ஐ.நாவில் பாலஸ்தீனம்: 153 நாடுகள் ஆதரவு

காசாவில் நடைபெறும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா சபையில் கடந்த டிசெம்பர் மாதம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஐ.நாசபையில் மொத்தம் உள்ள 193 உறுப்புநாடுகளில், 153 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. 10 நாடுகள் எதிராக வாக்களித்தன. 23 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகியிருந்தன.

ஐ.நா சபையில் பாலஸ்தீனம் தற்போது உறுப்பினராக சேர்க்கப்படவில்லை. அதற்கு பார்வையாளர் நாடுஎன்ற அந்தஸ்து மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஐ.நா சபையில் தங்களையும் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என பாலஸ்தீனம் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறது.

இதற்கு ஐ.நா சபையில் உறுப்பினராக உள்ள நாடுகளில் 3-ல் இரு பங்குநாடுகளின் ஆதரவும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதலும் தேவை. இந்நிலையில் ஐ.நா சபையில் உறுப்பினராக பாலஸ்தீனம் கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் கோரிக்கை விடுத்தது. ஆனால் இஸ்ரேலின் நட்பு நாடாக இருக்கும் வீட்டோ அதிகாரம் உள்ள அமெரிக்கா இதற்கு தடை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஐ.நா சபையில் ஐக்கியஅரபு எமிரேட்ஸ் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது. அதில், ‘‘விதிமுறைகள்படி ஐ.நா சபையில் உறுப்பினராக பாலஸ்தீனத்துக்கு தகுதி உள்ளது. அதனால் பாலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்க்க அனுமதிக்க வேண்டும். இந்த கோரிக்கையை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலும் பரிசீலிக்க வேண்டும் ’’ என கூறியிருந்தது. இதற்கு ஐ.நா.வும் ஆதரவு தெரிவித்தது. ஆனால் பாலஸ்தீனம் – இஸ்ரேல் இடையே இருதரப்பு ஒப்பந்தம் ஏற்படாமல், பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் பாலஸ்தீனத்துக்கு உறுப்பினர் அந்தஸ்து அளிக்கும் தீர்மானத்தின் மீது  சனிக்கிழமை (11) வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்தியா உட்பட 143 நாடுகள்இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட 9 நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. 25 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகியிருந்தன. இந்த விவகாரத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சாதகமாக பரிசீலிக்க வேண்டும் என ஐ.நா பொதுச் சபையும் கூறியுள்ளது.