‘நினைவு நாளில் உரையாற்ற இடமில்லை’

தியாகி திலீபனின் நினைவு நாள் நிகழ்வில், எவரது உரையும் அங்கு இடம்பொறாதென, முன்னாள் போராளி மனோகர் தெரிவித்துள்ளார்.

தியாகி திலீபனின் 31ஆவது ஆண்டு நினைவு நாள் ஏற்பாடுகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 15ஆம் திகதி, தனது உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்த திலீபன், செப்டெம்பர் 26ஆம் திகதி, தன்னுயிரை இழந்திருந்தார். இதை முன்னிட்டு, புதன்கிழமை (26), நினைவு நிகழ்வுகள் நடத்தப்பட ஏற்பாடாகியுள்ளன.அந்த அறிக்கையில், திலீபனின் நினைவைப் பகிர விரும்பும் அல்லது தமது உணர்வை உலகுக்கு உரைக்க ஆர்வமுள்ளவர்களுக்காக, இம்முறை இந்நிகழ்வு, நல்லூர் மேற்கு வீதியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதெனவும், அவ்வாறான எண்ணம் உடையோர், இதில் இணைந்து கொள்ளலாமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த மாறனின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளில், முதன்மைச் சுடரை, தீவகத்தைச் சேர்ந்த இரு மாவீரர்களின் தந்தைகளே ஏற்றுவார்களெனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து அங்கு சமுகமளித்துள்ள ஏனைய மாவீரர்களின் பெற்றோர், ஈகைச்சுடர் ஏற்றுவார்களெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.