அழகென்ற குற்றத்திற்கான தண்டனை மரணமாகும்

பிரேமவதி மனம்பேரியின் கதை
தமிழில் : ஃபஹீமாஜஹான்

  ஹெந்திரிக் அப்புஹாமி கதிர்காம  வனப் பாதுகாப்புத் திணைக்களத்தில் காவல் உத்தியோகத்தராகப் பணிபுரிந்து தனது சீவனோபாயத்தை நடத்திச் சென்றார். பத்து பிள்ளைகளைக் கொண்ட ஹெந்திரிக் அப்புஹாமி - லீலாவதி தம்பதியினர் 1951ம் ஆண்டில் பிறந்த தமது முதலாவது குழந்தைக்கு 'பிரேமவதி மனம்பேரி' எனப் பெயர் சூட்டினர். அவர்களது ஏழைக்குடிசையினுள் காண்போரைக் கொள்ளை கொள்ளும் மலரொன்றாக 'பிரேமவதி மனம்பேரி'  நாளுக்கு நாள் வண்ணம் பெற்று வளர்ந்தாள். இளமைப் பருவம் அவளது அழகை மென்மேலும் கூட்டியது. 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கதிர்காமத்தில் இடம்பெற்ற புத்தாண்டு அழகுராணிப் போட்டியில் கலந்து கொண்டபோது கதிர்காமத்து அழகுராணியாகக் கிரீடம் சூட்டப்பட்டாள். இந்த நிகழ்வு இடம்பெற்று நாள், வாரம், மாதமென ஓராண்டு கடந்தது.

1971 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொழுந்து விட்டெரிகின்ற அரசியல் சூழ்நிலைகளோடு உதயமானது. மக்கள் விடுதலை முன்னணியின் முதல் கிளர்ச்சி ஆரம்பித்ததோடு, இலங்கையின் பல்வேறு பிரதேசங்களையும் போலவே கதிர்காமத்திலும் அதன் தாக்கம் உணரப்பட்டது. கிளர்ச்சியில் ஈடுபடுகின்றவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசாங்கம் 1947 இலக்கம் 25, இலங்கை பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசர காலச் சட்டமொன்றை அறிவித்து, அவசர காலச் சட்ட நடைமுறைகளைக் கொண்டுவந்தது.


        அதனால், பின்னடைவு காணாத கிளர்ச்சியாளர்கள் ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கி மூலம் கதிர்காம பொலிஸ் நிலையத்தின் மீது இரு தாக்குதல்களைப் பிரயோகித்தனர். மறு நாள் மீண்டும் பொலிஸ் நிலையம் மீது தாக்குதலை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, பொலிஸ் நிலையத்தை விட்டுவிட்டு அங்கிருந்து அம்பாந்தோட்டை வரை பின்வாங்கிச் செல்லவேண்டுமென கதிர்காமப் பொலிஸ் நிலையப் பொலிஸ் அத்தியட்சகரான உடவத்த தீர்மானித்தார்.


        கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இராணுவத்தைக் களமிறக்கியது. ஏப்ரல 12 ஆம் திகதியையடைந்தபோது சில நாட்களுக்கேனும் இராணுவம் பின்வாங்கவேண்டும் என அப் பிரதேசத்துக்குப் பொறுப்பாகவிருந்த  இராணுவ அதிகாரி கர்னல் நுகவெல தீர்மானித்தார். இவ்வாறு இருக்க மூன்றாவது கெமுணு படைப்பிரிவின் லுதினன் ஏ.விஜேசூரிய உள்ளிட்ட இராணுவப் பிரிவொன்று ஏப்ரல் 10 -12 வரை திஸ்ஸமஹாராம நகருக்கு அண்மையில் முகாம் அமைத்துத் தங்கி இருந்திடத் துணிந்தனர்.


  சரியாக ஏப்ரல் மாதம் 16ம் திகதி காலை 5.30 மணியளவில் கர்னல் நுகவெல கட்டளையொன்றை விடுத்தார். அதன்படி விஜேசூரிய உள்ளிட்ட இருபத்தைந்து  பேர்களடங்கிய இராணுவ வீரர்கள் குழுவொன்று கதிர்காம நகரைக் கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இறங்கியது. அவர்கள் எவ்வளவு துரிதமாகச் செயற்பட்டார்களெனின் அன்றைய காலைச் சூரியன் கதிர்காமத்திற்கு உதயமாகும் வேளையில், நகரமானது இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது. அதுமாத்திரமன்றி, அந்த விடிகாலையிலேயே கிளர்ச்சியுடன் தொடர்புபட்டவர்களெனக் கூறி, சந்தேகத்தின் பேரில் அனேக இளைஞர் யுவதிகளும் கைது செய்யப்பட்டிருந்தனர்.



