சிலை அரசியல் சிந்தாந்த அரசியல்

பிரபாகரனின் மரணம் இன்னும் நடைபெறவில்லை என்று கூறும் தமிழ் தேசியர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் அந்திரட்டியோ அல்லது ஆட்டத் துவசமோ செய்வதற்கு தயார் இல்லை.

பிரபாகரனை காணமல் போனவர் பட்டியலிலும் இணைக்க தயார் இல்லை. மாறாக கடவுளர் பட்டியலில் இணைத்துள்ளார்கள்.

இலங்கையில் சிறுப்பான்மை தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக ஒடுக்கு முறையின் அடிப்படையில் முன்னிறுதப்பட்டு தனியாக பிரிந்து செல்லல் என்றாக ஆரம்பமானதாக தோற்றத்தை கொண்டிருந்தது.

ஆனால் இதற்கு அப்பால் உள்ள ஒடுக்கு முறைகள் பின் தள்ளப்பட்ட அக ஒடுக்கு முறைகள் அதிகம் எம்மிடையே இருந்து கொண்டுதான் இருந்தன.
ஈழவிடுதலைப் போராட்டத்தில் பிரபாகரனின் செயற்பாடு ஜனநாயக நடைமுறை, பன்முகத் தன்மை சகோதர இனங்களிடையேயான உறவுகளைப் பேணுதல் இடதுசாரிச் சமத்துவம் என்று எல்லாவற்றையும் மறுதலித்து தனி ஒருவனாக எல்லாவற்றையும் செய்து முடிக்கலாம் என்று புறப்பட்ட செயற்பாடாக அமைந்தது.

அதுதான் கல்தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடியாகிய நாங்கள் மட்டும் உலகில் ஒரே ஒரு ஆளக் கூடிய இனம் என்ற இனமானம் மட்டும் பேசி துவக்கை காவிய சிந்தனையின் அடிப்படையில் தகவமைக்கப்பட்டது.

இறுதியில் அவர்களின் அடிப்படைக் கட்டுப்பாடான சயனைட்டையும் கடிக்காமல் துப்பாக்கியை கீழே போட்டு மௌனிக்கப்பட்டவர் அல்லது மௌனிக்க வைக்கப்பட்டவராக பார்க்கப்படுபவர்.

இப்படி யதார்த்தத்தை பேசவிளையும் என்கருத்துடன் உடன்படாதவர்கள் இருக்கலாம் ஆனால் நாம் உண்மைகளை உடைத்துப் பேசியாக வேண்டும் அப்போதூன் நாம் பாடங்களை கற்றவர்களாக முன்னோக்கி நகரத்த முடியும்.

அவரின் இந்த பாசிச செயற்பாட்டின் மறுவளமாக அடையாளப்படுதப்படுதவதற்கு ஒருவர் உண்டென்றால் அது தோழர் பத்மநாபாதான்.

அதிகம் பலராலும் அறியப்படாதவர் அல்லது வேண்டப்படாதவராக பிரச்சாரத்திற்குள் மூழ்கடிக்கப்பட்டவர்.

இவர் மீதான அரசியல் விமர்சனங்களினூடான பார்வையே எம்மிடம் இருக்க வேண்டும் மாறாக மறுதலிக்கும் வெறுப்பு அரசியல் உண்மை நிலையக் கண்டறிய உதவாது.

பலருக்கும் மறைக்கப்பட்ட ஏன் மறுக்கப்பட ஒரு போராளியாக வாழ்ந்தவருக்கான சிலை திறப்பு ஒரு சிலை அரசியலை வவுனியாவில் உருவாக்கி இருக்கின்றது.

அவர் சார்ந்த அமைப்பிற்கு அப்பால் சகல அமைப்புகளின் பலராலும் நேசிப்படும் தலைவராக பத்மநாபா விளங்கினார். அவரை அருகில் இருந்து பார்க்கும் இலகு தன்மையை பயன்படுத்திய பலரும் இதனையையே முன்வைப்பர்.

பலர் பொதுவெளியில் இதனை முன்வைத்து தாமும் தமிழ் பரப்பில் உள்ள வெறுப்பு அரசியலின் அடையாளமான துரோகி என்ற பட்டத்திற்குள் போக விரும்பாமல் மௌனம் காப்பதுவும் எமக்குத் தெரியும்.

இலங்கையில் பிரசன்னமாக இருந்த இந்திய இராணுவம் புலிகள் இடையிலான மோதல்களில் அவருக்கு எதிரான சேற்றை வாரி இறைத்த நிகழ்வுகளே அதிகம்.

போரில் ஈடுபட்ட புலிகளும் அதன் தலைவவர் பிரபாகரனும் இந்திய இராணுவத்தின் செயற்பாடுகள் பற்றி விமர்சனங்களை மடைமாற்றி சேற்றை வாரி இறைத்த செயற்பாடுகளாக இதனைப் பார்க்க முடியும்.

