மஹிந்தவின் புதிய முன்னணிக்கு தினேஷே தலைவர்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய முன்னணிக்கு, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்தி முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன, தலைவராக நியமிக்கப்படுதற்கான சாத்தியம் நிலவுவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த முன்னணியின் தலைமை பொறுப்பை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கோடாபய ராஜபக்ஷவும் ஏற்றுக்கொள்ள தயங்கியமையினாலேயே, இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை இந்த முன்னணிக்கு தலைவராக நியமிப்பதற்கு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்ட போதும், இதற்கு கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் சிலர், உருவாக்கப்படவுள்ள முன்னணியில் இணைந்துகொள்வதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேச நாணயக்கார ஆகியோர், புதியதொரு முன்னணி உருவாக்கப்படவுள்ளமை குறித்து உறுதிப்படுத்தியுள்ளனர்.