மீசையரும்பத் தொடங்கியிருந்த பள்ளிக்கூட மாணவர் தொடக்கம் திருமணமாகி ஒருநாள் கூடக் கடந்திராத இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட அனேகர் கைது செய்யப்பட்டோரில் இருந்தனர். துரதிஷ்டவசமாக அப்போது 22 வயதையடைந்திருந்த இளம் யுவதியான கதிர்காம அழகுராணியின் பெயரும் கைது செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலில் காணப்பட்டது.


  காலை 9 மணியளவில் பொலிஸ் ஜீப் வண்டியொன்று தமது வீட்டின் முன்னால் வந்து நிற்பதைப் பார்த்த கணத்தில் பிரேமவதியின் தாயாரின் விழிகளில் ஏதோவொரு தீய நிழலொன்றின் சுவடு தென்படலாயிற்று. பொலிஸ் அதிகாரி உடவத்த உள்ளிட்ட குழுவொன்று வீட்டுக்கு வந்தது. கணப்பொழுதில் கதிர்காம அழகு ராணியை அவர்கள் கைது செய்தனர்.


        எந்தத் தவறைச் செய்ததற்காக தனது மகளைக் கொண்டு போகிறீர்கள் எனக் கேட்டழுத அந்தத் தாயாருக்கு  

“அதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் நாங்களும் இவளைக் கொண்டு போகிறோம்”
என்ற பதில் உடவத்தவிடமிருந்து கிடைத்தது.

  பிரேமவதியுடன் மேலும் நான்கு இளம்பெண்கள் பொலீசாரினால் கைது செய்யப் பட்டு இராணுவ முகாமுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தனர்.


  அன்று மாலை கர்னல் நுகவெல இராணுவ முகாமுக்கு வருகை தந்தார். அவ்வேளையில் லுதினன் விஜேசூரிய இந்த ஐந்து யுவதிகளையும் ‘கைது செய்யப்பட்ட பெண் கிளர்ச்சியாளர்கள்’ என்று கூறி அவரின் முன்னிலைக்குக் கொண்டு வந்தான். எனினும் பிரேமவதி அத்தகைய செயலொன்றில் ஈடுபட்டதற்கான அத்தாட்சியாகக் காண்பிப்பதற்கு எந்தவொரு சாட்சியும் அவனிடம் காணப்படவில்லை. ஏப்ரல் 16ம் திகதிக்குப் பின்னர் கிளர்ச்சியாளர்களின் எந்தவொரு தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை.


  பிரேமவதியைக் கைது செய்த மறுதினம் அதாவது 17 ஆம் திகதியன்று காலையில் லுதினன் விஜேசூரிய பிரேமவதியை நீண்ட நேரம் விசாரணை செய்தான். எனினும் அவளிடமிருந்து எந்தவொரு விடயத்தையும் வெளிக்கொண்டு வர முடியாமற்போகவே அவள் அணிந்திருக்கும் ஆடைகளைக் களையுமாறு கட்டளையிட்டான். வாழ்வில் ஒருபோதும் நடக்கும் என எதிர்பார்த்திராத நிகழ்ச்சிகளால் அதிர்ச்சியும் களைப்பும் அடைந்திருந்த அவள் அதைக் கேட்டதும் மிகவும் கலக்கமடைந்தாள். அவள் ஆடைகளைக் களைய முடியாதென மறுத்தாள். ஆனாலும் அவளது மறுப்பினால் எந்தவொரு பலனும் கிட்டவில்லை. அவளுக்கு தனது அழகு மேனியை மறைத்துக் கொண்டிருந்த ஆடைகளைக் களைய நேர்ந்தது.




  லுதினன் விஜேசூரியவின் கட்டளைகள் அத்துடன் நின்றுவிடவில்லை. நிர்வாணமாக்கப்பட்ட யுவதிக்கு, கைகள் இரண்டையும் மேலுயர்த்தியவண்ணம் கதிர்காம நகரம் பூராகவும் நடந்து செல்லுமாறு அடுத்த கட்டளை விடுக்கப்பட்டது. அவ்வாறு செல்கையில் "நான் ஐந்து வகுப்புகளுக்கும் போனேன்" (கதிர்காமத்தில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) யினரால் நடத்தப்பட்ட 5 வகுப்புகள்) என்பதை இடைவிடாது கூறிக் கொண்டு போகுமாறும் கட்டளையிட்டான். அத்துடன் லுதினன் விஜேசூரிய, இராணுவ வீரன் அமரதாச ரத்நாயக்க, மற்றொரு இராணுவ வீரன் ஆகிய மூவரும் ஆயுதங்களோடு அவளைப் பின்தொடர்ந்து சென்றனர்.


