’ஜனாதிபதிக்கு வழிவிட்டேன்’ – மஹிந்த ராஜபக்ஷ

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதியதோர் அரசாங்கத்தை உருவாக்கி, முன்னோக்கிச் செல்லவேண்டும் என்பதற்காகவே, பிரதமர் பதவியிலிந்து இராஜினிமா செய்ததாக, ​முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். விஜேராம மாவத்தையில் ​அமைந்துள்ள தனதில்லத்தில், இராஜினாமா கடிதத்தில் கைச்சாத்திட்ட பின்னரே, அவர் கண்டவாறு தெரிவித்திருந்தார்.ஒரு பொதுத் தேர்தலை நடத்தாமல், தொடர்ந்தும் பிரதமர் பதவியில் இருப்பதற்கு, தனக்கு எந்தவொரு எண்ணமும் கிடையாது என்றும் ஜனாதிபதியின் பணிக்கு, எந்தவொரு விதத்திலும் தடையாக இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

நாடாளுமன்றத்தில், வெறும் 103 ஆசனங்களைக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியை, கூட்டமைப்பு பணயக் கைதியாக வைத்துள்ளது என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆணைக்கு அடிபணிய ஐ.தே. க மறுத்தால், நாடாளுமன்றத்தில் அதன் பெரும்பான்மை இழக்கப்பட்டுவிடும் என்றும் அவர் கூறினார். எனவே, கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு, ஐ.தே.க மறுப்புத் தெரிவிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியே, நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளது என்று கூறிய அவர், ஏற்கெனவே பல பில்லியன் ரூபாய் வெளிநாட்டுக் கடனைப் பெற்றுள்ள ஐ.தே.க, இனி ஆட்சிக்கு வந்த பின்னர், எவ்வளவு தொகைக் கடனை பெறவுள்ளது என்பது தெரியவில்லை என்று அவர் கூறினார்.