அவர் சார்ந்த அமைப்பின் கருத்துச் சுதந்திரம் போராடும் உரிமை மறுக்கப்பட்டு ஆயுத நடவடிக்கை மூலம் புலிகளால் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் ஒரு தற்காப்பு யுத்தத்திற்கு புலிகளால் தள்ளப்பட்டவர்.

இன்று பலரும் இலங்கை முழுவதும் பேசும் அரசியல் செய்யும் மாகாண சபை முறையை அதிகாரப் பரவலாக்கத்தின் ஆரம்ப புள்ளியாக கண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தாக வேண்டும் என்பதை உறுதியாக சொல்லி அதனைச் செயற்படுத்த முயன்றவர்.

இதன் ஆயுள்காலத்தை ஏனைய அவனைவரும் குறுகியதாக்குவதில் இலங்கை அரசு தமிழநாட்டு அரசு ஏனைய தமிழர் தரப்பு என்றாக புலிகளும் ஜேவிபியும் ஆயுத செயற்பாடுகள் மூலம் செயற்பட்டனர்.

இந்த நிகழ்வு சிறுபான்மை தமிழ் பேசும் மக்கள் வரலாற்றில் ஏன் இலங்கை வரலாற்றில் நடைபெற்ற வரலாற்று தவறாகும்.

மாகாணசபை அதிகாரப் பரவாலக்கல் என்ற 13 வது திருத்தச் சட்டம் முடிந்த முழுமையான முடிவாக அவர் எப்போதும் கூறியவர் அல்ல.

கூடவே இலங்கை அரசுடன் அதிகாரங்களை தக்க வைப்பதற்காகவும் மேலும் பெறுவதற்கான தொடர்ந்தும் போராட வேண்டும் என்பதாகவே அவரால் பார்க்கப்பட்டது.

அதுதான் அவரை பிரோமதாசா இல்லாமல் ஒழிப்பதற்கு தமிழர’ தரப்பில் ஆயுத ரீதியில் புலிகளையும் அரசியல் ரீதியாக இன்னொரு தரப்பினரையும் அன்று பாவித்ததையும்… இன்று வரை ஜேவிபியினர் தனிநாடு கேட்டார் பிரகடனப்படுத்தினார் என்று வெறுப்பதும்… மகிந்த காலத்தில் இணைந்த வடக்கு கிழ்கு மாகாணசபையை ஜேவியை வைத்து இல்லாமல் செய்தற்கான நீதிமன்ற செயற்பாடுகளுக்கும் காரணமாகின.

அதிகாரப் பரவலாக்கல் என்பதுவே புதிய உலக ஒழுங்கில் பல் தேசிய இனங்கள் சகோதரத்துவத்துடன் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தும் என்ற புரிதலை நாம் புரிந்தாக வேண்டும்.

அன்று பலரும் நிராகரித்த அந்த மகாணாசபை பதவியிற்கும் இருப்பிற்கும் இன்று அன்று எதிர்தவர்கள் நிராகரித்தவர்கள் ஓடிக் கொண்டிருக்க அவர் சார்ந்தவர்கள் மட்டும் ஒரு பக்கமாக தள்ளப்பட்ட நிலமைகளே இன்றைய யதார்த்தம்.

இந்த பத்மநாபாவின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான தீர்வு என்பதற்கு அப்பால் அவர் பேசப்படுவதற்குரிய காரணங்களை இன்று எற்படுத்தியிருக்கின்றது.

இதுபற்றிய சிந்தாந்த அரசியலைப் பற்றி பேசுவோம்

விளிம்பு நிலை மக்களை முதன்மைப்படுத்தி அது கடற் தொழிலாளர்கள், கூலி; தொழிலாளர்கள், சிகை அலங்கரிப்பாளர்கள் என்று ஆரம்பித்து மலையகத்து பெருந்தோட்டத் தொழிலாளர் என்று இவர்களின் தலமையிலான போராட்டத்தை வலியுறுத்தில் செயற்பட்டதும் இதற்கு சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் முற்போக்கு சகத்திகளை இணைத்து செயற்பட்டமையினால் இலங்கை அரசால் இராஜ துரோகியாக்கப்பட்டவர் பத்மநாபா.

அது பற்றி வழக்குகள் இலங்கை நீதி மன்றங்களில் இருந்தது.
இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட போது அனைத்து அமைப்பு (புலிகள் உட்பட) ஈழவிடுதலைப் போராட்ட வீரர்களுக்கும் பொது மன்னிப்பை வழங்க வேண்டும் என்ற கோரிகையை இந்தியாவிடம் இலங்கையிடம் வலியுறுத்த் அதனையும் பெற்றவர் தோழர் நாபா தனக்கான மன்னிப்பை மட்டும் இலங்கை அரசிடம் கோரவில்லை.

அதற்கான கோரிக்கை முன்வைக்க அவர் சிந்தாந்த ரீதியில் விரும்பி இருக்கவில்லை.