        அந்த அப்பாவி யுவதி சுமார் இருநூறு யார் தூரம் நடந்து சென்றதும் அவளருகே வந்த லுதினன் விஜேசூரிய அவளை உதைத்தான். அதன் பிறகு அவளருகே நின்றவாறே அவள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தான். வெடிபட்டு கீழே விழுந்த அவள் மேலும் சிறிது தூரம் நிலத்திலே தவழ்ந்தவாறு முன்னோக்கிச் சென்றாள். அதன் பிறகு எழுப்புவதற்கு முயற்சி செய்தாலும் மீண்டும் கீழே சரிந்து வீழ்ந்த அவள் இறந்து விட்டாளென நினைத்த இராணுவக் குழு அவளை அவ்விடத்திலேயே போட்டுவிட்டு முகாமுக்குத் திரும்பியது.


  இறந்துவிட்டதாக நினைத்துத் தெருவில் விட்டு வந்த பிரேமவதி இன்னும் இறந்து விடவில்லை என்ற தகவல் முகாமுக்குச் சென்று சிறிது நேரத்தின் பின்னர் அந்தக் குழுவை எட்டியது. உடனடியாக துப்பாக்கியுடன் வந்த இராணுவ வீரன் ரத்நாயக்க, உயிருக்காகப் போராடியவாறு தெருவில் வீழ்ந்து கிடந்த அவள் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினான். அதன் பின்னர் எலடின் எனும் நபரிடம்  குழியொன்றைத் தோண்டி அவளைப் புதைக்குமாறு கூறிவிட்டு இராணுவ வீரன் ரத்நாயக்கா முகாமுக்குத் திரும்பியிருந்தான்.


        இறந்து போன யுவதியின் உடலைப் புதைப்பதற்காகச் சென்ற எலடின், இன்னும் அவளது உடலில் உயிர் இருப்பதை அவதானித்தான். உடனடியாக இராணுவ வீரனைப் பின்தொடர்ந்து முகாமுக்கு ஓடி வந்த எலடின் பிரேமவதி இன்னும் இறந்து விடவில்லை என்பதைத் தெரிவித்தான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இராணுவத்தினர் அவளைக் கொலைசெய்வதற்காக இன்னொரு இராணுவ வீரனை அனுப்பினர். அவன் தனக்குக் கிடைத்த கட்டளையின் பிரகாரம், பிரேமவதியின் தலையை நோக்கி வெடிவைத்ததோடு அவ் வேட்டினால் ஹெந்திரிக் அப்புஹாமி - லீலாவதி தம்பதியினரின் மூத்த மகள், கதிர்காம அழகுராணி நிரந்தரமாகவே விழிகளை மூடிக் கொண்டாள். எவ்வாறாயினும் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த அவளது உடலிலில் இறுதியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவளது உயிரைப்போக்கிய இராணுவ வீரன் யார் என்பது இறுதிவரைக்கும் அறிந்து கொள்ள முடியாமற் போனதால் அவன் "அறிமுகமற்ற துப்பாக்கிதாரி" என வரலாற்றில் பதிவானதோடு அவன் ஒருபோதும் கைது செய்யப் படவும் இல்லை.

  கிளர்ச்சியின் பின்னர் லுதினன் விஜேசூரிய, இராணுவ வீரன் அமரதாச ரத்நாயக்க ஆகிய இருவரும் கொலைசெய்வதற்கு முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்கள். நீதிமன்றத்தால் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட அவ்விருவரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தனர். பி.ஈ.செட்டி, அர்ட்லி பெரேரா .ஆர்.எஸ்.ஆர்.குமாரஸ்வாமி ஆகிய சட்டத்தரணிகள் குழுவொன்று இவர்கள் சார்பில் தோன்றினர். லுதினன் விஜேசூரிய எதிர்ப்பு மனுவொன்றை முன்வைத்துத்  தனது பக்க நியாயங்களைக் குறிப்பிட்டிருந்தான். அதில் கர்னல் நுகவெல மூலம் அவனுக்கு கிளர்ச்சியாளர்களை அழித்துவிடுமாறு கட்டளை கிடைக்கப் பெற்றிருந்தபடியால்தான் கிளர்ச்சியாளர்களை அழித்து மேலதிகாரியின் கட்டளையை நிறைவேற்றியதாகக் குறிப்பிட்டிருந்தான். அவ்வாறே சட்டத்தரணி செட்டியும் அப்போது காணப்பட்ட சாட்சிக் கோவையின் 114 ஆவது வாசகத்தின் பிரகாரம் அரசபணியின் செயற்பாடுகள் யாவும் சட்டபூர்வமானவை என்று வாதிட்டார்.


