தடுப்பூசிகளை வழங்க சீனா இணக்கம்

கொவிட் 19 தொற்றுக்கான தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. சீனாவின் சினோபாம் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிகளில் 300,000 தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, இந்த தடுப்பூசியை பெப்ரவரி மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்க சீனா எதிர்பார்த்துள்ளது.

‘சீனத் தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கும்’

சீனாவில் தயாரிக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கும் இவ்வாரத்துக்கள் அனுமதி கிடைக்கும் என, மருந்து தயாரிப்பு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அவசர பாவனைக்காக, இந்தத் தடுப்பூசியைப் பதிவு செய்ய தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

‘தோட்ட வீடமைப்பு முறையில் திருத்தம்’

பெருந்தோட்ட மக்களுக்கு இடவசதிகளை கொண்ட வீடுகளை அமைத்துக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதென தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல, இதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகளுக்கு மேலதிகமாக, இந்திய அரசாங்கமும் இந்த வீட்டுத் திட்டத்துக்கு உதவ முன்வந்துள்ளது என்றார்.

’தவசிகுளம் மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்ள முடியும்’

வவுனியா – தவசிகுளம் மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை சமர்பிக்க முடியும் என்று, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் சமூகவியலாளர் ச,கோபிநாத் தெரிவித்துள்ளார்.

பீ .1.258 பரம்பரையின் மாறி இலங்கையில் உள்ளது

பிரித்தானியா, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிற்ஸலாந்து ஆகிய நாடுகளில் பரவிய மாறி (திரிபடைந்த) கொரோனா வைரஸ் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை, ஸ்ரீ ஜயவர்தனபுர பலக்லைக்கழகத்தின் மரபணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பளார் வைத்தியர் சந்திம ஜீவர்தன உறுதியாக தெரிவித்துள்ளார். கொவிட் -19 (பீ .1.258 பரம்பரை) இன் புதிய மாறுபாடு, அதிக பரிமாற்ற விகிதத்தைக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் புதன்கிழமை மாபெரும் போராட்டம்

இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாட்டை கண்டித்து, எதிர்வரும் புதன்கிழமை யாழ். மாவட்டத்தில் மாபெரும் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக, யாழ். மாவட்டக் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களில் சம்மேளனத் தலைவர் அன்னராசா தெரிவித்தார்.

சுரேஷ் ஓர் அரசியல் விபச்சாரி – கஜேந்திரகுமார்

ஈபீஆர்எல்எப் அமைப்பின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அரசியல் விபச்சாரி என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.