நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம் மூடப்பட்டது

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசிரியை ஒருவருக்கும் அவரது குழந்தைகள் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழ் செயற்படும் பொகவந்தலாவ ஆரியபுர பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியைக்கும் அவரது குழந்தைகள் இருவருக்கும் கொவிட் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியை கடந்த 28ஆம் திகதி மற்றும் 30ம் திகதிகளில் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் 1,500 மாணவர்கள் கல்வி பயில்வதுடன், 76 ஆசிரியர்கள் கடமையாற்றி வருகின்றனர்.

இதனால் அப்பாடசாலையின் அதிபர் உட்பட 76 ஆசிரியர்களையும் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த ஆசிரியையுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி 150 மாணவர்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேற்படி ஆசிரியருடன் தொடர்பைப் பேணிய ஆசிரியர்கள், மாணவர்களுக்கு இன்று (7) பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, பாடசாலை மற்றும் பாடசாலை வளாகத்தை தொற்று நீக்கம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைக்கு உட்பிரவேசிக்க கூடாது என அறிவித்தலும் ஒட்டப்பட்டுள்ளது.