  இந்த அனைத்து நிகழ்வுகளும் அவசர காலச் சட்டம் நிலவிய சூழலிலேயே இடம்பெற்றிருந்தது. இச் சம்பவம்  நிகழ்ந்த சமயத்திலும் மோதல் ஏற்படுவதற்கான சூழல் கதிர்காமத்தில் நிலவியதாகச் சட்டத்தரணி செட்டியின் வாதம் அமைந்திருந்தது. எனினும் ஏப்ரல் 17ம் திகதி ஆகும் போது கதிர்காமத்தில் ஆயுத மோதல் ஒன்று நடைபெற்றிருக்காததோடு, அவ்வாறு நடைபெற்றிருந்தாலும் அல்லது இல்லாவிடினும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப் பட்ட நபரொருவரைக் கொலை செய்வதனை நியாயப்படுத்த முடியாதென்பது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவாக அமைந்திருந்தது. இராணுவ வீரனொருவன், மேலதிகாரியின் கட்டளையின் படி செயற்பட்டிருந்தாலும் இச் சட்ட விரோதச் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு மேலதிகாரியொருவரின் கட்டளையைப் பின்பற்ற வேண்டியது அக் கட்டளையானது சட்டபூர்வமானதாக இருந்தால் மாத்திரமாகும். வேறு சொற்களில் கூறுவதானால் மேலதிகாரியொருவராக இருந்தாலும் அவர் சட்டத்திற்கு முரணான செயலொன்றைச் செய்யக் கோரும்போது அதனைப் புறக்கணிக்கவே வேண்டும்.


  இங்கு இவ்விரு இராணுவ வீரர்களினது சட்டத்தரணிகள் தண்டனைச் சட்டக் கோவையின் 69 வது அதிகாரத்தைப் பயன்படுத்தி இராணுவத்தின் செயல்களை நியாயப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டனர். அதாவது, ஒன்றைச் செய்வதற்கு சட்டத்தின் மூலம் கட்டுப்பட்டிருப்பதாக 'உளப்பூர்வமாகவே' நம்பிக்கை வைத்துள்ள ஒருவர் செய்கின்ற செயலொன்றானது தவறாகாது என்பதாகும். தண்டனைச் சட்டக் கோவையானது இவ்விடயத்தை மேலும் 'சட்டத்தின் நியமங்களுக்கமைய தனது மேலதிகாரியின் கட்டளையின்படி யுத்த வீரனொருவன் கிளர்ச்சிக் குழுவொன்றைக் நோக்கிச் சுடுவதானது, அந்த வீரனின் எந்தவொரு தவறுமாகாது'  எனத் தெளிவுபடுத்துகிறது. ஆனாலும் அவசரகாலச் சட்டத்தின்கீழ் என்றபோதும் 'உளப்பூர்வமாக' என்பதனூடாகச் சட்டவிரோதச் செயல்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடையாது.


  இறுதியில் மேன்முறையீட்டு நீதிமன்றம் மூலம் பிரதிவாதிகள் இருவருக்கும் 16 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப் பட்டது. 1973 நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி நடைபெற்ற எதிர்ப்பு மனு மீதான வழக்கு விசாரணையின் போது நீதிபதி அலஸ் உள்ளிட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழுவினர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதென்று தீர்ப்பளித்தனர். பின்னர், அதாவது 1988 ஆம் ஆண்டு ஜே.வி.பி. உறுப்பினர் குழுவொன்றினால் பிரேமவதியைக் கொலை செய்ததற்கான தண்டனையாக லுதினன் விஜேசூரிய மாத்தறையில் வைத்துக் கொலை செய்யப்பட்டான்.

நன்றி: சட்டத்தரணி பிரியலால் சிரிசேன மனோரி கலுகம்பிட்டிய (சமபிம 2010 ஆகஸ்ட்)
எதுவரை இதழ்

02.01.2019 முதல் யாழ்ப்பாணம் கொழும்புக்கு 6 புகையிரத சேவைகள்.புதிய நேர அட்டவணை

யாழ்ப்பாணம் புறப்படுதல் – கொழும்பு சென்றடைதல்.
———————————————————
உத்தரதேவி
காலை 6.10 மணி – பிற்பகல் 1.15 மணி
புதுரெயின்-01
காலை 6.25 மணி – பிற்பகல் 4.00 மணி
யாழ்தேவி
காலை 9.35 மணி – இரவு 7.15 மணி
ஏசி இன்ரசிற்ரி
பி.ப.1.45 மணி – இரவு 8.15 மணி
புதுரெயின்-02
மாலை 6.40 மணி-அடுத்த நாள் காலை 4.30மணி 
தபால் ரெயின்- Mail Train
இரவு 8.25 மணி -அடுத்த நாள் காலை 5.30மணி

