காஸாவில் தமது குழந்தைகளின்….

இதுகுறித்து “ஸைனா அஸாம்” என்பவர் எழுதிய இந்தக் கவிதை இதயத்துள் இறங்கி ஏதோ செய்தது. மொழிபெயர்த்திருக்கிறேன்.

(இந்தக் கவிதை வாசிப்பு காணொளி வடிவில் ஆங்கிலத்தில் வந்திருக்கிறது. முதல் பின்னூட்டத்தில் இணைப்பு உள்ளது.)
*
எனது பெயரை எழுது அம்மா!
எனது பெயரை என் கால்களில் எழுது அம்மா
நிரந்தரமாய் அழியாத கறுப்புநிற மைகொண்டு எழுது
ஈரம் பட்டு கரைந்தழியா, அன்றேல்
சூடு பட்டு உருகியழியா மைகொண்டு எழுது.
எனது பெயரை என் கால்களில் எழுது அம்மா
தடிப்பாகவும் தெளிவாகவும் வரிகளை எழுது, அதில்
உனது மலர்ச்சியையும் சேர்த்துவிடு.
அப்போதான் அம்மா
நான் உறங்கச் செல்லும் போதெல்லாம், என்
விழியுரசும் உன் கையெழுத்தினுள் இதம் கொள்வேன்.
எனது பெயரை என் கால்களில் எழுது அம்மா
எனது சகோதரிகளது, சகோதரர்களது கால்களிலும் எழுது.
இவ் வழியில்
நாம் எல்லோரும் உறவுகொண்டு இருப்போம்
உனது பிள்ளைகள் நாம் என தெரியவருவோம்
எனது பெயரை என் கால்களில் எழுது அம்மா
உனது பெயரையும் ‘பபா’க் குட்டியின் பெயரையும் சேர்த்து
உனது கால்களிலும் எழுது.
இவ் வழியில்
நாம் எல்லோரும் ஒரே குடும்பமாக நினைவு கூரப்படுவோம்.
எனது பெயரை என் கால்களில் எழுது அம்மா
குண்டுகள் எமது வீட்டை தகர்க்கிறபோதோ
எமது மண்டையோட்டையும் எலும்புகளையும் சுவர்கள் நொருக்குகிறபோதோ
நாம் தப்பியோட எந்த இடமும் இல்லாமல் போன கதையை
எமது கால்கள் சொல்லும் !