யாழ்.நூலகத்தில் அப்துல் கலாம் சிலை திறப்பு

மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் உருவச்சிலை யாழ். பொதுநூலகத்தில் திறந்து வைக்கப்பட்டது.அன்னாரின் உருவச்சிலையினை இந்திய தூதுவர் வை.கே.சின்ஹா மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனர். யாழ்.பொதுநூலக வளாகத்தில் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன்,வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண சபை அவைத் தலைவர்.

சீ.வி.கே.சிவஞானம், வடமாகாண ஆளுனரின் செயலாளர். இ.இளங்கோவன், யாழ். மாநகர ஆணையாளர். ப. வாகீசன் யாழ்.பொதுநூலகர் ச.சுகந்தினி உட்பட அரச மற்றும் பொதுநூலக அதிகாரிகள் எனப்பலர் கலந்துகொண்டனர். யாழ்ப்பாணத்துக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு, அணுவிஞ்ஞானியும், முன்னாள் இந்திய குடியரசுதலைவருமான ஏ.பிஜே. அப்துல்கலாம் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.