ஊழல் விசாரணையை ஆரம்பித்தால் பேரவைக்கு வழங்கிவரும் ஆதரவை நிறுத்துவேன் – ஐங்கரநேசன் எச்சரிக்கை.

வடக்கு மாகாணசபை அமைச்சர்களுக்கு எதிராக பரவலாக சுமத்தப்பட்டுள்ள ஊழல் மற்றும் ஒழுக்க ரீதியான குற்றச்சாட்டுகளை விசாரிக்கவென இளைப்பாறிய மேல்நீதிமன்ற நீதிபதி திரு.எஸ்.தியாகேந்திரன் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு 03.10.2016 இல் இருந்து செயற்படும் என்று முதலமைச்சர் பகிரங்கமாக பத்திரிகை அறிவித்தல் ஊடாக அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் தமிழ் மக்கள் பேரவையின் பிரமுகர் ஒருவருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ள வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், ‘தமிழரசுக்கட்சியை எதிர்த்துக் கொண்டு தான் தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவு வழங்கி வருவதாகவும், அதற்கு நீங்கள் காட்டும் நன்றிக்கடன் இது தானா? என்றும் சினந்து ஏசியதுடன்,

நீங்கள் தான் முதலமைச்சருக்கு கயிறு கொடுத்து அவரை பிழையாக நடத்துகின்றீர்கள். அந்த மனுசனும் தேவையில்லாமல் ஊழல், விசாரணை அது இது என்று சத்தம் போட்டுக்கொண்டிருக்கு. நீங்கள் எடுத்துச்சொன்னால் அவர் ஒரு வழிக்கு வருவார். சுமுகமாக பேசி ஒரு முடிவுக்கு வரலாம்.

இல்லாவிட்டால் தமிழ் மக்கள் பேரவைக்கு வழங்கி வரும் ஆதரவை தான் விலக்கிக்கொள்ள வேண்டிய நிலைமைகள் ஏற்படும் என்றும், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு சார்பான நிலைப்பாட்டை தான் எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும்’ என்றும் எச்சரித்துள்ளார்.