கொழும்பு புறப்படுதல் – யாழ்ப்பாணம் வந்தடைதல்
———————————————————–
ஏசி இன்ரசிற்ரி
காலை 5.45 மணி – பிற்பகல் 12.05 மணி 
யாழ்தேவி
காலை 6.30 மணி – பிற்பகல் 3.00 மணி
புதுரெயின் – 01
காலை 8.50 மணி – மாலை 6.30 மணி
உத்திரதேவி
காலை 11.50 மணி – மாலை 6.15 மணி 
புதுரெயின் -02
இரவு 7.15 மணி – அடுத்த நாள் காலை 4.30 மணி
தபால் ரெயின் -Night Mail
இரவு 9.00 மணி – அடுத்த நாள் காலை 5.30 மணி
————————————————————-
தற்போது கொழும்பு யாழ் பயணம் செய்யும் ஏசி இன்ரசிற்ரி ரெயினில் F பெட்டியைத் திருத்த வேலைக்கெனக் கழட்டி 2 மாதங்கள். அதில் 54 பேர் பயணம் செய்யலாம்.
அப் பெட்டி இன்னமும் பூட்டப்படவில்லை.

அது குறித்து எமது அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் கவனம் எடுக்க வேண்டும்.

தடுமாறுகிறதா சீனப் பொருளாதாரம்?

குறைந்த ஊதியத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களையும் அதிக அளவிலான ஏற்றுமதியையும் அடிப்படையாகக் கொண்டு நீண்ட காலம் செழித்துக்கொண்டிருந்த சீனாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது தடுமாற ஆரம்பித்திருக்கிறது. ஆண்டின் இரண்டாவது பாதியில், சீனாவின் பொருளாதாரம் 6.2% மட்டுமே வளர்ச்சியடைந்திருப்பதாக சீனாவின் தேசிய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டிருக்கும் தரவுகள் தெரிவிக்கின்றன. 27 ஆண்டுகளில் குறைவான வளர்ச்சி இது என்பதுதான் இந்தத் தரவை முக்கியத்துவப்படுத்துகிறது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 6.4% ஆகவும், 2018 முழுவதுமாக 6.6% ஆகவும் வளர்ச்சி இருந்தது என்பதைப் பார்க்க வேண்டும்.

கூட்டமைப்பின் எதிர்ப்புக்கு மத்தியில் அவசரகால சட்டம் நீடிப்பு

அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் யோசனை 38 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 40 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவஞானம் ஸ்ரீதரன் எதிராக வாக்களித்தனர். மக்கள் விடுதலை முன்னணி சபையில் இல்லை.

ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கின் ‘பிடி’

(இலட்சுமணன்)

ஜனாதிபதித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இவை மூன்றும், அடுத்த வருடத்துக்குள் நடைபெறத்தான் போகின்றன. அவை நடைபெறும் ஒழுங்கில், மாற்றம் நிகழலாம். ஆனால், ஜனாதிபதித் தேர்தலே, முதலில் நடைபெறுவதற்கான அரசியல் காரணிகள் அதிகம் காணப்படுகின்றன.

மூன்றாம் உலகில் கொட்டப்படும் கழிவுகள்: உனது குப்பைக்கா எனது வளவு?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
கழிவகற்றல் கடினமான பணி. கழிவுகளின் வகையும் தொகையும் அதைச் சவாலானதாக ஆக்கியுள்ளன. உலகமே குப்பைகளால் நிரம்பி வழிகிறது. ஆனால், யாரோ உற்பத்தி செய்யும் கழிவுகள், வேறு யாருடையதோ பொறுப்பாகிறது. எல்லாவற்றையும் வியாபாரமாக்கும் மனிதனின் இழிநிலை, மனிதகுலத்தின் மாண்பையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கியுள்ளது.

இவை, மனித அறம்சார்ந்த கேள்விகளை எழுப்புகின்றன. அறம் அடிபட்டுப்போன காலத்தில், மனிதகுல மீட்சிக்கான சில குரல்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுகின்றன. ஊடகங்கள் சொல்லும் கதைகளை விட, இக்குரல்கள் ஆதரவையும் பரவலையும் வேண்டி நிற்கின்றன.