இதற்கான மன்னிப்பை அவர் கேட்டால் அவர் மேல் இருக்கும் இராஜ துரோக குற்றச்சாட்டு நீக்கப்படலாம் என்பதாக இருந்தும் அதனை அவர் இறுதி வரை செய்யவில்லை.

இதன் அடிப்படையில் இலங்கை அரசின் குற்றவாளி என்ற அடிப்படையிலேயே அவரின் கொலை நிகழ்ந்துள்ளது
இடதுசாரிக் கருத்தியிலை தான் சார்ந்த அமைப்பின் ஊடு உருவாக்கும் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக செய்து வந்தவர் அதற்கான அமைப்புகளை உள்நாட்டிலும் சர்வதே உறவுகளிலும் மேற்கொண்டவர்.

சிறப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநில இடதுசாரி அமைப்புகளுடன் பகுத்தறிவு சமூக நீதி அமைப்புகளுடன் வெளிப்படையாகவும் இரகசியமாகவும் தொடர்ந்தும் செயற்படுத்தி வந்தவர் என்பதை அவர் காலத்து செயற்பாட்டாளர்கள் அறிவர்.

இது வெறும் தமிழ் உணர்வாளர்கள் என்பதற்கு அப்பாற்பட்ட விடயம். தமிழ் தேசியம் என்ற உசுப்பேத்தல்கள் விளிம்பு நிலை மக்களையும் பகுத்தறிவையும் சமூகநீதியையும் சமத்துவத்தையும் பேசவில்லை மாறாக சோழரையும் பாண்டியரையும் அரசர்களையும் பேசினார்கள்.

இதற்குள் இருந்த அந்தபுரம் குடியானவர்கள் என்ற ஒடுக்குமுறையை மறைத்து மணிமகுடம் பற்றியே மக்களிடம் வீரப்பிரதாபங்கள் பேசினர் இதிலிருந்து மாறுபட்டு அனைத்து மக்களுக்குமான உரிமை வாழ்விலைலப் பேச முற்பட்டவர் தோழர் நாபா.

அம்பேத்கார் போல் பெரியார் போல் ஜீவானந்தம் போல் செயற்பட்டவர். அது சார்ந்த சிந்தனையாளர்களுடன் இணைந்து பயணித்தவர்.

வியட்நாம் போராட்ட உத்திகளையும், கியூபாவின் செயற்பாடுகளையும் உள்வாங்கி நிக்கரகுவா மக்களின் புரட்சிகரப் போராட்ட அனுபவங்களை எமது சூழலுக்குள் இணைத்துப் பார்த்து சர்வ தேசிய சோசலிச கரங்களிடம் தனது உறவை பேணியவர்.

அவரின் எந்த செயற்பாட்டிலும் மனித நேயமே மேலோங்கியே இருந்தன.
கூடவே பன்முகத் தன்மை கொண்ட பரஸ்பர கருத்துப் பரிமாற்றங்கள் ஓங்கி ஒலிக்கும் ஐக்கிய முன்னணின் பிதாமகனாக செயற்பட்டவர்.

ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட வலுவான ஐக்கிய முன்னணியின் உருவாக்கத்திலும் அதன் வெற்றிகரமான அரசியல் செயற்பாடுகளிலும் பத்மநாபாவின் தலைமத்துவச் செயற்பாட்டை பலரும் அறிவர்.

அனைவரையும் அரவணைத்து அடுத்த கட்டத்திற்கு முன்னோக்கி நகர்த்தும் செயற்பாடுகளை எப்போதும் கொண்டிருந்தார். அப்படியான ஒரு மனித நேயமும் நட்பு பாராட்டுதலும் அவரிடம் இருந்ததை அருகில் இருந்து பார்த்தவர்களில் நானும் ஒருவன்.

இறுதியில் அவரின் அதீத மனித நேயமே அவரிடம் உதவிகளைப் பெற்று கற்று வந்த மாணவன் உண்டு அவர்களுடன் தங்கிய ஒருவன் புலிகளின் உளவாளியாக கோடம்பாக்கத்தில் கொலையால் அவர் மரணிப்பதற்கும் காரணமாக அமைந்தது.

இங்கு சிலை அரசியலை விட பத்தமாநபாவின் சமத்துவம், சமூக நீதி, மனித நேயம், ஐக்கியமான செயற்பாடு, பன்முகத்தன்மை, விளிம்பு நிலை மக்களின் வாழ்வை உறுதிப்படுத்தல் என்பதான சிந்தனைகளே ஈழ அரசியலில் மாற்று அரசியலாக முன்னகர்த்தப்பட வேண்டும்.

மாறாக அவரின் பௌதிகச் தோற்றத்திற்கு எந்த வகையிலும் ஒவ்வாத அழகியல் மறுப்புச் சிலை என்பது அவரின் சிந்தனையை செயற்பாட்டை மறுதலித்து மறைக்க முற்பட்ட செயற்பாட்டின் ஒரு வடிவமாக என்றால் உணரப்படுகின்றது.