கருணை காட்ட முடியாது: நால்வருக்கும் தூக்குத் தண்டனைதான்! உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த மரண தண்டனை தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு அளித்தது. 2012ம் ஆண்டு டிசம்பர் மாத இரவொன்றில் தனது நண்பருடன் இருந்த மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவை ஆறு பேர் கொண்ட கோஷ்டி பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி, அதன் பின்னர் அவரை மிக மோசமாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றது. கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக ராம்சிங், அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் மற்றும் 18 வயதான சிறுவன் ஒருவன் என ஆறு பேரை போலீஸார் கைதுசெய்தனர்.

இளம் வயதுக் குற்றவாளியான சிறுவன், சீர்திருத்தக் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டான். மற்ற ஐந்து பேருக்கும் டெல்லி பெருநகர நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. குற்றவாளிகள், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், முக்கிய குற்றவாளியான ராம்சிங் என்பவன் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் தூக்குப் போட்டுத் தற்கொலைசெய்துகொண்டான்.

தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்த்து அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய நான்கு பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்தனர். அந்த மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிசெய்தது. அதை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கின் தீர்ப்பை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வாசித்தனர். அப்போது, ‘அன்று நடந்த சம்பவம் மிகவும் மிருகத்தனமான ஒன்று. குற்றவாளிகளுக்கு கருணை காட்ட எந்த ஒரு வழியும் கிடையாது. நிர்பயாவுக்கு ஏற்பட்ட கொடூரமான காயங்கள் மற்றும் குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு தூக்கு தண்டனையை உறுதி செய்கிறோமெ’ன்று நீதிபதிகள் தமது தீர்ப்பின் போது தெரிவித்துள்ளனர்.