வடக்குக் கிழக்கு மாகாணங்களின் இணைப்புத் தொடர்பாக வட மாகாண சபை உறுப்பினர் அ. அஸ்மினால் கடந்த ஆண்டு இதே தினத்தில் எழுதப்பட்ட கட்டுரை.
“வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்திற்கு முஸ்லிம் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்ற அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தொடர்தேர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற அதே சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்கள் சார்பாக இதுவரை தீர்க்கமான எவ்வித பதில்களும் முன்வைக்கப்படவில்லை. முஸ்லிம் மக்கள் வடக்குக் கிழக்கு இணைப்பு விடயத்தில் பூரண உடன்பாட்டினை இதுவரை வெளியிடவில்லை. இதனை அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான மக்கள் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் குழுவிற்கு முன்னதாக குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் மிகவும் தெளிவாக எடுத்துரைத்திருப்பதன் மூலம் எம்மால் அறிந்துகொள்ள முடியுமாக இருக்கின்றது.
எனினும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் வடக்குக் கிழக்கு இணைவு விடயத்தில் முஸ்லிம் மக்கள் எதிர்மறையாக நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடிகின்றது, அத்தோடு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைவுக்கு உடன்பட்டு விடுவார்கள் என்ற அச்சமும் சமூகவலைத்தளங்களில் பரவலாக முன்வைக்கப்படுகின்றது. எது எவ்வாறாயினும் மேற்படி விடயத்தை மிகவும் நிதானமாகவும் அறிவுபூர்வமாகவும் சிந்திக்கவும் கருத்தாடவும் தமிழ் முஸ்லிம் சமூகத் தலைவர்கள் முன்வரவேண்டும்.