மூன்றாம் உலக நாடுகள், குப்பைத் தொட்டிகளாக மாறி, நீண்ட காலங்கள் ஆயிற்று. இதன் தாக்கம், இன்னமும் உணரப்படவில்லை. இடைக்கிடையே, கழிவுகள் இறக்குமதி செய்யப்படுவது தொடர்பில் வெளியாகும் செய்தி, சலசலப்புகளை ஏற்படுத்தினாலும், அவை விரைவில் அடங்கி விடுகின்றது.

மேற்குலக நாடுகளின் கழிவுகளை, மூன்றாம் உலக நாடுகளில் கொட்டுவது, நீண்ட காலமாக நடந்து வருகிறது. அதன் மோசமான விளைவுகளை, மூன்றாம் உலக நாடுகளின் மக்களே அனுபவிக்கிறார்கள்.

அபிவிருத்தியின் பெயராலும் வியாபாரத்தின் பெயராலும் இது நடந்த வண்ணம் உள்ளது. மாறுகின்ற காலச்சூழலில், இது குறித்த விழிப்புணர்வும் செயலாற்றுகையும் அவசியமாகிறது.
அண்மையில், பிரித்தானியாவில் இருந்து, இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட கழிவுகள் தொடர்பில் வெளியான செய்தி, மேற்குலக நாடுகளின் குப்பைகள், இலங்கையில் கொட்டப்படுவது தொடர்பான கவனத்தைப் பெற்றுள்ளது.

இது பேசுபொருளாக இருக்கின்ற போதும், அதன் பாதிப்புகள் குறித்தும் நோக்கங்கள் குறித்துமான உரையாடல்கள், மிகக் குறுகிய வட்டத்துக்குள்ளேயே நிகழ்கின்றன.

இந்தப் பிரச்சினையை, ‘கழிவுகளைத் திருப்பி அனுப்புவது’ என்பதாகச் சுருக்கி, இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட அரசாங்கமும் தொடர்புடையவர்களும் முயல்கிறார்கள். திருப்பி அனுப்புவதன் மூலம், தமது கடமையை நிறைவேற்றி விட்டதாக, அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் பின்னணியில், கேட்க வேண்டிய சில கேள்விகள் உள்ளன.

முதலாவது, இவ்வாறான கழிவுகள், இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு, அனுமதி அளித்தது யார்?

இரண்டாவது, இறக்குமதி செய்யப்படும் கழிவுகள், எவ்வகையானவை என்பது பற்றிய, முழுமையான தரவுகள், அரசாங்கத்திடம் இருக்கின்றனவா?

மூன்றாவது, இக்கழிவுகளை மீள்சுழற்சியின் பெயரால் இறக்குமதி செய்யும் நிறுவனங்களிடம், அதை மீள்சுழற்சிக்கு உட்படுத்தும் தொழில்நுட்பம் இருக்கிறது என்பது, உறுதி செய்யப்பட்டுள்ளதா?

நான்காவது, இறக்குமதியாகும் கழிவுகளில், எத்தனை சதவீதம் மீள்சுழற்சிக்கு உள்ளாகிறது?
ஐந்தாவது, மீள்சுழற்சிக்கு உள்ளாகாத கழிவுகளுக்கு என்ன நடக்கின்றன, அவற்றின் சுகாதார, சூழலியல் பாதிப்புகள் என்ன?

மேற்சொன்ன எந்த ஒரு கேள்விக்கும், இதுவரை பதில் அளிக்கப்படவில்லை. இக்கேள்விகள், இலங்கைக்கு மட்டுமானவையல்ல; மேற்குலக நாடுகளில் இருந்து, கழிவுகளை இறக்குமதி செய்யும் அனைத்து, மூன்றாம் உலக நாடுகளிலும், இதே கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஆனால், இதற்கான பதில்களை, இதுவரை எந்தவோர் அரசாங்கமும் வழங்கவில்லை.

எமது எதிர்காலச் சந்ததிகளின் வளமான வாழ்வு குறித்துப் பேசுவதாக இருந்தால், முதலில் நாம், எமது கழிவுகள் குறித்தும், இறக்குமதி செய்யப்படும் கழிவுகள் குறித்தும் விரிவாகவும் ஆழமாகவும் திறந்த மனதுடனும் நேர்மையாகவும் ஓர் உரையாடலை மேற்கொண்டாக வேண்டும். அதைச் செய்யத் தவறினால், எதிர்காலச் சந்ததிகளுக்கு நாம் துரோகம் இழைத்தவர்கள் ஆவோம்.

