் உயிர்வாழ ஆசைப்பட்டவர்கள்தான் . தலைவருக்கு உயிர் ஆசை இருந்தபடியால்தானே சயனைட் கடிக்காமல் சரணடைந்தார். தமிழர்களைக் கேடயமாக வைத்து யுத்தம் செய்தார் பிரபாகரன். சிறுவர் சிறுமிகளுக்கெல்லாம் சயனைட் கட்டி போர்க்களம் அனுப்பிச் சாகடித்த தமிழினிக்கும் அவரின் தலைவர் பிரபாகரனுக்கும் சயனைட் செயலிழந்து போனது. எத்தனை உயிர்களை அழித்த ஒரு பயங்கரவாத இயக்கத்தின் அங்கம்தான் தமிழினி.

புலேந்திரனும், குமரப்பாவும் உயிருடன் இருக்கக் கூடாது என்று சிறைக்கே சயனைட் அனுப்பியவர் பிரபாகரன். ஆனால் தான் மட்டும் சயனைட் கடிக்கவில்லை. இந்திய இராணுவத்தால் பிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட புலிகளைச் சுட்டுக் கொன்றவரகள் புலிகள். காரணம் அவர்கள் பிடிபடும்போது சயனைட் கடிக்கவில்லையாம்.. அவர்களுக்கு அவர்களுக்கு சயனைட் குப்பி கழுத்தில் கட்டிவிட்ட தலைமைகள் சரணடைந்தபோது கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று ஜெனிவா வரை சென்று நீதி கேட்கிறார்கள்.

சயனைட் கடிக்காமல் குடும்பப் பெண்போல மக்களோடு மக்களாக இராணுவத்திடம் சரணடைந்தவர் தமிழினி. மக்களால் தான் இராணுவத்திடம் காட்டிக் கொடுக்கப் பட்டார்.  கதிர்காமர் புலிகளால் கொல்லப்பட்டபோது வன்னியில் அரைக்கம்பத்தில் பறந்த ஐ நா கொடியைக் கூட அறுத்து வீசிக் காலால் மிதித்தவர்கள் புலிகள்.
அப்படியொரு இயக்கத்தின் அங்கம் தானே தமிழினி.

ஐயகோ எத்தனை அஞ்சலிகள்?, விழுந்து விழுந்து அஞ்சலி செய்கிறார்கள். தமிழினி மரணத்தில் நாங்கள் மகிழவில்லை! ஆனால் புலிகளால் தமிழ்ப் பெண்கள் துரத்தித் துரத்திக் கொல்லப்படும் போது கண்களை மூடிக் கொண்டிருந்த கூட்டம் தமிழினியின் இயற்கை மரணத்துக்காய் அழுகிறது. பெண்கள் ,குழந்தைகள் எல்லாம் உடல் சிதறி இறந்த போதும் யுத்தத்தை நிறுத்தாது மக்களுக்கு நடுவில் நின்று யுத்தம் புரிந்த கூட்டம் தங்கள் உயிர் போகப்போகிறதென்று உலக நாடுகளிடம் கெஞ்சி வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தது. தமிழினி உட்பட, போர்க்களத்தில் பெண்பிள்ளைகளை யுத்தம் புரிய வைத்துச் சாகடித்தவர் தமிழினி. தப்பியோட முயன்றவர்களுக்குச் சித்திரவதை செய்தவர் தமிழினி.

யுத்தம் வேண்டாம். வீண் உயிரழிவு வேண்டாம். சமாதானமாய் போவோம் என்றவர்களெல்லாம் துரோகிகளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.  யுத்தத்தை நிறுத்தி அமைதியக் காக்க படையை அனுப்பிய அயல் நாட்டுத் தலைவனைக் கொன்ற கூட்டம்.
யுத்தம் வேண்டாம் என்று சமாதானத்துக்காக கையொப்பமிட்ட கருணாவை இன்று வரை துரோகி என்று திட்டுகிற கூட்டம்.
தமிழினி உயிர் போய்விட்டதென்று அழுகிறது. அவர்கள் எதிரிகளென்று போரிட்ட சிங்கவனுக்கும் இரக்கம் தமிழினி இன்று வரையாவது உயிர் வாழ்ந்திருக்கிறாள்.

புலிகளின் மாற்றுக் கருத்தாளர்கள் மீதான தாக்குதலும் இதற்கு எந்த வகையிலும் தனது இயக்கத்தை கேள்விக்கு உள்படுத்தாதவர்களுமே புலிகளின் உறுப்பினர். இது தமிழினிக்கும் பொருந்தும் புலிகளின் பிரசன்ன காலத்திலும் 2009 மே மாதத்திற்கு பின்னரான காலகட்டத்திலும் புலி இயக்கத்தின் பாசிச செயற்பாட்டை கேள்விகளுக்குள் உள்ளாக்காதவர்கள் இவர்கள். இதன் மறுவளம் புலிகளின் செயற்பாட்டையும் இதனோடு ஒத்தோடிய செயற்பாடுகளையும் விமர்சனம் சுயவிமர்சனங்களுக்கு உள்படுத்த விரும்பாதவர்கள் இவர்கள். அதாவது அவற்றை நியாயப்படுத்துபவர்கள். முள்ளிவாய்கால் சம்பவங்களுக்கு முன்பு மனித உரிமை பற்றி இவர்கள் வாய்திறந்ததாக அறிய முடியவில்லை.

முள்ளிவாய்காலில் தமது உறுப்பினர்கள் சங்காரம் ஆன பின்பே (கவனிக்க மக்கள் அல்ல) இவர்களில் பலர் தம்மை மனித உரிமைவாதிகளாக சாயம் பூசிக்கொண்டவர்கள். இன்னொரு முக்கியமான வருத்தம் ஈழவிடுதலைப் போராட்டத்தில் புலிகளின் செயற்பாடு பற்றியது. புலிகளின் மாற்றுக் கருத்தாளர் மீதான் தாக்குதல்கள் பல ஆயிரம் பெண்(போராளி)களை மீண்டும் அடுப்பங்கரைக்கள் புகுந்துவிடத்தூண்டிவிட்டது. ஈழப் பெண்கள் பலரின் எழுச்சியை எமது சமூகம் அடுபங்கரைக்கள் முடக்கியதற்கு பல மடங்கு மேலாக புலிகளின் செயற்பாடுகள் செய்துவிட்டது என்பதை தமிழினி போன்றவர்கள் உணர்ந்திருப்பார்களோ என்றால் இல்லை என்பதே என் கவனத்தின் முடிவுகள்.