திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் காலமானார்

திமுகவின் மூத்த தலைவராகவும், நீண்டகாலமாக கட்சியின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தவர் பேராசிரியர் க.அன்பழகன். வயோதிகம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது உடல்நலக் குறைவை அவர் சந்தித்து வந்தார்.

இந்த நிலையில் சளி, மூச்சுத் திணறல் காரணமாக கடந்த மாதம் 24 ஆம் தேதி (பிப்ரவரி 24) இரவு, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அன்பழகன் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே இன்று (மார்ச் 7) அவரது உயிர் பிரிந்தது. இதனை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று அதிகாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கலைஞரும், பேராசிரியரும் – திராவிட அரசியலில் ஒரு நீண்ட நட்பின் வரலாறு!

அன்பழகனின் உடல் பொதுமக்கள், கட்சித் தொண்டர்களின் அஞ்சலிக்காக, சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை மேலவை உறுப்பினராக 1962 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அன்பழகன், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 1967 முதல் 1971 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராக ஒன்பது முறை பதவி வகித்த அன்பழகன், 1977 ஆம் ஆண்டு முதல் இறக்கும் வரை திமுகவின் பொதுச் செயலாளராக பதவி வகித்தவர் என்ற சிறப்புக்குரியவர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உற்ற தோழராக திகழ்ந்த அன்பழகனின் மறைவு திமுக தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Image may contain: 1 person, eyeglasses