கழிவுகளின் கதை

ஒவ்வொரு நொடியிலும், கழிவுகள் உற்பத்தியாகின்றன. உற்பத்தியாகும் பெரும்பாலான கழிவுகளின் தீவிரத் தன்மை பற்றிய அக்கறை எதுவுமற்று, அக்கழிவுகள் மனிதர்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. கழிவுகளின் தீவிரம் தொடர்பான, மிக எளிய மூன்று புள்ளி விவரங்கள், இதன் தீவிரத்தை உணர்த்தப் போதுமானவை.

  1. ஒவ்வொரு 30 வினாடிக்கும், நான்கு பெரிய பஸ்களை முழுமையாக நிரப்பக் கூடிய அளவுக்கான பிளாஸ்டிக்கை, பிரித்தானியா கழிவாக வெளியேற்றுகிறது.
  2. மூன்றாம் உலக நாடுகளில், ஒவ்வொரு கணத்திலும் இரண்டு பெரிய பஸ்களில் கொள்ளக்கூடியளவான பிளாஸ்டிக் எரிக்கப்படுகிறது அல்லது புதைக்கப்படுகிறது.
  3. கொட்டப்படும் குப்பைகளால் ஏற்படும் நோய்களால், ஆண்டுதோறும் ஒரு மில்லியன் மக்கள் உயிரிழக்கிறார்கள். அதாவது, ஒவ்வொரு முப்பது வினாடிக்கும் ஒரு மனிதர், குப்பைகளின் விளைவால் மரணிக்கிறார்.

மேற்சொன்ன தரவுகள், குப்பைகளாக வெளியேற்றப்படும் கழிவுகள், இவ்வளவு பாரதுரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை விளங்கப் போதுமானவை ஆகும்.

கழிவுகள் என்று பொதுப்படையாக நாம் சொன்னாலும், அக்கழிவுகளைப் பிரதானமாக ஐந்து வகையாகப் பிரிக்க முடியும்.

  1. உக்கக் கூடிய, இலகுவில் மீள்சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகள் (உணவுப்பொருள்கள், காகிதங்கள்)
  2. பிளாஸ்டிக் கழிவுகள்
  3. இலத்திரனியல் கழிவுகள்
  4. மருத்துவக் கழிவுகள், மனித உடற்பாகங்கள்
  5. ஆபத்தை விளைவிக்கக்கூடிய கழிவுகள் ( தீப்பிடிக்கக் கூடியவை)

இவற்றில், இலகுவாக உக்கக் கூடியதும், மீள்சுழற்சிக்கு உள்ளாக்கக் கூடியதுமான கழிவுகள், அந்தந்த நாடுகளிலேயே தங்குகின்றன. ஏனைய நான்கு வகைக் கழிவுகளும் ஏதோ ஒரு வழியில், வேறு வேறு நாடுகளை வந்தடைகின்றன.

ஏனெனில், ஏனையவற்றை மீள்சுழற்சிக்கு உட்படுத்துவதோ புதைப்பதோ மிகுந்த பொருட்செலவை ஏற்படுத்தும். இதனால், கடந்த 20 ஆண்டுகளில் இந்தக் கழிவுகள், மிகப்பெரிய வியாபாரமாகி உள்ளன.

கடந்த ஆண்டு, இந்த வியாபாரம் பாரிய மாற்றம் ஒன்றைக் கண்டது. உலகில் அதிகளவான குப்பையை இறக்குமதி செய்யும் நாடான சீனா, கடந்த ஆண்டின் இறுதிப் பகுதியில், பிளாஸ்டிக் குப்பைகளை இறக்குமதி செய்வதைத் தடை செய்தது.

கடந்த வாரம், கம்போடியா 1,600 தொன் கழிவை, அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் திருப்பி அனுப்புவதாக அறிவித்தது.

மே மாதம், பிலிப்பைன்ஸ், 69 கொள்கலன்களில் உள்ள, மீள்சுழற்சிக்கு உள்ளாக்க முடியாத கழிவைக் கனடாவுக்குத் திருப்பி அனுப்பியது.

இதே காலப்பகுதியில், ஸ்பெய்னில் இருந்து வந்த கழிவுகளை, மலேசியா திருப்பி அனுப்பியுள்ளது.

முதன்முதலாக, கழிவுகள் குறித்த அக்கறை, சில மூன்றாம் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ளது; இது வரவேற்கத்தக்கது. ஆனால், இன்று நிறுவனமயப்பட்ட, வியாபாரமாகிவிட்ட கழிவகற்றலைத் தடுக்க, புதிய சட்டங்களும் நடைமுறைகளும் விழிப்புணர்வும் அவசியமாகின்றன.

