கருணாநிதிக்கு மூச்சுத் திணறல்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு, ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டதாக, காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. கருணாநிதியின் உடல்நிலை சீராக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறலை சரி செய்ய சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும், காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதிக்கு நேற்று இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். கருணாநிதிக்கு சளி அதிகமாகி நுரையீரல் மற்றும் தொண்டையில் தொற்று ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இன்று பகல் காவேரி மருத்துவமனை, கருணாநிதி உடல்நிலை குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கருணாநிதிக்கு தொண்டை, நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளது.

அவருக்கு ஏற்பட்டுள்ள மூச்சுத் திணறலை சரி செய்ய ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. கருணாநிதிக்கு நோய்த் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.