இலாபவெறி ஒருபுறமும் சுயநலம் மறுபுறமும் கோலோட்சும் மூன்றாமுலக நாடுகளில், பாதிப்பை ஏற்படுத்தும் கழிவுகள் இறக்குமதியாவதைத் தடுப்பது இலகுவானதல்ல.

காரணமும் காரியமும்

1980களில் மேற்குலக நாடுகளின் குப்பைகள், மூன்றாம் உலக நாடுகளில் கொட்டப்படுவதற்கு எதிராகப் பல குரல்கள் எழுந்தன. இதன் விளைவால், ஐக்கிய நாடுகள் சபையில், சில மூன்றாம் உலக நாடுகள் மேற்கொண்ட முயற்சியின் விளைவால், 1989ஆம் ஆண்டு, ‘பாசல் சமவாயம்’ (Basel Convention) உருவாக்கப்பட்டது.

இது பாதிப்புத் தரக்கூடிய குப்பைகளை, எல்லை தாண்டிக் கொண்டு செல்லுதல், அகற்றுதல் தொடர்பிலான சமவாயமாகும். இது கழிவுகளை, எல்லைகளைத் தாண்டிக் கடத்துவது தொடர்பிலான, சில அடிப்படையான விதிகளை உருவாக்கியது. இன்று, மூன்று தசாப்தங்களின் பின்னரும், இந்தப் பட்டயத்தின் வினைத்திறனும் செயலாற்றுகையை கட்டுப்படுத்தும் தன்மையும் கேள்விக்குறியாகவே உள்ளன.

இன்று பேசப்படும் கழிவுகளில் பெரும்பான்மையானவை, பிளாஸ்டிக் கழிவுகள் பற்றியதாகவே இருக்கின்றன. ஏனைய கழிவுகள் குறித்த பார்வை, மிக குறைவானதாகவே இருக்கிறது. அதேவேளை, பிளாஸ்டிக் கழிவுகளின் தீவிரத்தன்மை, மிக ஆழமாகப் பேசப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

மருத்துவக் கருவிகளும் கழிவுகளாக ஏற்றுமதி செய்யப்படும் உடற்பாகங்களும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்த வல்லவை. இவை, பெரும்பாலும் மீள்சுழற்சிக்கு உள்ளாக்கப்பட இயலாத கழிவுகளாகும். இவற்றை, எரிக்கவோ புதைக்கவோ இயலாத அளவு,மோசமான சுகாதார, சூழலியல் பாதிப்புகளைக் கொண்டவை.

இதனால் தான், இத்தகைய கழிவுகளை மேற்குலக நாடுகள், இரகசியமாக மூன்றாம் உலக நாடுகளுக்கு அனுப்புகின்றன. அவை, மூன்றாம் உலக நாடுகளில் எரிக்கவும் புதைக்கவும் படுகின்றன. இவை, மிக அவதானமாக, கவனத்தை வேண்டி நிற்கும் கழிவுகளாகும். ஆனால், இக்கழிவுகளின் தீவிரத்தன்மை குறித்துப் பேசப்படுவதில்லை.

அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாரிய சவால்களைக் கொண்டவையாக இவை இருப்பதால், குறித்த உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் கழிவுகள், நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றன; நிலத்தை உபயோகமற்றதாக்குகின்றன. இதிலிருந்து வெளியாகும் மருத்துவ, உடலியல் பாகங்கள் சுற்றுச்சூழலையும் சுகாதாரத்தையும் பாதிக்கின்றன.

இவ்வாறான கழிவுகளின் பாதிப்புகள், மிக நீண்ட காலத்துக்கு இருக்கும். இந்தக் கழிவுகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், மிகப்பெரிய இலாபத்தைப் பெறுகின்றன. அவர்களது இலாபவெறிக்கு எமது மண்ணும் மக்களும் பலியாகிறார்கள். இது குறித்த, பரந்த உரையாடலும் விழிப்புணர்வுமே, இன்றைய அவசியத் தேவை ஆகும். .

மட்டு. மாவட்டத்தில் உருவாகும் மிகப் பெரும் நீர்ப்பாசனக் குளம்

விளக்கம் தருகிறார்
திட்டப் பணிப்பாளர்
எந்திரி கே.சிவபாலசுந்தரம்

மட்டக்களப்பு மாவட்டம் விவசாயத்திற்குப் பெயர் பெற்றது. சுமாா் 90,000 ஏக்கர் வயல்கள் நெற்செய்கைக்கு மட்டும் உள்வாங்கப்பட்டுள்ளன. 27 பாரிய, மத்தியதர, குளங்கள் நீர்ப்பாசனத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இதனை விட 487 சிறுகுளங்கள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.